செயல்படும் அன்னை சக்தி
ஆபத்து
வசதியாகப் பிறந்து, வசதியாக வளர்ந்து, வாழ்க்கையை நடத்துபவர்கள் "ஆபத்து'' என்பதைக் கண்டிருக்கமாட்டார்கள். சில சமயங்களில் எழுந்தால், அந்த நேரம் தம் திறமையால் சமாளித்துக் கொண்டிருப்பார்கள். கொஞ்சநாள் கழித்து ஆபத்து வந்ததையும், போனதையும் மறந்துவிடுவார்கள். இவர்களுக்கும் நான் சொல்லப் போகும் ஆபத்துண்டு. ஆனால் இவர்கள் சிறுபான்மையோர்.
பெரும்பான்மையோர் வாழ்வில், அதுவும் தொடர்ந்து முன்னேறுபவர் வாழ்வில் இந்த ஆபத்து அடிக்கடி வரும். அதைச் சமாளித்து வெற்றி காணாவிட்டால், அந்த நிலை வாழ்வு இனி இல்லை என்று போய்விடும். 3 தம்பி, 3 சகோதரிகளுடன் பிறந்தவர் ஒருவர். அனைவரும் பட்டதாரிகள். இவர் கல்லூரிக்குப்போக வேண்டிய நேரம், குடும்பத்தலைவரான பெரியப்பாவுக்கு இவர் மீது ஒரு சிறு விஷயத்திற்காகக் கோபம் வந்தது. கல்லூரிக்கு போகவில்லை! இத்தனை வருஷமாகக் குடும்பத்தில் அனைவரும் உயர் நிலையிலுள்ளபொழுது, கல்லூரிக்குப் போகாததால், அதற்குரிய வாழ்வும், அதற்குரிய மரியாதையும் பெற்றுவருகிறார். இதையே நான் ஆபத்து எனக் குறிப்பிடுகிறேன்.
இந்த நேரம் எப்படியாவது பெரியப்பாவைத் திருப்தி செய்யத்தோன்றும். பொதுவாக அது பலிக்காது. சில சமயங்களில் பலிக்கும். அது பலிக்கும் சமயம் நாம் எவ்வளவு தூரம் இறங்கிவர வேண்டியிருந்தது எனத் தெரியும். அப்படி ஜெயித்த பிறகு வாழ்க்கை தரும் பலன் நாம் இறங்கி வந்த குணத்திற்குரியதாகும். வாழ்வில் இந்நிலை அதிகமாக உள்ளது.
அன்னையின் சக்தி அபரிமிதமானது. அற்புதங்களைச் செய்ய வல்லது என்றால், இது போன்ற நேரங்கüல், உண்மையாகவும், தைரியமாகவுமிருந்தால் அது இறங்கி வந்து அற்புதம் நிகழ்த்துவதைக் காணலாம். பெரும்பாலும் அற்புதங்கள் நிகழும் நேரங்களில் இவ்வுண்மையும், தைரியமும் முன்வருவதைக் காணலாம்.
நிலம் மலிவாகக் கிடைக்குமிடங்களில் நீரிருக்காது. உயிருக்கு ஆபத்திருக்கும். பயிரைக் காப்பாற்ற முடியாது. பயிர் பலன்தாராது. ஆசைப்பட்டவர்கள் இங்கு நிலம் வாங்கி ஆபத்தை எதிர் கொள்வார்கள்.
ஆசையை விலக்கி, அன்னையால் உந்தப்பட்டு நிலம் வாங்கிய இடம் இதுபோன்ற இடமாக அமைந்தது. நிர்வாகத்திற்கோ, காவலுக்கோ, ஆள் கிடைக்காது. இவர்களே திருடுபவர்களாக இருந்தார்கள். நிலம் வாங்கி, பயிர் ஏற்றுமுன் வெளியூர் என்பதால், பாதுகாப்பு ஏற்பட்ட பின்னரே முதலீடு செய்யமுடியும். இது நிலையில்லாத நேரம். ஊரும், மனிதர்களும் எவ்வளவு தூரம் தங்கள் ஆர்ப்பாட்டம் பலிக்கும் என்று கணக்கிடும் நேரம். இல்லாத பிரச்சினையைக் கிளப்புவதுண்டு. சிறியதைப் பெரியதாக்குவதுண்டு. அன்பர் நிர்வாகியை நியமித்தார். நிர்வாகியே நிலையில்லாதவர். ஒரு நாள் அன்பரும் நிர்வாகியும் ஊர் வழியே வரும்பொழுது ஒருவன் குடித்துவிட்டு சண்டைக்கு வருகிறான். பலரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நிர்வாகி அன்பர் தம்மை எதிர்பார்க்கும் நேரம் எனப் புரிந்து கொண்டு அவனும் வேடிக்கைப் பார்க்கிறான். இந்த நேரம் சற்று இடம் கொடுத்தால், இனி இங்குப் பயிரிட முடியாது என்ற நிலை. ஊர் மக்கள் குடிகாரனைத் தடுக்க வேண்டும். அவர்கள் தடுக்கவில்லை. ஊரைச் சேர்ந்த நிர்வாகி அவனை விரட்ட வேண்டும். அவனும் திருட்டு எண்ணத்துடனிருக்கிறான். இனி அன்பர் குடிகாரனுடன் சண்டையிடுவது முடியாது. அடுத்து என்ன? அத்தனையும் போய்விடும்!
அன்பர் நிதானமானார். குடிகாரனை நோக்கி, "வா, இங்கே வேண்டியதைக் கேள்'' என்றார். பிரவாகமாக அன்னை சக்தி அவருள் புகுந்தது, குடிகாரன் சற்று அடங்கினான். நிலைமை தன் கையை விட்டுப்போவதை நிர்வாகி உணர்ந்தான். நிர்வாகி சுதாரித்துக் கொண்டு குடிகாரன் மேல் பாய்ந்தான். சக்தி செயல்பட்டது. சில மாதங்களில் அன்பருக்குத் தொந்தரவு கொடுத்த குடிகாரன் இறந்து விட்டான். தைரியம் சக்தியை செயல்படச்செய்யும்.
********
- Login to post comments