Skip to Content

10. அன்னை இலக்கியம் - வசந்தமே வருக !

அன்னை இலக்கியம்

வசந்தமே வருக!

வசந்தி சுந்தரம்

 

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்.
வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்.
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்......

தூரத்திலிருந்து பழைய திரைப்பட பாடல் காற்றினிலே வரும் கீதமாய் பத்மாவின் செவிகளை வருடிக் கொடுத்தது. சென்னை மாநகரப் பேருந்தின் அன்றாடப் பயணியாகிவிட்ட அவளை பலவிதமான பாடல்கள் ஓசையாகவும் இரைச்சலாகவும் அனுமதியில்லாமல் காதில் நுழைந்து அவஸ்தைப்பட வைத்தாலும், இன்று என்னவோ இப்பாடல் மிக மென்மையாக உண்மையாக ஒலித்தது. பத்மா பல முறை இப்பாடலைக் கேட்டதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் இந்த வரிகள் ஒரு கவிஞனின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகத்தான் அவளுக்கு தோன்றும். சொல்லப்போனால், அவள் கேலியாகக்கூட நினைத்ததுண்டு. "ஆமாம், இங்கு மனிதன் மனிதனாக வாழ்வதே பெரும்பாடு. தெய்வமாவதாம்'' என்று தனக்குத் தானே அங்கலாய்த்துக் கொள்வாள். ஆனால் இன்று அவள் மனம் இருக்கும் நிலையில் இந்த இதமான தத்துவப்பாடல் ஏதோ message சொல்வது போலிருந்தது.

பஸ்ஸில் ஜன்னலுக்கு அருகாமையில் காற்றோட்டமாய் அமர்ந்திருந்தும் பத்மாவிற்கு ஒரே மனப்புழுக்கம். இன்று தான் போகும் வேலை நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை. அப்படி என்ன வேலை என்றுதானே கேட்கிறீர்கள்? அதற்கு முன் பத்மாவைப் பற்றி ஒரு சில விபரங்கள். ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரை தன்னுடைய மானசீக தெய்வங்களாக வரித்து வாழ்க்கை நடத்தி வருபவள் பத்மா. கணவர் ரகுராமன் ஓய்வு பெற்ற officer.. பெண்ணும் பிள்ளையும் வெளியூரில் settle ஆகிவிடவே பத்மாவும் ரகுராமனும் சென்னையில் சொந்த வீட்டில் வாசம். பெறற்கரிய அன்னை பக்தியை அவளிடம் வேரூன்றச் செய்தது அவள் அடிக்கடி செல்லும் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் தியான மையமே. பத்மா ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் சரண் புகுந்ததிலிருந்து அவள் வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள்! எண்ணற்ற அற்புதங்கள்! மாற்றங்கள்! அன்பாகவும் அருளாகவும் பொருட்செல்வமாகவும் அவளை வந்தடைந்தன. இவையெல்லாவற்றிற்கும் காரணம் அன்னை தியான மையம் நடத்துவோரின் வழிகாட்டுதலும் ஆசியும் மட்டுமல்லாது அங்கிருந்து கிடைக்கப்பெற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களான ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய புத்தகங்களும் ஆகும். ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரது வாழ்க்கை வரலாறு, மிக உயர்ந்த அவர்களுடைய கோட்பாடுகள், மனிதகுலத்திற்கு அவர்களால் வழங்கப்பட்டுள்ள புதிய ஆன்மீக வரம், பரிணாமத்திற்காக அவர்களால் செப்பனிடப்பட்டுள்ள புதிய பாதை இவைகளைப் பற்றி அவர்களின் தவப்புதல்வராகவும், அன்னை பக்தர்களுக்கு ஒப்பிலா தந்தையாகவும் விளங்கி அயராது உழைத்து வரும் மகான் ஒருவரால் எழுதப்பட்ட அப்புத்தங்கள் கிடைக்கப்பெற்றது பத்மாவின் வாழ்வில் நடந்த ஆன்மீக அற்புதமாகவும், ஆண்டவனின் அருளாசியாகவும் கருதினாள். ஏனெனில் அகந்தையிலும் இருளிலும் கண்மூடியாக நடந்து கொண்டிருந்த அவள் வாழ்க்கை இப்போது ஒளியை நோக்கிச் செல்ல துவங்கியதற்கு அப்புத்தகங்களே முக்கிய காரணம். அவை வெறும் புத்தகங்கள் அல்ல. இறை அவதாரங்களான ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரை நம் கண்முன்னே நிதர்சனமாகக் கொண்டுவரும் ஞானக்கருவூலங்கள் என்பதால் பத்மா அப்புத்தகங்களையே ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தராக மதித்து மனதில் இருத்திப் போற்றி வந்தாள். இதனாலேயே, அப்புத்தகங்களைத் தியான மையத்தின் சார்பாக select செய்யும் புத்தகச் சேவையை மேற்கொண்டிருந்தாள்.

  ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் தனக்கு வாழ்க்கையில் வழங்கியுள்ள எண்ணற்ற ஆசிகளுக்குத் தெரிவிக்கும் ஒரு சிறு நன்றி காணிக்கையாகவும் கிடைத்தற்கரிய அன்னையின் தொடர்பு நீடிக்க உதவும் சந்தர்ப்பமாகவும் கருதி இதனைச் செய்து வந்தாள்.

இந்தப் புத்தகச் சேவை அவளுக்கு அலாதியான மனநிம்மதியையும், உடல்நலத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. அத்தோடு பல ஆன்மீகப் பரிசுகளையும் அவ்வப்போது வழங்கி வந்தது. அவ்வாறான பரிசு, ஒரு முறை புத்தகச் சேவைக்காக சக தியான மைய அன்பர்கள் இருவர்களுடன் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவதரித்த கல்கத்தா மாநகரத்திற்குச் சென்று வந்த அனுபவமாகவும் பாக்கியமாகவும் அமைந்தது. கல்கத்தாவில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அன்னை சம்பந்தப்பட்ட புனிதச் சின்னங்களை உயர்ந்த முறையில் போற்றிப் பாதுகாத்து வரும் தியான மையங்களுக்குச் சென்று பரவசம் அடைந்தனர். அங்குள்ள அமைதியும் தூய்மையும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதன் பின்னர், பகவான் ஸ்ரீ அரவிந்தர் விடுதலைப் போராட்டக் கைதியாக அலிப்பூர் சிறையில் ஓராண்டு காலம் கழித்த ஒரு மிகச்சிறிய அறையைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு பாக்கியம்! அது சிறையாகவே பத்மாவுக்கு தோன்றவில்லை. இருள், வறுமை, மரணம், அகந்தை ஆகியவற்றின் பிடியில் சிக்கிக் கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் மனிதப் பிறவியை உய்விப்பதற்காகத் தவம் செய்த மகாபுருஷரான ஸ்ரீ அரவிந்தரின் யோகக் கூடமல்லவா அது? காற்றோட்டமில்லாத சிறிய அறையில் காலத்தைக் கடந்த இறைவனின் தரிசனம் கண்ட அந்த மகானின் பொற்பாதங்கள் பதிந்த தரையில் அமர்ந்து 5 நிமிடங்கள் தியானம் செய்தனர். மெய்சிலிர்க்க வைத்த அந்த அனுபவம் என்றும் அவள் நினைவில் வாடாமலராக பரிமளித்தது. புத்தகச் சேவையில் கிடைத்த இந்த ஸ்ரீ அரவிந்த தரிசனம் அவள் அடைந்த உன்னத ஆன்மீகப் பரிசு என்பதில் ஐயமில்லை.

இதே புத்தகச் சேவை எனும் புனித வேலைக்காகத்தான் பத்மா பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தினமும் இதுபோல் பத்மா அன்றாட வீட்டு வேலைகள் முடித்து மதிய உணவுக்குப் பின்னர் கிளம்பி நகரத்தில் உள்ள அலுவலகம், வங்கி, பள்ளிகள், வீடுகள் போன்ற இடங்களுக்குச் சென்று ஆர்வம் உள்ளவர்களை அணுகி Book sales செய்து வந்தாள். அவளுடைய கணவன் ரகுராமனும் அவளுக்கு இந்தச் சேவையில் ஊக்கமளிக்கும்வண்ணம் எல்லாவிதத்திலும் உதவி வந்தார். இதற்காக பத்மாவுக்குச் சிறிதும் தயக்கமின்றி பணம் கொடுத்து அனுப்புவார். அவரே பேருந்து நிலையத்திற்குத் தன்னுடைய TVS வண்டியில் அழைத்துச் சென்று வழி அனுப்புவார். இவ்வாறு உயர்ந்த முறையில் அன்னையின் அருளால் நடந்து கொண்டிருந்த சேவைக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த பத்மாவுக்கு இன்று என்னவாயிற்று? ஆனந்தத்தின் அமுத ஊற்றான அன்னை சேவைக்குச் செல்லும் அவளுக்கு ஏன் குழப்பம், கவலை?

கிளம்புவதற்கு முன் நடந்த விபரீதம்தான் அதற்குக் காரணம். எல்லாம் அந்த மூன்றெழுத்தால் வந்த வினை. மூன்று எழுத்துகள் எப்படி வேலைக்கு முட்டுக்கட்டையானது என்று தோன்றலாம். முரண்பாட்டை விளைவிக்கும் அந்த மூன்றெழுத்து நம் குணக்கேட்டால் ஏற்படும் "சண்டை' என்ற வேண்டாத விருந்தாளிதான். அன்பு, அமைதி, அருள், வெற்றி போன்ற பல மூன்றெழுத்துத் தேவர்கள் இருக்கும்போது, கோபம், கடுமை, சண்டை என்ற அசுரர்களிடம் சரணடையும் நம்முடைய அறிவீனம்தான் என்ன? பத்மாவும் அன்று அப்படிப்பட்ட பலவீனத்திற்கு அடிமையாகிவிட்டாள். புத்தக ஞானம் முக்கியமான தருணங்களில் புத்தியிலிருந்து விலகிப் போய்விடுகிறது. உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. படித்தால் மட்டும் போதுமா? அறிவு சத்தியம் என்று புரிந்து கொண்டதை உணர்வும் ஏற்று செயல்படுத்த சம்மதிக்க வேண்டுமே. அங்குதான் தகராறு பத்மாவுக்கு.

விஷயம் இதுதான். பத்மாவின் கணவர் ரகுராமனுக்கு T.V.யில் ஆங்கிலப் படங்கள் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. எதையும் ஈடுபாட்டுடனும், உன்னிப்பான கவனத்துடனும் செய்யும்   ரகுராமன் T.V. பார்ப்பதிலும் அவ்வாறே. கண்ணியமானவர்தாம். தரக்குறைவாக எதையும் பார்ப்பவரில்லை. ஆனால் இந்த ஆங்கிலப் படங்கள் என்றாலே பத்மாவுக்கு அலர்ஜி. இப்படி இருக்க, அன்று சமையலறையில் மும்முரமாக இருந்த பத்மா அங்கிருந்தபடியே ஹாலில் T.V. பார்த்துக் கொண்டிருந்த ரகுராமனிடம், "காலையிலிருந்து பால்கார்டைக் காணவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். எங்காவது பார்த்தீர்களா?'' என்று கேட்டு வைக்க, அதற்குப் பதிலையே காணோம். ரகுராமனுக்கு தான் கேட்ட கேள்வி காதில் விழவில்லை போலிருக்கிறது என்று நினைத்த பத்மா அருகில் வந்து மறுபடியும் அதே கேள்வியை சற்று உரத்த குரலில் கேட்க, ரகுராமனுக்கு வந்ததே கோபம், அதுவும் T.V.யில் ஒரு ஆங்கிலப் படத்தில் வழக்குமன்ற விவாதக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமான கட்டத்தில் இங்கிதமில்லாமல் இடைஞ்சலாக வந்து நின்ற பத்மாவின் கன்னத்தில் அறை விடாத குறையாக ரகுராமன் கோபத்தில் முறைக்க, அதைப் பார்த்த பத்மா, "இப்ப என்ன ஆயிற்று என்று இப்படி முறைக்கிறீர்கள்? பால் கணக்கு போட்டுவிட்டு கார்டைக் கை மறதியாக வைத்துவிட்டேன். அதைப் பார்த்தீர்களா என்றுதானே கேட்டேன். அதற்கு என்னமோ பகையாளியைப் பார்ப்பது போல் பார்க்கிறீர்களே. அப்படி என்ன T.V.? அதைப் பார்க்காமல் இருந்தால் குடியா முழுகிவிடும்?'' என்று கேட்டுவிட்டாள். அவ்வளவுதான், "அதைச் சொல்வதற்கு நீ யார்? உனக்கு எப்பொழுதுமே நான் T.V. பார்க்கும்போதுதான் எல்லாம் ஞாபகம் வரும்'' என்று பதிலடி கொடுக்க, இப்படியே வாக்குவாதம் தொடர்ந்து சண்டையில் முடிந்தது. சண்டைக்குப் பின் சமாதானம் வந்ததோ இல்லையோ, silence வந்தது. மதிய உணவு மௌனக்காட்சி போல் நடந்து முடிந்து அரைகுறையாகக் கணவரிடம் விடைபெற்றுக் கொண்டு படபடப்போடு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு பத்மா கிளம்பினாள்.

இதுவே பத்மாவின் மன உளைச்சலுக்குக் காரணம். கணவர் ரகுராமன் ஆங்கிலப் படங்கள் அடிக்கடி பார்ப்பது பத்மாவுக்கு பிடிக்காத ஒன்று. அவளுடைய கணிப்பில் முக்கால்வாசி ஆங்கிலப் படங்கள் வன்முறைக் காட்சிகளையே அதிகம் சித்தரிக்கின்றன. விறுவிறுப்பு என்ற பெயரில் துப்பாக்கிச் சூடு, மோதல், வழக்குமன்ற விவாதங்கள் இவைகளே அதில் பிரதானம். இவைகள் நம் மனச் சாந்தியை குலைக்கும் என்பது அவள் முடிவு. ஆனால் ரகுராமனோ, "என்னுடைய relaxationக்கு நான் ஏதோ பார்த்துவிட்டுப் போகிறேன். ஆங்கிலப் படங்களும் நல்ல கருத்துகளை அவர்கள் முறையில் சொல்கின்றன. என்னை ஏன் control செய்கிறாய்? உனக்குப் பிடிக்கவில்லை என்றால் நீ பார்க்காதே'' என்ற கட்சி. கருத்து வேறுபாடு மோதலாகிச் சட்டசபையின் அவைக் கலைப்புக்கு ஈடாகிவிட்டது.

பத்மா இறங்க வேண்டிய bus stopக்கு இன்னும் இரண்டு நிறுத்தங்கள் இருந்தன. திடீரென்று பத்மாவுக்குக் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த இரு பயணிகளுக்கு நடுவே இடப் பற்றாக்குறை காரணமாக ஒரு முணுமுணுப்பு ஆரம்பித்தது. சில நிமிடங்களில் அது வலுப்பெற்று கோபமான பேச்சு வார்த்தையாகி, பின்னர் காட்டுகத்தலாகி, conductor வந்து சமரசம் செய்ய முடியாமல், "இரண்டு பேரும் பேசாமல் இருக்கிறீர்களா? இல்லை இறக்கிவிடட்டுமா?'' என்று ஒரு போடு போடவும் அமைதியாயினர். இந்தச் சமயத்தில் பத்மாவின் stop வந்துவிடவே அவள் இறங்கிக் கொண்டாள்.

இறங்கி நடந்து கொண்டிருந்த பத்மாவின் மனதில் தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கும் பஸ்ஸிலிருந்து இறங்கு முன் நடந்த சம்பவத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக உள்ளுணர்வு கூறியது. அதை ஒதுக்கி ஓரங்கட்டிய பத்மா, அவள் சேர வேண்டிய மின்சார வாரிய அலுவலகம் நெருங்கவே அதில் நுழைந்து தன்னுடைய புத்தக சேவைக்கு தயாரானாள்.

அந்த அலுவலகத்தில் மிக ஆர்வத்துடன் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பற்றிய புத்தங்கள் வாங்குபவர்கள் நிறைய பேர் பணிபுரிந்து வந்தனர். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று புத்தக சேவை செய்வாள். இந்த முறை ஏதாவது புது book வந்திருக்கிறதா? என்று அவர்களே ஆர்வத்துடன் கேட்டு, அவர்களிடம் இல்லாத புத்தகங்களை வாங்கிக் கொள்வார்கள். அன்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வழக்கமாக புத்தகம் வாங்கும் நபர்களில் 3, 4 பேர் லீவு. மற்ற இருவர் meetingல் இருந்தனர். சரி, 6th floorல் வேலை பார்க்கும் ஹேமலதா என்ற பெண்மணியைப் பார்ப்போம் என்று அங்கு சென்று பார்த்தால் அவர் மிகவும் depressedஆக இருந்தார். "Madam இன்று வீட்டில் ஒரே பிரச்சனை. மனதுக்கு நிம்மதியே இல்லை. இன்னொரு நாள் வாங்கிக் கொள்கிறேனே'' என்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எல்லா தளங்களிலும் முயற்சித்தும் ஒரு அன்னை புத்தகமும் sales ஆகாமல் மனம் தளர்ந்தாள் பத்மா. " Mother இன்று என்ன ஒரு book கூட விற்பனையாகவில்லையே'' என்று கவலையுடன் கண்ணை மூடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள் பத்மா. எந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கவும் அவளுக்கு அன்னைதானே துணை.

மூடிய கண்களின் முன்னால் அன்னைக்கு பதிலாக கணவர் ரகுராமனின் உருவம்தான் தோன்றியது. அவருடன் காலையில் நடந்த தகராறு பத்மாவின் மனக்கண்முன் ஒவ்வொரு sceneஆக T.V. காட்சி போல் வரத் தொடங்கின. காட்சிகளின் அணிவகுப்பு முடிந்தபின் பத்மாவின் உள்ளுணர்வு எங்கோ தவறு இருப்பதாக சுட்டிக்காட்டியது. சற்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டு நடுநிலைமையுடன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை சீர்தூக்கிப் பார்த்தாள். அன்னைக்குப் பிடிக்காத ஒரு காரியத்தை தான் செய்துவிட்டதாக உணர்ந்தாள். அதனால்தான் அன்று தன்னுடைய புனிதமான பணியில் இடையூறு ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ஆமாம், ஒரு சின்ன விஷயம் கசப்பான சண்டையாக நான்தான் காரணமாகிவிட்டேனோ? காலையில் கூட ரகுராமன் ஜோக் அடித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு கிளம்பும் சமயத்தில் எல்லாம் மாறிவிட்டது. ஏற்கனவே எனக்கு அவருடைய ஆங்கிலப் படங்கள் பார்க்கும் பழக்கத்தின் மீதிருந்த மனக்குறை ஒரு சிறிய விஷயத்தின் மூலமாக வெளியே சீறிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தது போல் அல்லவா இருக்கிறது? Mother, நான்தான் தவறு செய்துவிட்டேன். எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவருடைய பழக்கத்தை இடித்துக் கூறிவிட்டேன். வாக்குவாதத்திற்கு இடம் கொடுத்ததினால் அவர் கோபம் வளர்ந்து கொண்டே போனது. ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரின் கொள்கைப்படி "மற்றவர்க்கு சொல்வதற்கு இங்கு எதுவுமில்லை. யாரையாவது திருத்த வேண்டுமென்றால் அது நம்மைத்தான்''. அதுவும் அன்னை சேவையில் ஈடுபட்டுள்ள நான் கோபத்திற்கு அடிமையாகி வாய்ச் சொல்லால் மற்றவரை புண்படுத்துவது எவ்வளவு தவறு! தீர யோசித்துப் பார்த்தால் அவருடைய பழக்கத்தின் மீது எனக்குள் புகைந்து கொண்டிருந்த கோபம்தானே சண்டை எனும் தீ பற்றி எரிய காரணம். அந்தக் கோபமே ஒரு violent emotionதானே? இப்படி எனக்குள்ளே கோபம் என்னும் வன்முறையை வைத்துக் கொண்டு அவரை வன்முறையைப் பார்க்காதீர்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. என்னுடைய அகம்தானே புறமாகிக் கொண்டிருக்கிறது? என்னை இப்போது எங்கு கொண்டு வந்துவிட்டது? நானல்லவா இப்போது அன்னையின் கொள்கைக்கு புறம்பானவளாக இருந்திருக்கிறேன். என்ன புத்தகம் படித்து என்ன? தன்னுடைய கருத்தில் பிடிவாதமாக இருந்து தன்னைத் தானே வலியுறுத்தும் வரை எந்த ஆன்மீகமும் நமக்கு உதவ முடியாது என்று சட்டென்று பத்மாவுக்குப் புரிந்தது. "Mother என்னுடைய தவற்றை நான் உணர்ந்துவிட்டேன். இன்று வீட்டிற்குத் திரும்பியவுடன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன். என்னுடைய இந்த முடிவுக்குத் தேவையான பொறுமையையும் மன உறுதியையும் தாங்கள்தான் எனக்குத் தர வேண்டும். அன்னையே உங்களுக்காக நான் இதைச் செய்கிறேன்'' என்று ஐந்து நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனையில் ஈடுபட்டாள். அன்னையை அழைத்துக் கண்கள் பனிக்க அவள் மன்றாடி முடித்த நேரம் யாரோ அவளைத் தோளில் தட்டி எழுப்பினார்கள். சட்டென்று சுயநினைவுக்கு வந்த பத்மாவின் முன்னால் meeting முடிந்து திரும்பிக் கொண்டிருந்த இரு பெண்மணிகள் சிரித்த முகத்துடன் நின்றிருந்தனர். "என்ன Madam, வெகுநாட்களாக உங்களைக் காணவில்லை? உங்களைப் பற்றித்தான் இன்று பேசிக் கொண்டிருந்தோம். அன்னை books கொஞ்சம் தேவைப்படுகிறது''. பத்மாவுக்கு அவர்களுடைய சொற்கள் காதில் தேனாக இனித்தன. உடனே தன்னிடமுள்ள books எல்லாவற்றையும் அங்குள்ள table மீது வைத்துக் காண்பித்தாள்.

"எங்களுடைய சிநேகிதி ஒருவருக்கு இரண்டு நாளில் marriage day. அவரும் ஒரு அன்னை devotee. அதனால் 2 புத்தகங்கள் giftஆக கொடுக்கலாம் என்று நினைத்தோம். சரியான சமயத்தில் வந்தீர்கள். எங்களுக்கும் புதிதாக "யோக சக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்'' என்ற புத்தகம் வந்திருக்கிறதாமே, அது வேண்டும்'' என்று சொல்லி, ஆளுக்கு இரண்டு புத்தகங்களாக 4 books வாங்கி கொண்டார்கள். புதிதாக charge செய்யப்பட்ட mobile phone போல புத்துணர்வு பெற்ற பத்மா அன்னையின் அருள் விரைவுக்காக மனதிற்குள் நன்றி சொல்லியவண்ணம் அந்த அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து அதற்கு அருகாமையில் இருந்த ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்குப் பணிபுரியும் கீதா என்பவரை நெருங்கினாள். கீதாவும் பத்மா மூலமாக அன்னையைப் பற்றி தெரிந்து கொண்டு புத்தகங்கள் விரும்பி வாங்கிக் கொண்டு மற்ற bank staff வாங்குவதற்கும் காரணமாக இருக்கும் ஒரு புது devotee.

பத்மா வருவதற்காகவே காத்திருந்தது போல் கீதா, " Madam, இதே சாலையில் இருக்கும் LIC Office branchல் வேலை பார்க்கும் அனுராதா என்பவருக்கு ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பற்றிய புத்தகங்கள் தேவைப்படுகிறதாம். உங்களால் போக முடியுமா?'' என்று கேட்டார். "முடியுமாவா? அதற்காகத்தானே வந்திருக்கிறேன்'' என்ற பத்மா, உடனே ஒரு auto வைத்துக் கொண்டு அந்த officeஐ அடைந்தாள்.

மகிழ்ச்சியுடன் பத்மாவை வரவேற்ற அனுராதா என்ற அந்தப் பெண்மணி தனக்கு ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பற்றி படித்து தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், புத்தகங்கள் இதுவரை வாங்கும் சந்தர்ப்பம் அமையவில்லை என்றும் கூறி, "அன்னையின் தரிசனம்'', "அருளமுதம்'', "புஷ்பாஞ்சலி'' என்ற மூன்று புத்தகங்களை உடனே வாங்கிக் கொண்டார். அனுராதா bookஐத் தேர்வு செய்து கொண்டிருக்கும்போதே அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4, 5 பெண்கள் அங்கு வந்து பத்மா display செய்து வைத்திருந்த ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களை ஆவலோடு பிரித்து பார்வையிட்டனர். அது அவர்களுடைய பார்வையல்ல, ஸ்ரீ அன்னையின் அருட்பார்வையே என்பதை பத்மா விரைவில் உணர்ந்தாள். ஏனெனில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து 5 புத்தகங்கள் வாங்கிக் கொண்டனர். இதைவிட வேறு எப்படி ஸ்ரீ அன்னை பத்மாவுக்குத் தன்னுடைய presenceஐ உணர்த்தியிருக்க முடியும்? மிக்க மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பத்மா அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறி bus standஐ நெருங்கினாள். Busம் உடனே வந்தது. ஆனால் அதில் ஏறி அமர்ந்த பத்மாவுக்கு அது busஆகத் தெரியவில்லை. ஏதோ தேவலோக ஊர்தி ஒன்று தன்னைச் சுமந்து கொண்டு காற்றினில் மிதந்து செல்வதைப் போல் உணர்ந்தாள். தெய்வீக மாயையால் தான் இயக்கப்படுவதைப் போல் தோன்றியது. இது என்ன விந்தை? அன்றாடம் விற்கும் 4, 5 புத்தகங்கள்கூட விற்க முடியாமல் போன நிலை மாறி, சில நிமிடங்களில் 12 புத்தகங்கள் விற்கும்படி செய்த ஸ்ரீ அன்னையின் அருள் விரைவு பத்மாவை வியக்க வைத்தது. இந்த sudden turn of events எதனால் என்பதும் அவளுக்குத் தெளிவாகத் தொடங்கியது. தன் தவற்றை உண்மையாக உணர்ந்து ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்து, இனி அந்தத் தவற்றை செய்வதில்லை என்ற முடிவு எடுத்தவுடன் book sales அற்புதமாக நடந்தது. அகத்தில் ஏற்பட்ட மாற்றம் புறத்தில் விளைவித்த புரட்சியே அது என்பது புலனாயிற்று. புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும் என்பது இதுதான் போலிருக்கிறது.

எந்த உயர்ந்த ஞானமும் நாம் அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போதுதான் அர்த்தமுள்ளதாகிறது. சத்தியத்தின் சொரூபமான ஸ்ரீ அன்னைக்காக நாம் இதைச் செய்யும்போது அது நம்மைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துகிறது. மனமாற்றம் பெறும் நேரம் புனித நேரம். அப்போது நாம் ஸ்ரீ அன்னையின் கருவியாகிறோம். இதைவிட உயர்ந்த பரிசில்லை. இதற்கு ஈடான மகிழ்ச்சியோ நிறைவோ இல்லை என்று உணர்ந்த பத்மாவுக்குக் காலையில் கேட்ட பாடல் வரிகளும் தனக்கு இந்த messageஐத்தான் உணர்த்தியதாகப் புரிந்து கொண்டாள். மனதில் தெளிவும் அமைதியும் நிரம்பியவண்ணம் வீட்டை நோக்கி ஸ்ரீ அன்னைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற விரைந்தாள் பத்மா.

அவள் தீர்மானித்துவிட்டாள். மனம் கசங்கும் மல்யுத்தங்கள் இனி அவளுக்கு வேண்டாம். சுமுகத்தின் சுகந்தம் வீசும் வசந்த கால பயணமே அவள் இலக்கு. ஸ்ரீ அன்னையை அங்குதானே காண முடியும்!

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உள்ளது போனால் உலகம் வரும்.
 
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் சரணாகதிக்குத் தடை.
 
 
 
*****



book | by Dr. Radut