Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

‘பக்தியும், ஆர்வமும், நம்பிக்கையும் உள்ள எவரும் ஸ்ரீ அன்னையின் அருளையும், பகவான் ஸ்ரீ அரவிந்தரின் அழுத்தமான அமைதியையும் எங்கும், எப்போதும் தடையின்றிப் பெறலாம்’ என்பது அன்னை நமக்களித்த வரம். அது நாம் கேட்காமல் பெற்ற வரம். நம்மால் கேட்கத் தெரியாத வரம்.

வேலை நிமித்தம் குடும்பத்துடன் தில்லியில் வசிக்கும் அன்பர்கள், குறிப்பிட்ட தினங்களில் ஒன்றாகக் கூடி தியானம் செய்வது வழக்கம். அவர்களில் கல்யாணி மாமியும் ஒருவர். பவித்திரமான பக்தியும், பொறுமையும் நம்பிக்கையும் கொண்டவர்.

தியானக் கூடல் நடத்திவந்த அன்பரின் கணவருக்குப் பணியிட மாற்றம் வரவே, தியானக் கூடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என விரும்பினர் மற்ற அன்பர்கள். எங்குக் கூடலாம் எனக் கேள்வி வந்தபொழுது கல்யாணி மாமி தானே முன்வந்து தம் இல்லத்தில் தியானக் கூடலைத் தொடரலாம் என மனமுவந்து கூறினார். மாற்றல் வந்த அன்பருக்கும் கூடல் தொடருவதில் சந்தோஷம்.

தற்செயலாக அன்னையைத் தரிசித்தவர்களோ அல்லது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களோ, யாராக இருப்பினும், அன்னையைப் பக்தி நம்பிக்கையுடன் வாழ்வில் ஏற்றவர் அனைவரும் அவருடைய அருளைப் பெறுகின்றனர்; அவர்களுடைய துயர்கள் தாமாகவே தீர்கின்றன என்பவை அன்பர்களது அனுபவங்கள். அப்படி இந்த மாமி வாழ்விலும் நிகழ்ந்த அன்னையின் அனுக்கிரகங்கள் பல.

இவரது பெண்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தம் மூன்று பெண்களில் மூத்த பெண் தவிர மற்ற இருவருக்கும் குழந்தைச் செல்வங்கள் உண்டு. இவரது முக்கியப் பிரார்த்தனை நாற்பதைத் தாண்டிய தம் மூத்த பெண்ணிற்குக் குழந்தைச் செல்வம் வேண்டும் என்பது. பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் வேண்டி வந்தார்.

ஆச்சரியமாக, வயதைத் தாண்டிய காரணத்தை விலக்கி, ஆனந்த அருட்கொடையாக ஸ்ரீ அன்னை அருளிய குழந்தைச் செல்வம், தியானக் கூடலை அவரது இல்லத்தில் தொடர்ந்த அதே மாதம் அவரது பெண் வயிற்றில் உதித்தது. அன்பரின் அழைப்பிற்கு அன்னை சூட்சுமமாக வந்து, தம் ஆன்மிகச் சக்தியால் அன்பரின் பிரச்சனைகளுக்கு விடிவை நிச்சயம் ஏற்படுத்துவார் என்பது இவரது வாழ்வில் நிதர்சனமாகியது. கவலை மறைந்து குடும்பம் சந்தோஷத்தால் பூரித்தது.

பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதனை செய்த டாக்டர் இவருக்கு சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும், வேறு வழியில்லை என்று கூறி விட்டார். மாமி தன் பிரார்த்தனையைத் தொடங்கினார். இவர் அன்னையை இங்கு தீவிரமாக அழைக்க, தியேட்டரில் ஆப்பரேஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்தன. ஆப்பரேஷன் நடக்கவிருக்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக, அதிசயிக்கத்தக்க வகையில், டாக்டர்களும் நம்ப முடியாத அளவில், நார்மல் பிரசவம் நடந்தது. நல்ல செய்தியைக் குடும்பத்திற்குக் கூற வந்த டாக்டர்க்கு குடும்பத்தார் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். ‘நன்றி கூற வேண்டியது எனக்கல்ல, பெண்ணின் அம்மாவுக்கு’ என்ற டாக்டர், ‘இது பிரார்த்தனையால் மட்டுமே நடந்த பிரசவம், நார்மலாக நடக்க எந்த அறிகுறியும் இல்லாத போது திடீரென்று ஆப்பரேஷன் தேவைப்படாத சூழல் எழுந்ததும், நல்ல படியாக நார்மல் டெலிவரி நடந்ததும் மருத்துவர்களான எங்களுக்கே ஒரு அதிசயம், இந்த அம்மாவின் பிரார்த்தனையே இதை நடத்தியது’ எனக் கூறிச் சென்றார்.

மேலும் பல அனுபவங்கள், டாக்டர்கள் சொல்வதை அன்னையிடம் சமர்ப்பித்து, அன்னையை மட்டுமே நம்பிச் செய்த பிரார்த்தனையின் விளைவை மற்றுமொரு விஷயத்தில் கண்ணுற்றது மற்றும் நாமறியாமல் அன்னை நமக்குச் செய்பவையாக ஸ்ரீ அன்னையின் கவசப் போர்வை முதலான அனுபவங்களை அவரது மொழியிலேயே அறிய நாமும் ஆவலுடன் காத்திருப்போம்.

***********



book | by Dr. Radut