01.யோக வாழ்க்கை விளக்கம் V
யோக வாழ்க்கை விளக்கம் V கர்மயோகி
811) சட்டத்தால் (law or rule) நியாயத்தை வழங்க முடியாது. அவற்றால் அநியாயத்தைத் தடுக்க முடியும். அவற்றாலும் நியாயம் வழங்க முடியும். அதற்குச் சட்டத்தின் பண்பு,
நேர்மை, தெளிவு, நியாய உணர்வு தேவை.
நியாயத்தை நிச்சயமாக வழங்க முடியாத சட்டம், அநியாயத்தை நிச்சயமாகத் தடுக்கும்.
நியாயம் வழங்கும் சட்டம்.
குற்றம் நடந்தால் நாம் கூப்பிடாவிட்டாலும் போலீஸ் வரும். நம் உரிமை பறிபோனால் கோர்ட் வந்து நியாயம் வழங்காது. நாமே போனால் நியாயம் கிடைக்கும். என்ன நடந்தது என்று கோர்ட் அறிய முயலாது. எதை நிரூபிக்க முடியுமோ அதையே கோர்ட் கருதும்.சாட்சி, எழுத்து, கோர்ட்டில் நிற்கும். எதிரி பொய் சொன்னால், சாட்சியில்லாவிட்டால், கோர்ட் கேட்டுக்கொள்ளாது. நியாயம் வழங்குவதைவிட அநியாயத்தைத் தடுப்பதே கோர்ட் கடமை.பெரும் பணம் கடன் வாங்கியது தெரிகிறது. பிராமிசரி நோட்டிருக்கிறது. ஆனால் காலாவதியாகிவிட்டது என்றால் கோர்ட் தலையிட உரிமையில்லை. நியாயம் தெரிந்தாலும், வலியுறுத்தும் உரிமை கோர்ட்டுக்குக் கிடையாது. ஆனால் பண்பு, நேர்மை, தெளிவு,நியாய உணர்வு இருந்தால், கோர்ட்டும் நியாயம் வழங்க முடியும்.
. அன்பில்லாத பையன் பெற்றோரைக் காப்பாற்ற சட்டமில்லை.
. கோர்ட் சட்டத்திலுள்ளதை நிறைவேற்றும்.
. தர்மத்தைக் காக்கும் ஸ்தாபனமில்லை கோர்ட்.
ஆனால் சில இடங்களில் ஜட்ஜுக்கு discretionசொந்த முடிவெடுக்கும் உரிமையுண்டு. அந்த இடங்களில் ஜட்ஜ் நியாய மனப்பான்மையுள்ளவரானால், சட்டத்திலில்லாத நியாயத்தை வழங்க முடியும். அந்த உரிமையை ஜட்ஜ் பாராட்டினால் கோர்ட் சட்டமன்றமாக இல்லாமல் நியாயமன்றமாகும். அதுபோன்று ஜட்ஜ் உயர்ந்தவராக இருந்தால், அன்னை அந்நியாய உணர்வுமூலம் சட்டத்திற்குத் தேவையான தஸ்தாவேஜை எங்கிருந்தாவது உற்பத்தி செய்வார். ஜட்ஜுக்கு அதில்லாவிட்டாலும், பக்தருக்கு அது இருந்தால்,அன்னையின் நியாயம் சட்டத்திற்குத் தேவையான evidence நிரூபணமாகப் புறப்படுவதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
****
812) உடல் பழக்கத்தை வலியுறுத்தாவிட்டால், உணர்வு ஆசையை விட முன்வந்தால், மனம் அன்னை முடிவை ஏற்றால் ஆத்ம சமர்ப்பணம் முடியும்.
பழக்கமும் ஆசையும் போய் அன்னை முடிவு வருவது சமர்ப்பணம்.
சமர்ப்பணம் நினைவுக்கு வருமுன் கை எழுத ஆரம்பிக்கிறது. வாய் பேச ஆரம்பிக்கும். உடல் பழக்கத்திற்கு உட்பட்டது. வாய் ஆசையை நிறைவேற்றும். இவையிரண்டும் விலகினால், சமர்ப்பணம் செய்ய முடியும். விலகாதவரை சமர்ப்பணமில்லை. ஆயுள் முழுவதும் செய்யும் முயற்சிக்கும் பலன் பெறுவது கடினம்.
****
813) பெரியவர்களுடைய குறையைக் காணுதல் முடியும் என்றாலும் எவரும் அதில் ஈடுபடுவதில்லை. சிறிய மனிதனின் நிறைவைக் காண பெரிய மனதுடைய
மனிதரால் மட்டுமே முடியும்.
சிறியதன் நிறைவை பெரியதே காணும்.
பெரியவர்கள் குறையைப் பொதுவாகப் பொருட்படுத்துவது இல்லை. சிறியவனின் நிறைவு கண்ணில்படுவதில்லை. சிறிய மனிதனின் திறமை, பண்பு, நல்லெண்ணம், உயர்வு ஆகியவற்றைக் காண மனம் பரந்ததாக இருக்கவேண்டும். பெரியதன் கண்ணில் பெரியது படும்.
****
814) பெரியதும், சிறியதும் ஆதியில் ஒன்றே என்றறிவது ஆன்மீகத் திருஷ்டி. நடைமுறையிலும் அவை ஒன்றே என்று பூரணயோகம் காண்கிறது.
ஆதியில் ஒன்றானவை, நடைமுறையிலும் ஒன்றே.
பெரியது என்பது ஆண்டவன், பிரம்மம், சத்புருஷன், பரமாத்மா எனப்படுவது. சிறியது என்பது ஒரு செயல். சட்டை தைப்பது, சுவர் கட்டுவது போன்றவை. இவையிரண்டும் எப்படி ஒன்றாகும்?
பெரியது சிருஷ்டியில் முனைந்து சிறியதானதால் பெரியதே சிறியது என்றறிகிறோம். நாட்டில் மாவீரன், தலைவன், மேதை, அவதாரம் ஆகியவர் போற்றப்படுகிறார்கள். அனைவரும் குழந்தையாய்ப் பிறந்தவர்களே. அவர்களுள் பலர் எளிய வாழ்வை வாழ்ந்தவர்கள். இந்த ஜன்மத்தில் அவர்கள் மேதையாகவோ, அவதாரமாகவோ ஆகவில்லை.
அவதாரமாகப் பிறந்து அவதாரமாக அவர்கள் வளர்ந்தார்கள்.
அன்று அவர்கள் அம்சம் நமக்குப் புரியவில்லை. இன்று புரிகிறது. அவர்கள் என்றும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் சிப் என்பது மணலிலிருந்து செய்யப்படுகிறது. மருந்துகள் கரி, பெட்ரோலிருந்து செய்யப்படுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மரம், செடி, கொடிகள் மக்கி கரியாயிற்று. மரம், செடி, கொடி மண்ணிலிருந்து வந்தது. மண் என்பது "ஜடம்'' Matter எனப்படும். ஜடம் எப்படி ஏற்பட்டது? மனம் புலன்வழி ஜடத்தை உற்பத்தி செய்தது. ஜடமாக நாம் காண்பது ஆன்மா. ஆன்மா சத்புருஷனுடைய அகம். கம்ப்யூட்டர் சிப் ஆதியில் சத்புருஷன் பெரியதாகும்.
. இன்றைய தலைவன் அன்றைய குழந்தை, அன்று தெருவில் சுற்றிய அனாதை.
. அன்றைய பிரதமர் இன்றைய M.P., வெறும் அரசியல்வாதி. சாதாரண எளிய மனிதன்.
. இன்றைய செல்வந்த நாடான அமெரிக்கா அன்றைய காடு.
. அன்று பெருநகரமாக இருந்த மொகன்ஜோதாரா இன்று பாழடைந்த மண் சுவர். .
அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இன்று வெறும் இங்கிலாந்து.
. ஏற்றம், தாழ்வு நாம் காண்பது.
. பரமாத்மா ஜீவாத்மாவாகி அகந்தையாயிற்று.
. அகந்தை பரிணாமத்தால் பரமாத்மாவாகிறது.
. பிரம்மம் சிருஷ்டியில் ஜடமாகியதால் ஜடம் பிரம்மமாகும் - சிறியது பெரியதாகும்.
. ஒரு ஜென்மத்தில் மடையன் அடுத்த ஜன்மத்தில் மேதையாகிறான்.
. மேதை வரும் பிறப்புகளில் மடையனாக விருப்பப்படுவான்.
. பெரியதும், சிறியதும் ஆதியில் ஒன்றே.
****
தொடரும்.....
ஜீவிய மணி
தானே செய்ய அறிவு போதும்.
உலகுக்கு அளிக்க ஞானம் தேவை.
- Login to post comments