Skip to Content

12. அன்னை இலக்கியம் - மீன்கொடி

அன்னை இலக்கியம்

மீன்கொடி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

8. பெண் பார்த்தல்

மீசை தாத்தாவோடும், கவர்னசத்தையோடும் ஜமுனாவைப் பெண் பார்க்க மதுரைக்குப் போனேன். யசோதா அக்காவிடம் போனில் தகவல் சொல்லி அழைத்தேன். அண்ணார்களும், அண்ணிகளும், அக்காவும் வரவில்லை. வர முடியவில்லை. வேறு முக்கிய வேலைகள் குறுக்கிடாதிருந்தால் நிச்சயம் வந்திருப்பார்கள். நான் அதைச் சொன்னபோது, ஊன்றுகோலால் தரையை பலமாகத் தட்டி ‘முட்டாள்’ என்று மீசை தாத்தா உறுமினார். வேறொன்றும் சொல்லவில்லை. கோபம் வந்தால் மீசை தாத்தா ஊன்றுகோலைத் தட்டுவார் அல்லது உருட்டுவார்.

‘நல்ல காரியத்திற்கு மூன்று பேர் போவது சரியில்லை’ என்று கவர்னசத்தை சொன்னார்.

‘நீ ஒருத்தியே நான்கைந்து விஷமிகளுக்குச் சமம்’ என்று கூறிவிட்டார் மீசை தாத்தா.

மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்குக் கோபுர வாசலுக்கு அருகே இருந்த நெரிசலான பல குறுகலான தெருக்கள் ஒன்றில் மதுரை மாமாவின் வீடு இருந்தது. சிறிய வளையல் கடை. அதனருகே சம்பந்தமில்லாமல் பத்திரத்தாள் விற்கும் கடை. அதனெதிரே ஓடு வேய்ந்த, திண்ணை வைத்த பழங்காலத்துச் சிறிய வீடு. நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது மாமாவும், அவர் மகன் சுந்தரமும் வாசலில் எங்களை வரவேற்கத் தயாராக நின்று கொண்டிருந்தனர். தெருவும், வீடும் எனக்கு மிகவும் பரிச்சயமானவை போன்ற உணர்வு எழுந்தது.

விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தோம். சிறிது நேரம் சம்பிரதாயமாக பெரியவர்கள் பேசியபின், ஜமுனா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து தந்தாள். தாத்தாவிற்கு நமஸ்காரம் செய்தாள். பெண்களோடு உட்கார்ந்திருந்த கவர்னசத்தையைப் பார்த்து புன்னகைத்தாள். அப்@பாது ஓரிரு கணங்கள் அவள் முகத்தைப் பார்த்தேன்.

சில நிமிடங்கள் எங்கள் எதிரே உட்கார்ந்திருந்து விட்டு உள்ளே போய் விட்டாள். நான் அவள் முகத்தைப் பார்க்கத் துணியவில்லை. காபி தரும் போது மருதாணி போட்ட கை விரல்களையும், கால் விரல்களையும் மட்டுமே பார்த்தேன்.

‘பரமா, நீ பெண்ணோடு தனியாக ஏதாவது பேசிவிட்டு வா’ என்றார் மீசை தாத்தா.

நான் தயங்கினேன். ‘தம்பி வெட்கப்படுகிறது’ என்று ஒரு பெண் குரல் கூற, பல பெண்கள் சிரிக்கும் ஒலி காதில் விழுந்தது. நான் எவரையும் நிமிர்ந்து பார்க்கத் துணியவில்லை.

‘உள்ளே வாருங்கள் தம்பி’ என்று மதுரை அத்தை அழைத்தார். உள்ளறைக்கு அழைத்துச் சென்று என்னை விட்டுவிட்டு அவர் மெல்ல அசைந்து வெளியே போய் விட்டார்.

அந்த சிறிய அறை தெருவோரமாக இருந்ததால் ஜன்னல் கதவு மூடப்பட்டு சூரிய வெளிச்சம் இல்லாதிருந்தது. ஓடுகளுக்கிடையே போடப்பட்டிருந்த பல மரச்சட்டங்களில் ஒன்றில் மாட்டப்பட்டிருந்த நீண்ட கம்பியைப் பிடித்து தொங்கியபடி, வயதாகி நிறம் மாறி விட்டிருந்த மின்விசிறி சிரமப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தது. உலகில் முதன்முதலில் மின்விசிறி செய்யப்பட்டபோது வாங்கியதாக இருக்கக் கூடும்.

இன்னொரு மரச்சட்டமொன்றில் தொங்கிய நீண்ட வயரின் முனையில் மஞ்சள் நிற முட்டை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சத்தின் அடியில் தரையில் விரித்த பழைய பாயின் மீது ஜமுனா அமர்ந்திருந்தாள். பொன்னிற பார்டர் வைத்த மயில் வண்ண சேலை அணிந்து, அதே நிறத்தில் முழங்கை வரை நீண்ட ரவிக்கை அணிந்திருந்தாள். நெருக்கமாக தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரத்தை சூடியிருந்தாள். ஒரே ஒரு சிறிய தங்கச் சங்கிலியும், கைகளில் மெல்லிய தங்க வளையல்களும் அணிந்திருந்தாள்.

என்னைப் பார்த்ததும் எழுந்திருக்க முயன்றாள். பதற்றத்துடன் கைகளைக் கூப்பி ‘வணக்கம், எழுந்திருக்க வேண்டாம்.

உட்காருங்கள்’ என்று கூறி விட்டு நான் பாயை விட்டுத் தள்ளி தரையில் உட்காரப் போனபோது, புன்னகைத்துவிட்டு ‘பாயில் உட்காரலாமே’ என்றாள். பாயின் ஓரத்தில் உட்கார்ந்தேன்.

‘வயதில் பெரியவர்கள் சின்னவர்களை வாழ்த்துவார்கள். வணக்கம் சொல்ல மாட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு வணக்கம் சொல்ல வேண்டும் போலிருந்தது’ என்றேன்.

‘வயதானவளாகத் தெரிகிறேனா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் ஜமுனா.

அவளது சம்பிரதாயமற்ற இயல்பான பேச்சால் என் பதற்றம் அடங்கி நானும் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

‘அப்படியில்லை’ என்று கூறி நிறுத்தினேன். சொல்லத் தோன்றியதை ஜமுனாவிடம் சொல்வது முறையாக இருக்குமா என்ற குழப்பத்தில் பேசாதிருந்தேன்.

‘சொல்ல நினைப்பதை சொல்லி விடலாமே. நான் மட்டும்தானே இருக்கிறேன்?’ என்றாள் ஜமுனா.

‘கோவிலில் மீனாட்சி நின்று கொண்டிருக்கிறார். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்’ என்றேன்.

‘மீனாட்சிதான் சொக்கநாதருக்கு சொக்குபொடி போடுவாள். இங்கே தலைகீழாக இருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘அறைக்குள் நுழைந்து உங்களைப் பார்த்ததுமே எனக்கு அப்படித்தான் தோன்றியது. இந்த இருட்டான அறையில், மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில், அலங்காரத்துடன் நீங்கள் உட்கார்ந்திருப்பது, இருண்ட கர்ப்பக்கிருகத்தில் அமர்ந்திருக்கும் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது போலிருந்தது’ என்றேன்.

ஒரு பெண்ணிடம் அத்தனை வார்த்தைகள் நான் தொடர்ந்து பேசியது என் வாழ்வில் அதுவே முதல் முறை.

ஜமுனாவின் கண்கள் கனிந்தன. பதிலெதுவும் கூறவில்லை.

‘பல காலமாக யோகம் செய்பவருக்கு, அவர் எதிர்பார்க்காத நேரத்தில் நெஞ்சுக் குகையில் பொன்னொளியோடு ஆன்மாவின் தரிசனம் கிடைத்தது போலிருந்தது என்றால் மேலும் பொருத்தமாக இருக்கும்’ என்றேன்.

‘கதை, காவியம், தத்துவம் என்று கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தராதரம் தெரியாமல் வாசிப்பீர்கள் என்று கேள்விப்பட்டேன்’ என்றாள் ஜமுனா.

‘யார் சொன்னது?’ என்றேன்.

‘பெண் கேட்டால் வரனைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் உடனே கொடுத்து விடுவார்களா? விசாரித்தவர்கள் உங்களைப் பற்றி பல விஷயங்கள் சொன்னார்கள்’ என்றாள் ஜமுனா.

‘நல்லதாக ஒரு வார்த்தை இருக்காதே’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா.

‘உங்களை எத்தனையோ காலமாகத் தெரியும் என்ற உணர்வு தோன்றிக் கொண்டே இருக்கிறது’ என்றேன்.

‘எனக்கும் எட்டு வருஷங்களாக அப்படித்தான் தோன்றிக் கொண்டேயிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘அதென்ன கணக்கு? இப்போதுதானே என்னை பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘நினைவில்லையா? எட்டு வருஷங்களுக்கு முன் நிஜமாகவே நாம் ஒரு முறை சந்தித்தோம். அப்போது எனக்கு பதினைந்து வயது’ என்றாள் ஜமுனா.

‘அப்படியா?’ என்றேன்.

‘நீங்களும், உங்கள் மூத்தவர்களும் கொடைக்கானலுக்கு போகும் வழியில் மதுரைக்கு வந்தீர்கள். மீசை தாத்தா எங்கள் வீட்டில் தரச் சொல்லி ஒரு பெரிய ஜவுளி மூட்டையை கொடுத்தனுப்பி இருந்தார்’ என்றாள் ஜமுனா.

‘எந்த ஊருக்கு நான் போனாலும் மீசை தாத்தா நாலைந்து வீடுகளுக்கு இப்படி ஏதாவது கொடுத்தனுப்புவார். யாருக்கு, எப்போது, எதைக் கொடுத்தேன் என்பது நினைவில் இல்லை’ என்றேன்.

‘கொடுத்தவர் மறக்கலாம். வாங்கியவள் மறக்கலாமா? நீங்கள் மட்டும் பைகளை தூக்கிக் கொண்டு மத்தியான வெயிலில் வந்தீர்கள். வேர்வையில் நனைந்து போன முகம், கலைந்த தலை, வெள்ளையில் மெல்லிய நீலக் கட்டங்கள் போட்ட கசங்கிய சட்டை, சரியாக இஸ்திரி போடாத சாம்பல் நிற கால் சட்டை, ரப்பர் செருப்பு. உங்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அம்மா ஊரில் இல்லை. அப்பா வீட்டில் இல்லை. அதனால் நான்தான் உங்களிடமிருந்து பைகளை வாங்கிக் கொண்டேன். காபியும் போட்டு தந்தேன்’ என்றாள் ஜமுனா.

‘இப்போது மங்கலாக நினைவிற்கு வருகிறது. ஆனால் முகம் தெளிவாக நினைவில் இல்லை’ என்றேன்.

‘ நிமிர்ந்து என் முகத்தை ஒரு முறையாவது பார்த்திருந்தால்தானே நினைவில் நிற்கும்?’ என்றாள் ஜமுனா.

‘அன்று நான் என்ன பேசினேன்?’ என்று கேட்டேன்.

‘காபி நன்றாக இருந்தது என்று முணுமுணுத்ததைத் தவிர பேசவே தெரியாதவர் போல நடந்து கொண்டீர்கள்’ என்றாள் ஜமுனா.

‘அறிமுகமில்லாத இளவயது பெண்ணிடம் எப்படிப் பேசுவது?’ என்றேன்.

‘இப்போது மட்டும் எப்படி பேச்சு வருகிறது?’ என்றாள் ஜமுனா.

‘நமக்குத்தான் எட்டு வருஷங்களுக்கு முன்பே அறிமுகமாகி விட்டதே!’ என்றேன்.

‘பேச்சில் சாமர்த்தியசாலிதான். இன்றுகூட நான் காபி போட்டுத் தந்தேன். நீங்கள் கொண்டு வந்தது என்னவோ!’ என்றாள்.

‘என்னையே கொண்டு வந்திருக்கிறேனே’ என்றேன்.

‘புதுமைப்பித்தனின் “கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்’’ கதையில் வரும் பழைய வசனம். புதிதாக ஒன்றும் தோன்றவில்லையா!’ என்றாள் ஜமுனா.

‘நிறைய வாசிப்பீர்களோ?’ என்று கேட்டேன்.

‘எப்போதாவது நூலகத்திற்குப் போவேன். நூலகத்தையே வாசிக்க வேண்டும் என்று தோன்றும். எதையாவது புரட்டிப் பார்த்து விட்டு வருவேன்’ என்றாள் ஜமுனா.

‘ஒவ்வொரு தடவை வரும்போதும் உங்களுக்கு வேலை வைத்து சிரமம் தருகிறேன்’ என்றேன்.

‘சிரமமே இல்லை. ஏதோ நான் உலகத்திற்கே காபி போட்டு கொடுத்தது போல் பேசுகிறீர்கள்! நமக்குப் பிடித்தவர்களுக்கு பிடித்ததைச் செய்வதில்தானே சந்தோஷம் கிடைக்கிறது? எனக்கு பதினைந்து வயதாகும்போதே அம்மா வெளியூர் போய்விட்டார். அப்போதிருந்து படித்துக் கொண்டே எல்லா வீட்டு வேலைகளும் செய்து பழகிவிட்டேன். எந்த வேலையும் எனக்கு சிரமமில்லை. சந்தோஷமாக வீட்டையும், குடும்பத்தை யும் கவனித்துக் கொண்டு வருகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘இனிமேல் என்னையும், நம் வீட்டையும் பார்த்துக் கொள்ளுங்களேன்’ என்றேன்.

‘அதற்கென்ன?’ என்று விழிகள் விரிய சொன்ன ஜமுனா சுதாரித்துக் கொண்டு ‘இதை என்னிடமா சொல்வது? வெளியே போய் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்’ என்றாள்.

எழ முயற்சித்தேன். ‘என்ன அவசரமோ!’ என்றாள் ஜமுனா.

‘சரி’ என்று கூறி உட்கார்ந்து கொண்டேன்.

‘இப்படி பிள்ளையார் போல உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தால், வெளியே இருப்பவர்கள் கேலி செய்து சிரிப்பார்கள்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம்’ என்று கூறி எழுந்தேன். ‘இன்னொரு காபி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

‘அடிக்கடி காபி சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதில்லை. பழச்சாறு தருகிறேன். போகும் வழியிலும் கண்ட இடத்தில், கண்ட உணவை சாப்பிட வேண்டாம்’ என்று கூறியபடி ஜமுனாவும் எழுந்தாள்.

‘வருகிறேன்’ என்று கூறி கை கூப்பினேன்.

‘இப்போது நான் நின்ற கோல மீனாட்சியா!’ என்றாள் ஜமுனா.

நான் சிரித்துக் கொண்டு அறைவாயிலை நோக்கி நடக்கும்போது, அவள் தன் கைகளை லேசாக அசைத்ததால் எழுந்த வளையோசை கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

‘காத்துக் கொண்டேயிருப்பேன்’ என்றாள் ஜமுனா. சடங்கு, சம்பிரதாய ரூபங்களில் சமூகத் தடைகள் இல்லாவிட்டால் அப்போதே என்னுடன் வந்திருப்பாள் என்று தோன்றியது.

‘காதலடி நீயெனக்கு, காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; எல்லையற்ற பேரழகே!

எங்கும் நிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே!’ என்று தோன்றியது.

அவளது விழிவிளக்குகள் விரித்த பேரொளிப்பாதையின் வழியே அறையை விட்டு வெளியே நடந்தேன். அது ஆரம்பம்தான் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

மீசை தாத்தா எல்லோர் முன்னிலையிலும் என்னிடம் ஜமுனாவைப் பற்றி ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தேன். அவரோ ‘சென்னைக்குப் போய் கடிதம் எழுதுகிறேன்’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆட்டோவில் திரும்பும்போது ‘அலங்காரம் விசேஷமாக இல்லை. சின்ன சங்கிலி மட்டும்தான் போட்டிருந்தாள்’ என்றார் கவர்னசத்தை.

‘வசதி குறைவான நல்ல குடும்பம்’ என்றார் மீசை தாத்தா.

‘அக்கம்பக்கத்தில் ஒரு நாளைக்கு இரவல் வாங்கிப் போட்டால் என்ன தப்பு? பார்க்க நன்றாக இருக்குமே. பெண்ணின் அம்மாவும் அதேதான் சொன்னாளாம். ஜமுனாதான் ‘கடன் வேண்டாம், என்னிடம் இருப்பதை மட்டும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று சொல்லிவிட்டாளாம். பொதுவாக இந்த காலத்துப் பெண்களுக்கு வாய் அதிகம்தான். இவள் எல்லோரையும் மிஞ்சக் கூடிய அதிகப் பிரசங்கி. பெரியவர்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்யத் தோன்றியதா?’ என்றார் கவர்னசத்தை.

மீசை தாத்தா ஊன்றுகோலை கைகளில் உருட்டினார். அவருக்குக் கோபம் வரத் தொடங்கிவிட்டது. ‘ஜமுனா எட்டு, பத்து வருஷமாக குடும்ப நிர்வாகம் செய்கிறாள். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாள்’ என்றார்.

‘அதை விடுங்கள். அழகி என்றார்கள். முகமும், உடம்பும் லட்சணமாக இருந்து என்ன பிரயோஜனம்? சிவப்பில்லை. மாநிறமாகத்தான் இருக்கிறாள்’ என்றார் கவர்னசத்தை.

தாத்தா பதில் சொல்லாமல் ஊன்றுகோலை மேலும் வேகமாக உருட்டினார்.

சென்னை திரும்பும்போது, காவிரியில் நீரோடத் தொடங்கியிருந்தது. ‘இன்றுதான் நீர் திறந்து விட்டிருக்கிறான் போலிருக்கிறது’ என்றார்.

தொலைவில் மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் சிறிய புள்ளியாகத் தெரிந்தது. ‘இப்படி பிள்ளையார் போல உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தால்?’ என்று ஜமுனா கேட்பது போலிருந்தது.

காவிரி மேம்பாலத்தில் ரயில் வேகமாக ஓடியபோது எங்கள் எதிரே உட்கார்ந்திருந்த பெரியவர் பையிலிருந்து எடுத்த சில்லறைக் காசுகளை ‘தாயே, எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும்’ என்று கூறிவிட்டு நதி நீரில் வீசி எறிந்தார்.

‘ஏதோ சாஸ்திரத்திற்கு பத்து காசு போட்டால் போதாதோ! ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று கேள்விப்பட்டதில்லையா? வயிற்றெரிச்சலாக இருக்கிறதே!’ என்றார் கவர்னசத்தை.

‘எனக்கு ஜமுனாவைப் பிடித்திருக்கிறது’ என்றேன்.

‘அது பிரச்சனையில்லை. பெண்ணுக்கு உன்னை பிடித்திருக்கிறதா என்பது தெரிய வேண்டும்’ என்ற தாத்தா நரைத்த மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு சிரித்தார்.

மீசை தாத்தா அபூர்வமாகத்தான் சிரிப்பார்.

***

9. நிச்சயதார்த்தம்

சென்னை திரும்பியபின் புருஷண்ணார் மட்டும் என்னிடம் ‘என்னடா, முடித்தாகி விட்டதா?’ என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டார். மதுவண்ணார் எதுவும் கேட்கவில்லை. அண்ணார்கள் தாத்தாவிடம் எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் எவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ஜவுளி அண்ணி ‘பெண் பிடிக்கவில்லை என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டாயா?’ என்று கேட்டார்.

‘பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டேன்’ என்றேன்.

‘கிறுக்குப் பிள்ளையே! அப்படி ஏன் சொன்னாய்?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘பிடித்திருக்கிறதே’ என்றேன்.

‘வாழ்க்கையில் முதல் தடவையாக இளவயதுப் பெண்ணைப் பார்த்ததில் புத்தி கெட்டுப் போய் விட்டான். தாத்தா வாக்கு கொடுத்து விட்டாரா?’ என்றார் காபி அண்ணி.

‘இன்னமும் இல்லை. பெண்ணுக்கு என்னைப் பிடிக்க வேண்டுமாமே! தாத்தா சொன்னார்’ என்றேன்.

‘பரவாயில்லையே! தாத்தா பெண்கள் மனதைக் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாரே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘உங்கள் எல்லோரிடமும் தாத்தா அன்பாகத்தானே இருக்கிறார்’ என்றேன்.

‘எங்களிடம் அன்பாக இருந்து என்ன பிரயோஜனம்?’ என்றார் காபி அண்ணி.

‘பெண் என்ன சேலை கட்டியிருந்தாள்?’ என்று ஜவுளி அண்ணி.

‘சரியாக கவனிக்கவில்லை’ என்றேன்.

‘சேலையையே கவனிக்கவில்லை. நகையைத்தானா பார்த்திருக்கப் போகிறாய்?’ என்று சொன்னார் ஜவுளி அண்ணி.

‘முகத்தையாவது பார்த்தாயா?’ என்றார் காபி அண்ணி.

‘நல்ல பெண் அண்ணி’ என்றேன்.

‘எதை வைத்துச் சொல்கிறாய்?’ என்று கேட்டார் ஜவுளி அண்ணி.

‘பார்த்ததும் பிடித்ததே’ என்றேன்.

‘அது மட்டும் போதுமா?’ என்று கேட்டார் காபி அண்ணி.

‘எனக்கு போதும்தான். மேலும் தனியாகப் பேசியும் பார்த்தேனே’ என்றேன்.

‘நீயா’ என்று இரண்டு அண்ணிகளும் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

‘தாத்தா பேசச் சொன்னாரே’ என்றேன்.

‘அதுதானே பார்த்தேன்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘தனியாகப் பேசினாயா? விவரமாகச் சொல்’ என்று ஆர்வத்துடன் கேட்டார் காபி அண்ணி.

‘பேசாமல் இருடி. சின்னப் பிள்ளையை கேலி செய்யாதே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நீங்களும் கேட்க மாட்டீர்கள். என்னையும் கேட்க விட மாட்டீர்கள்’ என்று நொடித்துக் கொண்டார் காபி அண்ணி.

மதுரைக்குச் சென்று திரும்பிய மூன்றாவது நாள் தாத்தா எல்லோரையும் தன் அறைக்கு அழைத்தார்.

‘வரும் ஐந்தாம் தேதி பரமனுக்கு கல்யாணம் நடத்தி விடலாம்’ என்றார்.

‘இன்னும் இரண்டு வாரங்களிலா?’ என்றார் ஜவுளி அண்ணி சற்று திகைப்புடன்.

‘இப்போதெல்லாம் நல்ல மண்டபத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும்’ என்றார் புருஷண்ணார்.

‘புதிதாக தென்றல் ஹோட்டல் கட்டியிருக்கிறார்களே.

அதிலிருக்கும் மண்டபத்தை பதிவு செய்து விட்டேன்’ என்றார் தாத்தா.

‘அது மிகவும் சின்ன ஹோட்டல். மண்டபமும் சிறியது.

இருநூறு பேர்களைத்தான் கொள்ளும்’ என்றார் மதுவண்ணார்.

‘நம் சார்பில் நூறு பேர்களைக் கூப்பிட்டால் போதும்’ என்ற தாத்தா புருஷண்ணாருக்கும், மதுவண்ணாருக்கும் ஆளுக்கு பத்து அழைப்பிதழ்களைக் கொடுத்தார். ‘கூட வேண்டுமானால் நீங்கள் அச்சடித்துக் கொள்ளுங்கள்’ என்றார். எதுவும் பேசாமல் அண்ணார்கள் வாங்கிக் கொண்டார்கள்.

‘உனக்கு எத்தனை வேண்டும்? இரண்டுதான் தேவைப்படும் என்று நினைக்கிறேன்’ என்று என்னிடம் சொன்னார் தாத்தா.

தீவிரமாக யோசித்தேன். ‘மூன்று தேவைப்படும்’ என்றேன்.

‘யாரந்த புதிய நண்பன்?’ என்றார் தாத்தா.

‘மாதிரிக்கு எனக்கொன்று வேண்டுமே’ என்றேன்.

‘எங்கள் எல்லோருக்கும் விமரிசையாக கல்யாணம் நடந்தது. பரமனுக்கும் அதே போல நடத்தி விடலாமே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘இவன் படிப்பிற்கும், சம்பாத்தியத்திற்கும் இதுவே அதிகம்’ என்றார் தாத்தா.

வெளியே வந்ததும் ஜவுளி அண்ணி வருத்தப்பட்டார்.

‘தாத்தா வரவர விசித்திரமாக நடந்து கொள்கிறார். கல்யாணம் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை நடப்பது. எதற்குமே கணக்கு பார்க்காதவர் இதற்கு போய் கணக்கு பார்க்கிறார்’ என்றார்.

‘ஒரு வகையில் நல்லதுதான். நம் செலவில் சாப்பிட்டுவிட்டு எதுவும் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டுப் போகிறவர்களுக்காக வீண் செலவு செய்யத் தேவையில்லை’ என்றார் கவர்னசத்தை.

அன்றிரவு என்னை தாத்தா அழைத்தார். ஒட்டப்பட்டிருந்த இரண்டு காகித உறைகளைத் தந்தார். ஒன்றின் மீது மதுரை மாமா பெயரும் மற்றொன்றின் மீது ஜமுனாவின் பெயரும் எழுதப்பட்டிருந்தன.

‘மதுரைக்கு நேரில் போய்க் கொடு’ என்றார். கையில் ஒரு ரயில் டிக்கெட்டையும் சிறிது பணத்தையும் தந்தார்.

***

10. மீண்டும் ஜமுனா

மறுநாள் காலையில் கிளம்பி இரண்டு மணிக்கு மதுரை சென்றடைந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலருகே ஒரு விடுதியில் தங்கினேன். உடனே மாமா வீட்டிற்குப் போக வேண்டும் என்று தோன்றினாலும் ஆறு மணிவரை காத்திருந்தேன்.

என்னிடம் புதிய சாம்பல் நிற கால்சட்டையும், வெள்ளையில் மெல்லிய நீல கட்டங்கள் போட்ட புதிய சட்டையும் இருந்தன. மடிப்பு கலையாமல் அவற்றை அணிந்து கொண்டு, பளபளப்பேற்றப்பட்ட காலணிகளை போட்டுக் கொண்டு மாமா வீட்டிற்குக் கிளம்பினேன்.

கிழக்கு வாசல் கோபுரத்தைக் கடக்கும் போது கூடையில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘இருநூறு பூ கொடு’ என்று கேட்டுக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்தேன்.

யதேச்சையாக பக்கவாட்டில் திரும்பிய ஜமுனா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

நிச்சயமாகி விட்டதால் என்னைப் பார்க்கும் போது வெட்கப்படுவாள். அப்போது பாரதியாரின் நாணிக் கண்புதைத்தல் பாடலைச் சொல்ல வேண்டும் என்ற திட்டத்தோடு வந்த எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. என் வாழ்வில் இதுவரை எந்த திட்டமும் போட்டதில்லை. போட்ட ஒரே திட்டமும் படுதோல்வி அடைந்துவிட்டது.

‘வாருங்கள். மதுரை வந்தது வாத்தியார் வீட்டு மீனாட்சியைப் பார்க்கவா அல்லது சொக்கநாதர் வீட்டு மீனாட்சியைப் பார்க்கவா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘தாத்தா இரண்டு கடிதங்களை நேரில் கொடுத்து விட்டு வரச் சொன்னார்’ என்று கூறி கடிதங்களை ஜமுனாவிடம் கொடுத்தேன். ‘எதற்கு இருநூறு முழம் பூ வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

சிரித்தாள். ‘இந்த ஊரில் எண்ணிக்கை கணக்கு. நம் ஊரில்தான் முழக் கணக்கு. இருநூறு பூக்களை நெருக்கிக் கட்டினால் ஒரு முழம் வரும். தள்ளி கட்டி எட்டு முழமாக்கும் சாமர்த்தியசாலிகளும் உண்டு’ என்றாள் ஜமுனா.

‘இதுவரை நான் பூ வாங்கியதில்லை’ என்றேன்.

‘இனி தினமும் வாங்க வேண்டியிருக்கும். என்னால் ஒரு நாள் கூட மல்லிகை இல்லாமல் இருக்க முடியாது. மதுரையில் வருடம் பூரா மல்லிகை கிடைக்கும்’ என்றாள் ஜமுனா.

‘சென்னையில் சீசனுக்கேற்றாற் போல் பூ கிடைக்கும்’ என்றேன்.

‘பூ வாங்கியதில்லை என்று இப்போது சொல்லவில்லையா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘அண்ணிகள் வாங்குவார்களே’ என்றேன். பின் ‘பதினைந்து வயதிலிருந்து வீட்டு வேலை பார்ப்பது கஷ்டமாக இல்லையா?’ என்று கேட்டேன்.

‘இல்லையே! அவசியத்தை அறிந்து ஆர்வத்தோடு செய்தால் எதுவும் கஷ்டமாக இல்லை’ என்றாள் ஜமுனா.

எதிரே இரண்டு போலீஸ் பெண்கள் சீருடையில் சென்றனர்.

‘பதினைந்து வயதில் என் தோழிகள் சாரணர் பயிற்சிக்குப் போனார்கள். என்னையும் கூப்பிட்டார்கள். யூனிபார்ம் போட்டுக் கொண்டு அவர்கள் போவதைப் பார்த்த போது எனக்கும் ஒரு வினாடி போக வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் அதிகாலையில் பயிற்சிக்குப் போனால் வீட்டு வேலையை யார் பார்ப்பது? இப்படி எப்போதாவது சின்ன ஆசைகள் வந்து உடனே போய்விடும்’ என்றாள் ஜமுனா.

எனக்குத் துக்கமாக இருந்தது.

‘திரும்பி வராத இளமையில் நிறைவேறாத ஆசை இழப்பு என்று சொல்வார்களே?’ என்றேன்.

‘காலத்திற்குக் கட்டுப்படுபவர்கள்தான் இழப்பு, இறப்பு பற்றி பேசி கவலைப்படுவார்கள். நமக்கென்ன?’ என்றாள் ஜமுனா.

‘குழந்தையை வீட்டு வேலை செய்ய வைப்பது தப்பில்லையா? மாமாவும், அத்தையும் எப்படி இதை ஏற்றுக் கொண்டார்கள்?’ என்றேன்.

‘அப்பாவும், அம்மாவும் ‘எந்த வேலையும் செய்யாதே, வேலையாள் வைத்துக் கொள்ளலாம்’ என்றுதான் சொன்னார்கள். என்னை விடுதியில் போய் இருக்கும்படி கூடச் சொன்னார்கள். வீட்டு நிதி நிலைமை எனக்குத் தெரியாதா?’ என்றாள் ஜமுனா.

‘அதெல்லாம் பதினைந்து வயதிலே புரியுமா? எனக்கு இருபத்தைந்து வயதாகியும் பணத்தைப் பற்றி ஒன்றும் புரியவில்லையே! எது எப்படி இருந்தாலும் பதினைந்து வயது விளையாட வேண்டிய வயது’ என்றேன்.

‘நான்தான் பிடிவாதமாக எங்கள் வீட்டுப் பொறுப்பை எடுத்துக் கொண்டேன்’ என்றாள் ஜமுனா.

‘நீங்கள் ரொம்ப பிடிவாதக்காரியோ?’என்று கேட்டேன்.

‘எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ‘என்னால்தான் உன் சின்ன வயது சந்தோஷமெல்லாம் கெட்டுப் போய் விட்டது’ என்று இன்று கூட அம்மா புலம்புவார். இத்தனை வருஷம் அம்மா வீட்டுப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அவர் ஒவ்வொரு நிமிஷமும் எங்களுக்காகத்தான் உழைக்கிறார். விழித்திருக்கும் நேரமெல்லாம் எனக்கும், சுந்தரத்திற்கும் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் நீங்கள் அவருக்கு மாப்பிள்ளையாக அமைந்தீர்களாம்’ என்று கூறிச் சிரித்தாள் ஜமுனா. பின் ‘கோவிலுக்குப் போக வேண்டுமா?’ என்று கேட்டாள்.

‘நீங்கள் சொன்னால் போவோம்’ என்றேன்.

‘போவதில்லையா?’ என்றாள் ஜமுனா.

‘பூஜை செய்யப் போவதில்லை. ஆனால் புராதன கட்டடம் எதைப் பார்த்தாலும் உள்ளே நுழைந்து விடுவேன். கோவில், கோபுரங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் இவையெல்லாமே ஒரு மாபெரும் பண்பாட்டு சாரத்தின் பல்வேறு ரூபங்கள்.

அவற்றைப் பார்ப்பதற்காகப் போவேன். இது போன்ற கோவிலுக்குள் நுழைந்தால் வெளியே வர குறைந்தது நான்கு மணி நேரமாகும்’ என்றேன்.

‘அதனால்தான் விஷயம் தெரியாமல் உங்களை பக்திமான், ஞானவான் என்றார்களோ?’ என்றாள் ஜமுனா.

‘இன்னொரு ரக ஆட்களும் உண்டு. தங்களை புதுமை- யானவர்களாக நினைத்துக் கொள்பவர்கள் என்னைப் பற்றி மரபுக்காரன், பழைய பஞ்சாங்கம், புதுமைக்குப் புறம்பானவன் என்றும் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும்’ என்றேன்.

‘அப்படியும் சிலர் சொன்னார்கள்தான்’ என்றாள் ஜமுனா.

‘நான் பொதுவாக இவை போன்ற விஷயங்களைப் பற்றி எந்த முடிவும், கருத்தும் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் சொன்னதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா. ‘அதைப் பற்றி நானெதுவும் நினைக்கவில்லை’ என்றாள். பூக்காரிக்கு பணம் கொடுத்துவிட்டு ‘வாருங்கள், நடந்து கொண்டே பேசுவோம்’ என்று கூறி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் ஜமுனா. வீதியில் நடக்கும் எல்லோரும் எங்களையே பார்ப்பது போலத் தோன்றியது.

‘கோபுரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது’ என்றேன்.

‘இந்த கோபுரத்தை கட்டுவதற்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே இதைப் போல மூன்று மடங்கு உயரமான பிரமிடுகளை எகிப்தில் கட்டியிருக்கிறார்கள். சமாதிக்கே அவ்வளவு பெரிய கட்டடம் என்றால் கோவில் கோபுரத்தை பிரமிடைப் போல பத்து மடங்கு பெரியதாகக் கட்ட வேண்டாமா?’ என்றாள் ஜமுனா.

‘அதை விடுங்கள். என்னைப் பற்றி ஒன்றுமே தெரியாமலா கல்யாணத்திற்குச் சம்மதித்தீர்கள்?’ என்று கேட்டேன்.

‘அடுத்தவர்கள் சொல்வதைப் பற்றி நானெதுவும் நினைக்கவில்லை என்றுதான் சொன்னேன். உங்களைப் பார்த்தபோது உங்களோடு ஒன்றானது போல ஒரு உணர்வு. அப்போதே உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். இனி தெரிந்து கொள்ள எதுவுமில்லை’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையே’ என்றேன்.

‘என்ன செய்யலாம்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘உங்கள் செல்போன் எண் என்ன?’ என்றேன்

‘பணம் எங்களுக்கு பாலைவனத்துக் குடிநீர் போல.

அப்பாவிடம் மட்டும்தான் செல்போன் இருக்கிறது. எல்லோரும் அதில்தான் பேசுவோம்’ என்றாள் ஜமுனா.

‘கல்யாண வேலைகள் பற்றி ஏதாவது பேச வேண்டுமானால் எப்படி தொடர்பு கொள்வது?’ என்றேன்.

‘அப்பா நம்பரைக் கூப்பிடுங்களேன். கல்யாண வேலைகளில் அழகுபடுத்திக் கொள்வது, தாலி கட்டிக் கொள்வதைத் தவிர வேறென்ன வேலை எனக்கு இருக்கிறது?’ என்றாள் ஜமுனா.

‘உங்கள் வீடு இருக்குமிடம் தெரியும். விலாசம் தெரியாது. சரியான வீட்டு விலாசத்தைக் கொடுங்கள். ஏதாவது முக்கியமான கடிதம் அனுப்ப வேண்டிவரும்’ என்றேன்.

‘நீங்கள்தான் நேரிலேயே வந்து கடிதம் தருகிறீர்களே? தாத்தா விலாசம் வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘தனிப்பட்ட விஷயம் என்றால் எப்படி தொடர்பு கொள்வது?’ என்று கேட்டேன்.

‘குடும்பம் ஊரைக் கூட்டி கல்யாணத்தை நடத்துகிறது. இதிலென்ன பிரைவெசி வேண்டியிருக்கிறது?’ என்றாள் ஜமுனா.

இதற்கு மேல் ஜமுனாவிடம் எப்படி என் விருப்பத்தை விளக்குவது என்று புரியாமல் திகைத்தேன்.

என்னைச் சிறிது நேரம் தவிக்க விட்டபின் ‘என்னோடு அடிக்கடி பேச வேண்டுமாக்கும்?’ என்று கேட்டாள்.

‘ஆமாம். கல்யாணத்திற்கு முன்னால் அடிக்கடி பேசினால் உங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்று காபி அண்ணி சொல்லிக் கொடுத்தார். அதனால்தான் போன் நம்பர் கேட்கிறேன்’ என்றேன்.

‘அதை நேரடியாக கேட்பதுதானே? வீட்டிற்கு எதிரே பத்திரத்தாள் கடை இருக்கிறதே. மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை நான் மட்டும்தான் அங்கிருப்பேன். அந்த கடையின் போன் நம்பர் தருகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘வேலை பார்க்கிறீர்களா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. உதவியாக இருக்கிறேன். கடை உரிமையாளர் அப்பாவின் பால்ய சிநேகிதர். மதியம் அவர் சாப்பிடப் போய் திரும்பும் வரை பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டுக் கொண்டார். அதனால் செய்கிறேன். சம்பளம் தருகிறேன் என்றார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பணத்திற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று பத்திரத்தாள் கடையில் இருப்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது’ என்றாள் ஜமுனா.

நாங்கள் வீட்டை அடைந்தபோதுதான், மாமாவும் திரும்பியிருந்தார். வழக்கமான விருந்தோம்பலுக்குப் பின் மாமா என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஜமுனா கடிதங்களை வாசித்தாள். பின் அவற்றை மாமாவிடம் தந்தாள். ‘பெரியவர் என்ன எழுதியிருக்கிறார்? சொன்னால் மாப்பிள்ளையும் தெரிந்து கொள்வாரே’ என்றார் மாமா.

‘கல்யாணச் செலவு எவ்வளவு ஆகும் என்று கணக்கு எழுதியிருக்கிறார். அதில் சரிபாதி நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். தொகையை இவரிடமே கொடுத்து விடலாம்’ என்றார் மதுரை மாமா. ‘உனக்கு என்னம்மா எழுதியிருக்கிறார்?’என்று கேட்டார்.

‘எனக்கொரு செக் அனுப்பியிருக்கிறார். கல்யாணத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘பெரிய மனசு!’ என்றார் மதுரை அத்தை.

‘என்ன செய்யலாம்?’ என்றார் மதுரை மாமா.

‘செக்கை திருப்பி அனுப்பி விடலாம்’ என்றாள் ஜமுனா.

அத்தை ‘வேண்டாம், தாத்தாவை அவமரியாதை செய்யாதே’ என்று பல முறை கூறியும் ஜமுனா செக்கை திருப்பித் தந்து விட்டாள். கல்யாண செலவிற்கான பாதி பணத்தையும் அவள் மூலம்தான் மாமா என்னிடம் கொடுத்தார்.

சென்னை திரும்பியதும் தாத்தாவின் அறைக்குச் சென்று பணத்தையும், செக்கையும் தந்தபோது ‘வைத்திரு, அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்’ என்றார்.

மறுநாள் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும்போது ‘மதுரை வாத்தியார் என்ன சொன்னார்?’ என்று புதிதாகக் கேட்பவர் போல் கேட்டார் தாத்தா.

‘நீங்கள் கல்யாண செலவிற்காக கேட்ட பணத்தை கொடுத்துவிட்டார்’ என்றேன்.

‘ஜமுனாவிற்கு நான் கொடுத்த அன்பளிப்பு செக்கை ஆவலாதியாய் வாங்கிக் கொண்டு விட்டாளா?’ என்று கேட்டார் தாத்தா.

‘இல்லை. வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டாள்’ என்றேன்.

‘நான்தான் அவள் திமிர் பிடித்தவள். அகராதி என்று அன்றே சொன்னேனே?’ என்றார் கவர்னசத்தை.

தாத்தா பார்க்காதபோது ஜவுளி அண்ணி என்னைப் பார்த்து புன்னகைத்தார். தனிமையில் ‘நீ தாத்தாவின் கூட்டுக் களவாணிதானே?’ என்று கூறிச் சிரித்தார்.

‘எனக்குப் புரியவில்லை’ என்றேன்.

அடுத்து வந்த நாட்களில் திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்று எவராலும் சொல்ல முடியவில்லை. முதல் காரணம் தாத்தாவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இரண்டாவது காரணம் அவர் போட்டிருந்த பட்ஜெட்டில் அவரைத் தவிர வேறு எவராலும் எதுவும் செய்து விட முடியாது.

எல்லா திருமணங்களிலும் முக்கிய பங்கு எடுத்த கவர்னசத்தைக்கு, என் திருமணத்தில் பெண் பார்ப்பதைத் தவிர ஒரு பங்கும் கிடைக்கவில்லையே என்ற கவலை வந்துவிட்டது.

அதனால் புரோகிதர் விஷயத்தில் தலையிட்டார். தனக்குத் தெரிந்த ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள்தான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றார்.

தாத்தா ‘சாமியாருக்கும், சம்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்? நல்ல மனிதர்கள் எவரேனும் தாலி எடுத்துத் தரட்டும். இவன் தாலி கட்டட்டும். அது போதும்’ என்றார்.

நானும் அதையே விரும்பினேன். காரணம் அதைத்தான் ஜமுனா விரும்பியிருந்தாள். அவளுக்கு எந்தச் சடங்கிலும் நம்பிக்கை கிடையாது.

ஆனால் இதே விஷயத்தை கவர்னசத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தார். ‘சரி, என்னவோ செய்’ என்று கூறி விட்டார் தாத்தா.

இது பற்றி ஜமுனாவிடம் போனில் சொன்னேன். தினமும் ஜமுனாவிடம் நாள் முழுவதும் போனில் நான் பேச விரும்பினாலும், அவள் நான்கைந்து நிமிடங்கள் மட்டுமே பேசினாள். ‘பத்திரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறி போனை வைத்து விடுவாள்.

‘ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளே கல்யாணத்தை நடத்தட்டும். நமக்கென்ன?’ என்றாள் ஜமுனா.

‘இது நம் கல்யாணம்’ என்றேன்.

‘அடுத்தவர்களுக்காகத்தானே கல்யாணமே செய்து கொள்கிறோம்? யாருக்கு எதை நிரூபிக்க வேண்டும்? என்னைக் கேட்டால் மனம் ஒத்துப் போனால் உடனே சேர்ந்து வாழலாம் என்றுதான் சொல்வேன்’ என்றாள் ஜமுனா.

‘கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலா?’ என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.

‘ஆமாம். ஆனால் நீங்கள் பயப்படுவீர்களே!’ என்று கூறி சிரித்த ஜமுனா ‘எதனை பொருட்படுத்துகிறோமோ, அதுதானே நம்மைப் பாதிக்கும்? விடுபட்ட மன நிலையில் இருங்களேன்’ என்றாள்.

அதன் பின் நான் புரோகிதரைப் பற்றியோ, சடங்குகளைப் பற்றியோ நினைக்கக் கூட இல்லை.

 

(தொடரும்)

*************



book | by Dr. Radut