Skip to Content

"அன்பர் உரை'' - புது மில்லனியத்தில் (millenium) புதைந்துள்ள பொக்கிஷங்கள்

(தர்மபுரி தியான மையத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில் 9.1.2000  அன்று  செல்வி. R. மகேஸ்வரி  நிகழ்த்திய  உரை)

இறைவன் வரும் தருணம் (Hour of God) சிருஷ்டிக்கே வந்த நேரம் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவதாரம். சூரியோதயம், மாதப்பிறப்பு, வருஷப்பிறப்பு, நூற்றாண்டு, மில்லன்னியம் பிறப்பவை இறைவன் வரும் தருணத்தின் சிறு பிரதிபலிப்புகள். அவை வாழ்வு முழுவதும் பலவகைகளில் தொடர்வதைக் காணலாம். திருமணநாள் ஆண்டுநிறைவு, ஸ்தாபன ஆண்டு நிறைவுகள் என ஆயிரம் சிறப்பான நேரங்கள் எழுவதும், நாம் அவற்றைக் கொண்டாடுவதும், 2000 A.D. இல் மகுடமாக  மிளிர்கிறது.  

ராஜா மாறினாலும் என் வேலை மாறப்போவதில்லை எனக் கசந்து கொண்ட தொண்டன் கூற்றில் பேருண்மையுள்ளது. ராஜ்யம் மாறுவது, புரட்சி, புதுயுகம் பிறப்பது, புதுவசதிகள் ஏற்படுவது ஆகியவை ஏற்கனவே அதிக வசதியுள்ளவர் மேலும் அதிக வசதிபெற உதவும் என்பது உண்மை. காங்கிரஸ் பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரம் பெற்ற பின் எளிய காங்கிரஸ் தொண்டர்கள் சுதந்திரத்தால் உயர்ந்தது உண்மை எனினும் அது ஒரு பகுதியே. ஜமீன்தாரர்களும், சர் பட்டம் வாங்கியவர்களும், பிரிட்டிஷாரை அண்டி வாழ்ந்தவர்களும், சுதந்திரத்தை எதிர்த்தவர்களும் பெருவசதி பெற்றதும் அது போன்ற உண்மை. சண்முகம் செட்டியார், சி.பி.ராமசாமி அய்யர், சுப்பராயன், ஜான் மத்தாய் போன்றவர்க்கும், ராதாகிருஷ்ணன் போன்றவர்க்கும் சுதந்திரம் அதுவரை இல்லாத வாய்ப்பை அளித்தது. மில்லன்னியம் ஜனவரி முதல்தேதி பிறந்தால் அதேபோல் ஏற்கனவே படித்தவர், பதவியில் உள்ளவர், பணம்பெற்றவர் சாதாரண மக்களைவிட பெரு வாய்ப்புப் பெறுவர். மில்லன்னியத்தில் மேலும் ஓர் வாய்ப்புண்டு. இதுவரை சாதாரண மக்கள் பெறாத வாய்ப்பு அது. அன்னை அனுதினமும் வாய்ப்பாகச் செயல்படுபவர். அன்னையை அறிவதால் மட்டும் இந்நேரம் பெருவாய்ப்புப் பெறமுடியும்.

அன்னையை அறிவதால் எளியவர் சிறந்தவராகிறார். அக்காரணத்தால் இந்த நேரம் அவர் பெருமக்கள் பெறுவதுபோல் பெறக்கூடும். இதுவரை அன்னையிடமிருந்து பெறத் தவறியதை அன்பர்கள் பெறும் தருணம் வருஷப்பிறப்பு. அப்படி அவர்கள் பெறக்கூடியது என்ன? அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது என்ன? சுமார் 20 அல்லது 30 வெளியீடுகளில் பல கண்ணோட்டத்தில் விளக்கமாக எழுதப்பட்ட கருத்துகள் அவை என்றாலும், நேரம் கருதி மீண்டும் ஒரு முறை குறிப்பாகச் சொன்னால்,

  • தன் நேர்மைக்கும், திறமைக்கும், அம்சத்திற்கும், அதிர்ஷ்டம் வரவில்லை என நினைப்பவர் எதைப் பெற வேண்டும் என விழைந்தாரோ அதைப் பெறலாம். அதுவே குறைந்தபட்சப் பலன். ஏனெனில் இது அவர் நிர்ணயம் செய்த முடிவு. அன்னை அவருக்கு அளிக்கக்கூடியது அதிகபட்சம். அதை அவரால் நிர்ணயம் செய்யமுடியாது. அன்னையை அறிந்து, அறிவதை நம்பி, நம்புவது செயல்பட தடையானவற்றை விலக்கினால் அது பலிக்கும்.
  • அன்னையை என்னவென்று அறிவது? தெய்வமாகவும், அவதாரமாகவும், சக்தியுள்ள தெய்வமாகவும் அறிவோம். தெய்வங்களிடமில்லாத சக்தி அன்னையிடமிருப்பதை, அது நம் வாழ்வில் பலித்திருப்பதை, அச்செயல் என்ன தத்துவத்தை விளக்குகிறது என அறிவது, அன்னையை அறிவதாகும். அதை நம்பினால், இத்தருணம் அந்நம்பிக்கையை நிரந்தரமாக்கும். நம்பிக்கை பூரணமானால் நிரந்தரப் பலனுண்டு. இல்லையேல் உள்ள நம்பிக்கைக்கு ஒரு பெரும் பலன் இந்த நேரம் உண்டு.

நேரு நினைவுச் சொற்பொழிவில் இந்தியா 134ஆம் இடத்திலிருந்து 50ஆம் இடத்திற்கு வர முடியும். அதற்கான திட்டங்களும், நுணுக்கங்களும், பணத்தை உற்பத்தி செய்யும் திறனும் நம்மிடம் உண்டு என்று பேச்சாளர் பேசினார்.

நம் இடுப்பை ஒடிப்பது வெளிநாட்டுக் கடன். அதை இனி வாங்குவதில்லை என்றால் தன்னம்பிக்கை பிறக்கும். உள்ள திட்டங்களை ஆண்டவனின் வேகத்தில் நிறைவேற்ற அவசரச்சட்டம் வேண்டும் என்றும் கூறினார் பேச்சாளர். இதைச் செய்தால் நாடு ஸ்பெயின், மெக்சிகோ, கொரியா போல் முன்வரும்.

அதற்குரிய நேரம் இதுவே. மில்லன்னியம் பிறப்பே.

நம்முடனிருந்தவர் ஒருவர் M.P. ஆகவும், அடுத்தவர் கோடீஸ்வரராகவும், வேறொருவருடைய 5 பிள்ளைகள் அமெரிக்காவலிருக்கும் பொழுது நாம் NGO வாக இன்னும் 7 ஆண்டில் ஓய்வு பெறப்போகிறோம். 3 பேரில் ஒரு பிள்ளை பட்டம் பெற்று அதற்குரிய வேலையின்றி சிறு வேலையிலிருக்கிறான். அடுத்தவன் வியாபாரம் செய்து கைநிறைய சம்பாதிக்கிறான். மூன்றாம் பெண் திருமணத்திற்கு நிற்கிறாள் எனில் நாமும், நமக்குரிய ஞானத்தைப்பெற்றால், அதற்குரிய தூய்மையை ஏற்றால் நம் பிள்ளையின் வியாபாரம் கடல் கடந்து பெருகும். வேலையில் உள்ளவன் IAS பாஸ் செய்வான். கற்பனைக்கெட்டாத சம்பந்தம் வரும். அவற்றையெல்லாம் பெற நாம் எப்படி அன்னையை அறிய வேண்டும்?

சில லட்சம் வியாபாரம் செய்தவர், சமாதி தரிசனம் செய்து தொழிலைப் பல கோடியாக மாற்றியதை நாம் அறிவோம். நம் வியாபாரம் அதுபோல் பெருக வேண்டும் என்பது ஆசை. ஆசை பலன் தாராது. அவருக்கு அருளியதுபோல் அன்னை நமக்கும் அருள்வார் என்பது ஆசையில்லாவிட்டாலும், எதிர்பார்ப்பதாகும். எதிர்பார்த்தால் எதிர்மறையாக நடக்கும். அவருக்கு அருளியதுபோல் அன்னை அனைவருக்கும் செய்யக் கூடியவர் என்பது அறிவு. அதை நம்புவது நமக்கும் பலிக்கக்கூடிய நம்பிக்கை. அனைவருக்கும் வருகிறது என்பதை ஏற்கும் மனம் பரந்த மனம். பரந்த மனப்பான்மையின் அறிவு பலன் தரும் நம்பிக்கை.  

கல்லூரியில் சேர்ந்து முதல் பரீட்சை எழுதிய மாணவன் பரீட்சையில் 100 மார்க் வாங்கியதைக் கூட்டிப் பார்த்தான். கூட்டல் 140 என்கிறது. எப்படி? இதுவரை பள்ளியில் அவனறியாத அனுபவம்.  2/3 கேள்விகட்கு 100 மார்க் என்பது கணிதச் சட்டம். முழுவதும் எழுதியவனுக்கு 140 வரும். ஆனால் 100 என்றே போடுவார்கள். கணிதம் கடினமானது என்பதால் இந்த ஏற்பாடு. பையன் திறமைசாலி என்பதால் 140உம் பெற்றான். அன்னை 100க்கு 140 மார்க் போடுபவர்கள். திறமையுள்ளவர் பெறலாம். இது அதைப் பெறும் நேரம். கேட்டதைவிட அதிகமாக அன்னை கொடுக்கிறார் எனில் அவர்கள் கொடுக்க ஆன்மீகச் சட்டம் இதுபோல் இடம் தருகிறது.

கிராமத்திற்குப் பள்ளியை அவர்கள் கேட்காதபொழுது சர்க்கார் அளிக்கிறது எனில் கிராமம் கல்வி பெறுவது சர்க்காருக்கு அவசியம். கிளார்க் வேலைக்குப் போனவன் ஆபீசராகச் செலக்டாகிறான் எனில், அன்பனின் வாழ்வு ஆன்மீக முன்னேற்றம் பெறுவது அன்னைக்கு அவசியம் என நாம் அன்னையை அறிய வேண்டும். பெண்ணுக்குத் திருமணமாகாது என்ற நிலையில் பிரார்த்தனைக்குப் பதிலாக உயர்ந்த வரன் வந்தது. 1 வருஷத்தில் அவருக்கு US இல் வேலை கிடைத்தது என்பது US இல் இந்தியத் திறமைக்குத் தேவையிருக்கிறது எனப் பொருள். நமக்குக் கேட்கத் தெரியாத பலன்களை நமக்கு அருளாகக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர் அன்னை என அறிவது, அன்னையை அறிவதாகும். இவற்றை அறிந்தபின் நம்பும் திறமை அறிவுக்கில்லை. சூரியன் உலகைச் சுற்றி வரவில்லை. பூமி உலகத்தைச் சுற்றி வருகிறது என்று அறியும் திறன் புலன்களுக்கில்லை என்பதுபோல், அன்னையைப்பற்றி அறிந்தவற்றை நம்பும் திறன் மனதிற்கில்லை. பூமி சூரியனைச் சுற்றி வருவதை அறிவால் மட்டுமே நம்ப முடியும் என்பதுபோல் அன்னையை இதுபோல் நம்ப ஆன்மாவால் மட்டுமே நம்ப முடியும்.

  • அறிவு அனுபவத்தால் பெற்ற விளக்கத்தை,
  • ஆன்ம விழிப்பால் நம்பி, 
  • ஜீவன் தன் முழுமையால் நம்பிக்கையின் பலனைப் பெற முனைவது இறைவன் வரும் தருணத்தில் நம் கற்பனையின் உச்சகட்ட எதிர்பார்ப்பை அடைவதற்கு வழியாகும்.
  • ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை வரும் நாள் முதல்தேதி.
  • அதுவே நூற்றாண்டு பிறக்கும் நாளாகவும் இருப்பது மேலும் சிறப்பு.
  • இறைவன் வரும் தருணத்தில் இவையிரண்டும் அருளின் அனுக்கிரஹம்.
  • நாடு விழித்தெழுந்தால் உலகில் வளமான நாட்டுக்குச் சமமாக உயரலாம்.
  • மனிதன் விழிப்படைந்தால் ஆயிரம் மடங்கு உயரலாம்.
  • மனிதனின் ஆன்மா விழிப்புற்றுச் செயல்பட்டால் அவன் செய்யும் எந்த யோகமும் பூரணமடையும்.
  • பூரணயோகி, அன்னையை அறிந்து நேரத்திற்குரியவாறு செயல்பட்டால் பூரணம் பெறுவான்.
  • அன்னை அன்பன், அன்னையை அறிந்து, ஆன்மவிழிப்பால் அன்னையை நம்பி, யோகத்தை நாடினால், வாழ்வு பூரணம் பெற முயன்றால் யோகம் வாழ்வை விளக்கும். அது இதுவரை மனித கற்பனையைக் கடந்த நிதர்சனமாக இருக்கும் என்பதைக் காணும் நாள் ஜனவரி முதல்தேதி.

********

 



book | by Dr. Radut