Skip to Content

08. அன்னை வழியில் சாதனை

அன்னை வழியில் சாதனை

N. அசோகன்

நாம் பேச எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு "அன்னை வழியில் சாதனை''. பொதுவாக வாழ்க்கையில் மனிதர்கள் பண பலம், அதிகார பலம், செல்வாக்கு என்றிவற்றைக் கொண்டுதான் சாதிக்கிறார்கள். இவை உதவாத நேரங்களுமுண்டு. அப்பொழுது ஆண்டவன் அருளை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. பெரிய பிரச்சினை இருப்பதையறிந்து இறைவனின் அருள் நாம் கேட்காமலேயே செயல்படுவதுமுண்டு. அது ஏன் இப்படித் தானாக செயல்படுகிறது என்பதை நாம் அறிய முடியாது. இரண்டாவதாக நாம் அழைத்து அது செயல்படுவதுமுண்டு. அருள் தானே செயல்படும் பொழுது அருளின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும். அருளால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதை நம்பி, நாம் அழைக்கும் பொழுது இதில் நம் பங்கு ஓரளவிற்கு வருகிறது. என்னால் அருளை செயல்பட வைக்க முடியும் என்று நம்பி அழைக்கும் பொழுது, அவன் தன்னையும் ஓரளவிற்கு நம்புகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நம்பிக்கையையும் விட்டுவிட்டு அருளின் பார்வை பிரச்சினையின் மேல் பட்டால் பிரச்சினை முழுவதும் கரையும் என்று நினைப்பது நம்பிக்கையை அருளின் மேல் வைப்பதாகும். பொதுவாக இரண்டுமே கலந்துதான் வரும். ஏதாவது ஒரு பிரச்சினைத் தீரும் பொழுது அருளின் தன்னிச்சையான செயல்பாடும் அதே சமயத்தில் மனிதன் தானே முயற்சி எடுத்து அருளை அழைத்ததாகவுமிருக்கும்.

எல்லா பிரச்சினைகளையும் நம்மால் சொந்த பலத்தால் தீர்க்க முடியுமா? வருகின்ற பிரச்சினைகள் எல்லாமே நம்முடைய பண பலம், அதிகார பலம் என்றிவற்றால் மட்டும் தீர்த்துக் கொள்ள முடியுமா? குணப்படுத்த முடியாத நோய் ஒன்று வந்துவிட்டால் என்ன செய்வது? அதாவது இந்த வியாதிக்கு மருந்தேயில்லை, குணமாகவும் வழியில்லை என்று டாக்டர்கள் கை விரித்துவிட்டால் என்ன செய்வது? அந்நேரம் அந்த நோயாளி என்ன செய்வது? அரசியல் பலம் கொண்ட ஒருவர் அரசியல் பலமில்லாதவரை எதிர்க்கிறார் என்றால், அந்த எதிர்ப்புக்கு ஆளானவர் எப்படித் தப்பிப்பது? இம்மாதிரி சந்தர்ப்பங்களில், வேறு வழியில்லாமல் இறைவனைக் கூப்பிட்டே ஆக வேண்டும். அன்னை பக்தர்களுக்கு இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் வருகின்றன. தொழிலதிபரான அன்னை பக்தர் ஒருவர் முதலமைச்சர் பதவியிலுள்ள ஒரு அரசியல்வாதியின் அதிருப்திக்கு ஆளானார். எந்த சமாதான முயற்சிக்கும் இந்த அரசியல்வாதி இணங்கவில்லை. எதிர்ப்பிலிருந்து தப்பிக்க பக்தருக்கு வழித் தெரியவில்லை. அன்னையிடம் பூரண தஞ்சமடைந்தார். அன்னை காப்பாற்றுவார் என்று தெரிகிறது. ஆனால் எதைச் செய்து எப்படிக் காப்பாற்றுவார் என்று மட்டும் தெரியவில்லை. எதிர்ப்பின் கடுமையைத் தாங்க முடியாமல் வருகின்ற மனச்சோர்வை எல்லாம் பொறுத்துக் கொண்டு, அன்னை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் மட்டுமிருந்தார். பக்தர் அன்னை மேல் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரே மாதத்தில் முதலமைச்சர், பிரதமரின் அதிருப்திக்காளாகி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அத்தோடு அவர் எதிர்ப்பால் வந்த பிரச்சினை இவருக்குத் தீர்ந்தது. இப்படி எல்லாம் நடக்கும் என்று நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் இப்படித்தான் நடந்தது. மாரீஸ் குட்மேன் என்ற ஒரு விமான பைலட் அவர் ஓட்டிக் கொண்டு வந்த ஒரு சிறிய விமானம் விபத்திற்குள்ளாகி, அதனால் அவர் மிகவும் பலமாக பாதிக்கப்பட்டார். முதுகெலும்பும் மற்ற முக்கியமான எலும்புகளும் உடைந்துபோய் விட்டன. அவரால் நடக்க முடியாது, பேச முடியாது, உணவு உட்கொள்ள முடியாது. அவர் பிழைப்பதற்கு வழியே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இக்கருத்து அவருக்குத் தெரிவிக்கப்பட்ட பொழுது அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அடிபட்டதோ ஜனவரி மாதத்தில், டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் தானே எழுந்து நடந்து அந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறுவேன் என்று தீர்மானம் எடுத்தார். அவர் கிருத்துவர் என்பதால் இவ்விஷயத்தில் அவர் ஏசுநாதரின் அருளைத்தான் மிகவும் நம்பினார். அவருக்குத் தெரிந்து அவர் ஏசுநாதரைத்தான் அழைத்தார் என்றாலும், உண்மையில் அவர் சத்திய ஜீவிய சக்தியைத்தான் அழைத்திருந்தார். ஏனென்றால் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து காப்பாற்றக்கூடிய சக்தி, சத்திய ஜீவியத்திற்குத்தான் இருக்கிறது. அவர் இப்படி ஒரு தீர்மானம் எடுத்திருப்பதையே அந்த ஆஸ்பத்திரியிலுள்ள டாக்டர்கள் எவரும் நம்பவில்லை. மேலும் இதை சீரியஸாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் தீர்மானம் எடுத்தது போலவே செய்தும் காட்டினார். படிப்படியாக குணமடைந்து, நடக்க ஆரம்பித்தார், பேச ஆரம்பித்தார், உணவு உட்கொள்ளவும் ஆரம்பித்தார். இறுதியில் அவர் சொன்னது போலவே கிருஸ்துமஸ் தினத்தன்று தானே நடந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினார். யாருமே பிழைக்க முடியாத ஒரு பெரிய விபத்திற்கு ஆளாகி, அவர் மட்டும் பிழைத்து எழுந்ததால், அவரை அதிசய மனிதர் என்று எல்லோரும் அழைக்கின்றார்கள். இப்பொழுது அவர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சாதிப்பது எப்படி என்று சொற்பொழிவுகள் எல்லாம் நிகழ்த்துகிறார். இப்படிப்பட்ட அதிசயங்களை எல்லாம் நாம் பார்த்த பிறகும், கேள்விப்பட்ட பிறகும்கூட நம்மால் இப்படி நடந்தது என்று நம்ப முடியவில்லை. மீண்டும் ஒரு முறை இதே மாதிரி சோதனை வந்தால், அருள் மீண்டும் வெற்றிகரமாகச் செயல்படுமா என்று நமக்கு சந்தேகம்தான் வரும்.

வரித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு சேவை ஸ்தாபனத்தின் வரி விலக்கை இரத்து செய்தார்கள். விசேஷ நிபந்தனைகள் எல்லாம் விதித்து இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால்தான், வரி விலக்கு தொடரும், இல்லை என்றால் ரத்தானது ரத்தானதுதான் என்றார்கள். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் சேவை ஸ்தாபனம் இல்லை. இந்தச் சேவை ஸ்தாபனம் எவ்வளவு சிறப்பாக சேவை செய்கிறது என்று புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களில்லை. கீழ்நிலையிலுள்ள அதிகாரிகளிடமோ பேசிப் பலனில்லை. இவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதென்பது, குணங்கெட்ட மாமியாரிடம் மருமகள் நல்ல பெயர் வாங்குவதற்கு சமமாகும். இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அன்பர் அன்னையை மட்டும் முழுமையாக நம்பினார். பணம் கொடுத்துப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவர் மனம் உடன்படவில்லை. நம்முடைய சேவை ஸ்தாபனத்தில் என்ன நடக்கிறது என்பதை உண்மையாக எடுத்துச் சொல்வோம். அவர் ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளட்டும் என்ற முடிவுடன் அன்பர் வரித்துறை அதிகாரியை சந்தித்து உள்ளதை உள்ளபடி சொன்னார். கால் மணி நேரம் கேட்டுக் கொண்ட அந்த உயரதிகாரி வரி விலக்குக் கேட்கும் உங்கள் கோரிக்கை நியாயமானது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ரத்தான வரி விலக்கை நான் மீண்டும் அனுமதிக்கிறேன் என்று அன்பர் ஆச்சரியப்படும் வகையில் பதிலளித்தார்.

திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களுக்கு அழகோ, இளமையோ, படிப்போ, பணமோ, ஏதோ இருக்க வேண்டும். இப்படி எதுவுமேயில்லாதப் பெண்களுமுண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு வயதும் ஆகிவிடும். இவர்களுக்கெல்லாம் அன்னையிடத்தில்தான் வழியுண்டு. இவ்வளவு துரதிர்ஷ்டம் இருந்தாலும், அன்னையிடம் வரக்கூடிய அந்தவொரு அதிர்ஷ்டமாவது இப்படிப்பட்ட துர்பாக்கியசாலியான பெண்களுக்கு இருக்கிறது. திருமணத்திற்கே வழியில்லாமல் அன்னையிடம் வந்த ஒரு துர்பாக்கியசாலியான பெண்ணிற்கு, யாருமே எதிர்பார்க்காத வகையில் கெனடாவிலிருந்து மாப்பிள்ளை ஒருவர் வந்து, சிறப்பாகத் திருமணம் செய்து கொண்டு, கெனடாவிற்கும் தன்னுடன் அழைத்துப் போனார். தன்னுடைய சொந்தக் குடும்பமே திருமண விஷயத்தில் அலட்சியமாக இருந்த பொழுது, கெனடாவிலிருந்து ஒரு வரன் வருவார் என்று எதிர்பார்க்க முடியுமா?

  1. அடுத்ததாக நான் வலியுறுத்த விரும்புவது அன்னையின் அருள், பணத்தைவிடப் பண்புகள் மூலம் சிறப்பாகச் செயல்படுவதாகும்.

மனிதன் முன்னேறுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் பிரதானமாக இருப்பது values என்று சொல்லலாம். பண்புகள் பிரதானமாக செயல்படும் இடம் business துறையாகும். ஆனால் பொதுவாக இத்துறையில் சுயநலமும், போட்டி மனப்பான்மையும்தான் பிரதானமாகக் காணப்படுகிறது. பொதுவாக அடுத்தவரை வீழ்த்தித்தான் தான் முன்னேற முடியும் என்று business துறையில் நம்புவார்கள். போட்டி மனப்பான்மை அவ்வளவு மிகுந்த துறையாகும் இது. ஆனால் கடந்த இருபது, இருபத்தைந்து வருடங்களாக விஷயங்கள் மாறி வருகின்றன. பண்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றன. தமிழ் சினிமாத் துறையிலேயே இதற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுக்கலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பாபா என்ற ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியடைந்து, ஏராளமான விநியோகஸ்தர்கள் பெருநஷ்டமடைந்தார்கள். பொதுவாக தமிழ் சினிமாத் துறையில் எந்தப் படமாவது பெரு நஷ்டமடைந்தால், படத்தில் நடித்த ஹீரோ நஷ்டத்திற்குப் பொறுப்பேற்பதில்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்த் அவர்கள் அப்படத்தின் தோல்விக்கும், நஷ்டத்திற்கும் தான் பொறுப்பேற்க முன்வந்து, கோடிக்கணக்கில் நஷ்டஈடு வழங்கினார். அவர் எடுத்த முயற்சி வீண் போகவே இல்லை. அவருடைய அடுத்தப் படமான சந்திரமுகி அபார வெற்றி பெற்று, அவர் நஷ்டஈடாகக் கொடுத்தப் பணத்தை எல்லாம் மீட்டுவிட்டார். அவர் அன்னை பக்தரா? அன்னையை வழிபடுகிறாரா? என்பதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் அன்னைக்குகந்த பண்புகளைக் கடைபிடிக்கும் பொழுது அன்னை அவருடனிருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் தன்னுடைய தொழிலின் பண்புகளைக் கடைபிடிக்கும் பொழுது அன்னை அவரை கவனிக்கிறார், ஊக்குவிக்கிறார், பாராட்டுகிறார்.

ஆகையால், அன்னைக்குகந்த பண்புகள் பாராட்டப்படும் இடத்தில் அவர் கண்டிப்பாக இருக்கிறார் என்று நாம் சொல்லலாம். உதாரணமாக அமெரிக்கர்களுக்கு அன்னையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் பாராட்டக்கூடிய பண்புகளான கடின உழைப்பு, திறமை, முன்னேறுவதில் காட்டும் ஆர்வம், அடுத்தவர் கண்ணோட்டத்தை மதித்தல், எந்தப் பிரச்சினையையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியம் என்றிவையெல்லாம் அன்னைக்கு மிகவும் உகந்த பண்புகள். அப்படியிருக்கும் பொழுது அந்த அளவில் அன்னை அவர்களோடு இருக்கிறார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். மேற்பார்வையாக பார்த்தால் பெரிய முதலீடு மற்றும் பெரிய டெக்னாலஜி இவைதான் அமெரிக்காவை பணக்கார நாடாக்கின என்று நமக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சற்று ஆழ்ந்து நோக்கினால் அது முழு உண்மை இல்லை என்று தெரிய வரும். எந்த ஒரு நாடும் எடுத்த எடுப்பிலேயே பெரிய முதலீடு எல்லாம் போட்டு பெரிய அளவில் தொழில் ஆரம்பிப்பதில்லை. சிறு அளவில்தான் ஆரம்பிக்கின்றனர். அந்த சிறிய முதலீட்டை படிப்படியாக வளர்த்துப் பெரிதாக்குவது தொழிலுக்கு உதவக்கூடிய பண்புகளான கடின உழைப்பு, திறமை மற்றும் organisation போன்றவைகளாகும். கடின உழைப்போடு அறிவை சேர்த்தால் பிஸினஸ் வளர்ச்சி பிரமாதமாக இருக்கும். உதாரணமாக Marriot Hotel இன்று உலகமெங்கும் பிரபலம் அடைந்துள்ளது.

அதற்குக் காரணமே Standard Operating Procedures என்று அவர் கண்டுபிடித்ததுதான். சிக்கலான வேலைகளையும் எளிமைப்படுத்தி அவற்றை step-by-step வேலைகளாக மாற்றும் பொழுது பெரிய ஹோட்டல் நிர்வாகம்கூட யாரும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய எளிய வேலையாக மாறுகிறது. ஆகவே இந்த stepக்களைப் பின்பற்றக்கூடிய எவரும் Marriot Hotels புதிய கிளையைத் துவக்க தகுதி பெறுகிறார்கள் என்றாகிறது. இம்மாதிரி Andrew Carnegie என்ற அமெரிக்க மில்லியனரும் ஒரு புதிய அணுகுமுறையைத் தன் பிஸினெஸில் கடைப்பிடித்தார். Cost Accounting அணுகுமுறையை கடைப்பிடித்து இதில் அபார பலன் கண்டார். Cost Accountingபடி நாம் பார்க்கும் பொழுது மேலோட்டமாக விலை மலிவாகத் தெரிகின்ற பொருட்கள் எல்லாம் உண்மையில் விலை அதிகமாகத்தான் காட்டும். அதை வைத்துக் கொண்டு எது தொழிலுக்குத் தேவையானது, எது தொழிலுக்குத் தேவையில்லாதது என்பதைக் கண்டுபிடித்து, தேவையில்லாததை எல்லாம் விலக்கி, ஏராளமான விரயத்தைத் தவிர்க்கலாம். விரயத்தைக் குறைக்க, குறைக்க லாபம் அந்தளவிற்கு அதிகமாகும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி தன்னுடைய தொழிலில் ஏராளமான விரயத்தைத் தவிர்த்து தான் செய்த தொழிலில் எல்லாம் அபார லாபத்தைக் காட்டினார்.

பண்புகள் சாதிக்கக் கூடியதற்கு அளவேயில்லை. ஹிட்லர் இங்கிலாந்தைத் தாக்கிய பொழுது, இங்கிலாந்து, ஜெர்மனிக்கு ஆயுத பலத்தில் சமமாகவேயில்லை. இருந்தாலும் அந்நாட்டின் பிரதமர் சர்ச்சில் அவர்கள் மிகப்பெரிய தைரியசாலி. தன்னுடைய சிறந்த பேச்சாற்றல் மூலம் அதே தைரியத்தை அந்நாட்டு மக்களுக்கும் அவர் வழங்கினார். அந்த தைரியத்தால் ஊக்கம் பெற்ற இங்கிலாந்தும் சரண்டராகும் என்று ஹிட்லர் எதிர்பார்த்த பொழுது சரண்டராகாமல் வீறு கொண்டெழுந்து, பலமாகப் போரிட்ட ஹிட்லரைப் பின்வாங்கச் செய்தது. அடிமை நாடாக இருப்பதைப் பற்றி வெட்கமேபடாத இந்தியர்களின் தேசபக்தியை எழுப்பி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் ஆங்கில அரசை நிலைகுலைய வைக்கலாம் என்று காந்திஜி அவர்கள் மக்களுக்குப் புரிய வைத்து அதில் வெற்றி கண்டார். அமெரிக்காவில் 1929ஆம் ஆண்டு ஸ்டாக் மார்க்கெட் crashஆகி அதனால் வங்கிகள் எல்லாம் திவாலான பொழுது, அப்பொழுதிருந்த அமெரிக்க அதிபர் FDR அவர்கள் மக்களிடையே ரேடியோவில் பேசினார். "எதற்காக கவலைப்படுகின்றீர்கள்? நம்முடைய தொழிற்சாலைகள், விளை நிலங்கள், நாம் நடத்தும் பிஸினெஸ்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. எதுவும் மறைந்துவிடவில்லை. நமக்குத் தன்னம்பிக்கைதான் போய்விட்டது. அந்தத் தன்னம்பிக்கை மீண்டும் வந்தால் நிலைமை சரியாகிவிடும். யாரும் வங்கிகளில் போட்டப் பணத்தை பயந்துபோய் எடுக்க வேண்டாம். எடுத்த பணத்தை தயவுசெய்து மீண்டும் அந்த வங்கிக்கே சென்று போடுங்கள்'' என்று இப்படி எல்லாம் பேசி, இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் மக்களிடையே வரவழைத்தார். அதுவொரு அதிசய மருந்து போல் வேலை செய்தது. அமெரிக்கப் பொருளாதாரம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது.

பண்புகளுக்குச் சிறந்த உதாரணமாக நாம் டார்சியையே காட்டலாம். திருமண proposal கொடுக்கும் பொழுது நிராகரிக்கப்படுவதோடு மட்டுமின்றி அவமானப்படுத்தப்படுகிறான். இப்படி அவமானப்படும் பொழுது யாருக்கும் கோபம்தான் வரும். மேலும் எலிஸபெத் அவனைப் பற்றி சொன்னவை எல்லாம் மிகவும் கசப்பானவை. "அவன் ஒரு சுயநலமி, ஆணவம் பிடித்தவன், மரியாதை தெரியாதவன், தான் திருமணம் செய்து கொள்ளக்கூடிய கடைசி ஆள் இவனாகத்தான் இருக்கும்'' என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறாள். கோடீஸ்வரனான டார்சிக்கு, லிஸி சொல்வதெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவனுக்கு எந்த அளவிற்குப் பக்குவம், sincerity இருக்க வேண்டும்? இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமின்றி இந்தக் குறைபாடுகளிலிருந்து விடுபட்டு அவள் எதிர்பார்க்கும் வகையில் ஒரு நல்ல ஜென்டில்மேனாக மாறவும் முன்வருகிறான். அப்படி அவன் திருவுருமாற எடுத்த முயற்சி உண்மையானது என்பதால்தான் அவனைப் பார்க்கவே பிடிக்காத லிஸி அவன் இருக்குமிடத்திற்குத் தேடி வருகிறாள். நாம் இப்படி நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் ஏற்காமல் வெறும் தம் பண பலத்தைக் காட்டி லிஸியின் மனத்தைக் கவர முயற்சி செய்திருந்தால், அதெல்லாம் பலித்திருக்குமா? பணம்தான் விரயமாகி இருக்குமே தவிர அவன் நினைத்தது எதுவுமே நடந்திருக்காது. இந்த இடத்தில் டார்சியையும், காலின்ஸையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நமக்கு விஷயமே புரியும். டார்சிக்காவது ஏன் இவள் தன்னை வெறுக்கிறாள் என்ற விவரம் புரிந்தது. புரிந்ததை ஏற்று மனம் மாறுகிறான், அவள் கிடைக்கிறாள். ஆனால் காலின்ஸிற்கோ அவள் ஏன் தன்னை நிராகரிக்கிறாள் என்ற கேள்வியே வரவில்லை. அந்த கேள்வி கேட்கவும் அவன் தயாராகவில்லை. உண்மையைக் கண்டறிந்து மாறவும் அவன் முன்வரவில்லை.

  1. மூன்றாவதாக நான் வலியுறுத்த விரும்புவது perfection ஆகும். அதிலும் அன்னை perfect perfectionஐ விரும்புகிறார்.

அப்படிப்பட்ட perfectionஐ நாம் detailsகளில் கொண்டு வந்தால், அன்னைக்கது மிகவும் உகந்ததாக இருக்கும். Perfection என்றால் உண்மையில் perfection in details என்றுதான் வரும். முக்கியமான விஷயங்களில் perfectஆக இருக்கிறேன், முக்கியமில்லாத விஷயங்களில் ஏனோதானோ என்றிருக்கிறேன் என்று சொல்வது perfection ஆகாது. ஒருவர் பொய் சொல்லமாட்டார் என்றால், சின்ன விஷயம், பெரிய விஷயம் என்ற இரண்டிலும் பொய்யே சொல்லமாட்டார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மகாபாரதத்தில் தர்மபுத்திரர் பொய் சொல்லமாட்டார் என்று பெயர் வாங்கியவர் என்றால், உண்மையில் எதற்கும் பொய் சொல்லாமல் இருந்தார். அப்படி அவர் பொய்யை அறவே ஒழித்ததால்தான் அப்படி ஒரு நல்ல பெயர் அவருக்குக் கிடைத்திருக்கிறது. சுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் தம் வீட்டு ஹால் மற்றும் பூஜை அறை என்று நாலு பேர் வந்து போகின்ற இடங்களில் மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு, படுக்கையறை, சமையலறை, குளியலறை, ஸ்டோர் ரூம் என்று இவற்றையெல்லாம் அசுத்தமாக வைத்திருந்தால் அவர் சுத்தமானவர் என்று நாம் ஏற்றுக் கொள்வோமா? நாம் வீட்டில் எங்கு சென்றாலும் நம் கண்ணில் தூசோ, கறையோ, அழுக்கோ படாமல் எல்லா இடங்களும் யூனிபாமாக பளிச்சென்று இருந்தால்தான் நாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் இப்படியும் நினைத்துப் பார்க்கலாம். ஓர் அலுவலகத்தில் இருப்பவர்கள் மரியாதையாகப் பழகுவார்கள் என்று சொன்னால் அந்த மரியாதை என்பது கடைநிலை ஊழியர்களிடமிருந்து, தலைமை அதிகாரி வரை வெளிப்பட்டால்தான் அந்த அலுவலகத்தை மரியாதைக்குரிய இடமென்று எடுத்துக் கொள்வார்கள். உயர்மட்ட அதிகாரிகள் மரியாதையாகப் பழகுவார்கள், ஆனால் கீழுள்ளவர்கள் எல்லாம் மரியாதைக் குறைவாகத்தான் பழகுவார்கள் என்றால் அந்த அலுவலகத்தை நாம் மரியாதைக்குரிய அலுவலகம் என்று சொல்லமாட்டோம்.

இதே உண்மையை நாம் பல இடங்களில் பொருத்திப் பார்க்கலாம். ஒரு கம்பனி efficientஆக செயல்படுகிறதென்றால், அந்த efficiency எல்லா இடங்களிலும் வெளிப்பட்டால்தான் அது உண்மையாக இருக்கும். உற்பத்திப் பிரிவில் efficiency இருக்கிறது. ஆனால் அதே efficiency விற்பனை பிரிவிலோ, பொது நிர்வாகத்திலோ, கணக்கு வைப்பதிலோ இல்லை என்றால் அந்தக் கம்பனி அவ்வளவாக பரிமளிக்காது. Steve Jobs அவர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொண்டார். ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் கம்பனியுடைய products எல்லாம் கஸ்டமர் கண்ணோட்டத்திலிருந்து எவ்வளவு perfectஆக செய்ய முடியுமோ அவ்வளவு perfectஆக செய்வது என்ற தீர்மானம் பூண்டார். கஸ்டமர் எதிர்பார்க்கும் perfection என்ன என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டார். கஸ்டமர்கள் product அழகாக இருக்க வேண்டும் என்றால் ஓரமெல்லாம் ஸ்கொயராக இல்லாமல் curvedஆக இருந்தால் அந்த அழகு வரும். இந்த அழகைக் கொண்டுவர அவர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். ஆப்பிள் கம்ப்யூட்டருடைய Ipad, Ipod எல்லாமே அவற்றில் அடங்கியுள்ள softwareகளை எடுத்துக் கொண்டீர்களென்றால் மிகவும் சிக்கலானவைதான். ஆனால் கஸ்டமர் கைக்கு வரும் பொழுது அவை எளிமையாக user friendlyஆக இருக்கும்படி Jobs பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெளிநாட்டிலுள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், பெரிய விமான நிலையங்கள் மற்றும் நூலகங்கள் என்று அந்த இடத்தை எல்லாம் பார்ப்பவர்கள் இவ்விடங்களில் காணப்படும் சுத்தம் மற்றும் நேர்த்தியைக் கண்டு அசந்து போகிறார்கள். நம்முடைய உள்ளூர் நூலகங்களில் ஒரு புத்தகத்தைத் தேடி எடுப்பதென்றால் மிகவும் சிரமமான காரியம். அது முதலில் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்து எடுப்பதற்குள் நமக்கு அளவு கடந்த எரிச்சல் வந்துவிடும். அமெரிக்காவில் லைப்ரரி ஆப் காங்கிரஸை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு நூலகத்தில் முப்பது, நாற்பது லட்சம் புத்தகங்களுக்கு மேல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அவ்வளவு புத்தகங்கள் இருக்கின்ற இடத்தில் நமக்கு வேண்டிய ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை 5 நிமிடங்களில் எடுத்துவிடலாம் என்றால், அந்த நூலகத்தை எவ்வளவு perfectஆக அவர்கள் வைத்திருப்பார்கள் என்று நமக்குப் புரிகிறது. அம்மாதிரியே ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று எடுத்துக் கொண்டால், ஒரு சராசரி டிபார்ட்மெண்ட் ஸ்டோருடைய பரப்பளவு 1 லட்சம் சதுர அடியாவது இருக்கும். அங்கே ஒரு லட்சம் வகையான பொருட்களையும் அடுக்கி வைத்திருப்பார்கள். அத்தனைப் பொருட்களும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த லட்சம் சதுரடி பரப்பளவும் சுத்தமாக பளிச்சென்று காட்சியளிக்கிறதென்றால் perfectionஐக் கொண்டுவர அவர்கள் எந்த அளவு முயற்சி எடுக்கிறார்கள் என்று நமக்குப் புரிய வேண்டும். இம்மாதிரியே நியூயார்க் விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 1,60,000 பேர்கள் இறங்குதல், ஏறுதல் போன்ற வேலைகள் நடக்கின்றன. இவ்வளவும் நேரம் தவறாமல் நடக்க வேண்டும், இவ்வளவு பேர் புழங்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், அந்த விமான நிலைய நிர்வாகிகள் எவ்வளவு பெரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

Perfection in details என்பதை அன்னை மிகவும் வரவேற்கிறார், வலியுறுத்துகிறார் என்பதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். பூரண யோகமே இதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. இறைவனை நம்முடைய ஆன்மா மட்டுமின்றி அதோடு சேர்ந்து நம்முடைய அறிவு, உணர்வு, உடம்பு என்று எல்லாமுமே இறைவனை நாட வேண்டும் என்று கேட்கிறார். இப்படிப் பூரண ஜீவனும் இறைவனை நாடுவதுகூட அவருக்குத் திருப்தி தரவில்லை. இதையும் தாண்டி நம் உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லும் தன் இறையார்வத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் சத்திய ஜீவியம் ரெஸ்பான்ஸ் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு செல்லும் இறையார்வத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரென்றால் அன்னை perfection in detailsஐ விரும்புகிறார் என்பதற்கு இதைவிட பெரிய நிரூபணமே தேவையில்லை.

  1. அடுத்ததாக நான் வலியுறுத்த விரும்பும் விதிமுறை சவால்களும், நெருக்கடிகளும்தான் மனிதனுடைய திறமையையும், சாதனையையும் மேம்படுத்துகின்றன என்பதாகும்.

அன்னையை நாம் கருணையுள்ளம் கொண்ட தாயாராக மட்டுமே பார்க்கிறோம். அது அவருடைய ஒரு அம்சம்தான். அவருக்கு வீராங்கனை என்ற மற்றொரு அம்சமும் நிறையவே உண்டு. வாழ்க்கை வழங்கும் challengeகளை அவர் விரும்பி எதிர்கொள்வார். அல்லது தனக்குத் தானே challengeகளை உண்டுபண்ணிக் கொள்வார். அப்படி தனித்தே அவரால் பூரண யோகத்தை உச்ச கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று தெரிந்ததால்தான், பகவான் அவரை 1950லேயே தனியே விட்டுப் பிரிந்தார். அன்னையை அடிக்கடி நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள முடிந்ததால் பல ஆசிரமவாசிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள். அப்படி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த அன்பர்களிடம் ஒரு நாள் அன்னை அவர்கள் என்னை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதில் என்ன challenge இருக்கிறது? ஒன்றுமில்லை. நான் உங்களின் ஜீவனின் ஆழத்திலிருக்கிறேன். அந்த ஆழத்தில் என்னைக் கண்டுபிடித்து அந்த நிலையில் நீங்கள் என்னுடன் உறவாட வேண்டும். அதுதான் எனக்கு சந்தோஷம் கொடுக்கும் என்றார். இப்படி அன்னை சொல்வார் என்று அன்பர்கள் எதிர்பார்த்திருப்பார்களா? அவர் அன்பர்களுக்குப் பொதுவாக வழங்கிய அறிவுரையே என்னவென்றால், எப்பொழுதும் உங்கள் அதிகபட்ச முயற்சியையே நீங்கள் எடுக்க வேண்டும், இது கடினமாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்.

வாழ்க்கையில் இப்படி சோதனைகளையும், challengeகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னுக்கு வந்த உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன. இஸ்ரேல் நாடே இதற்கு ஒரு நல்ல உதாரணம். ஐரோப்பிய யூதர்கள் இஸ்ரேலில் குடியேறிய பொழுது அங்கு எந்த வசதியும் இல்லை. பாலைவன சூழல்தான் நிலவியது. அது மட்டுமின்றி சுற்றியுள்ள அரபு மக்களும் அவர்களுடைய வரவை வரவேற்கவில்லை. போருக்கு வந்தார்கள். 1948ஆம் வருடம் இஸ்ரேல் சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் பொழுது சுற்றியிருந்த எல்லா அரபு நாடுகளும் உடனே போர் தொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதிதாக உதயமாகும் ஒரு சிறிய நாட்டை சுற்றியிருக்கும் 5 அல்லது 6 அரபு நாடுகள் உடனே வன்மையாகத் தாக்கும் என்ற ஆபத்தான நிலைமையை நம்மால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? அந்த நிலைமையில் யாராவது இருக்கப் பிரியப்படுவார்களா? பிடிக்கிறதோ, இல்லையோ அந்த நிலையில்தான் இஸ்ரேல் அன்று இருந்தது. அப்போதிருந்த இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் அமெரிக்க யூதர்களிடம் ஆதரவு திரட்டலாம் என்று அமெரிக்கா விரைந்தார். அங்கு நடந்து கொண்டிருந்த யூதர் மாநாடு ஒன்றில் பேச அனுமதி கேட்டார். உங்கள் பிரச்சினையை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு இதில் ஆர்வமில்லை என்று நிர்வாகிகள் மறுத்தார்கள். மீண்டும் காலில் விழாத குறையாகக் கெஞ்சி சிறிது நேரம் பேச வாய்ப்புப் பெற்றார். கிடைத்த அந்த சிறிது நேரத்தில் இஸ்ரேல் இருக்கும் ஆபத்தான நிலைமையைப் பற்றி உருக்கமாக வந்திருப்பவர்கள் மனதைத் தொடும்படி பேசினார். பார்வையாளர்கள் வழங்கிய response கற்பனையையும் மிஞ்சியது. அடுத்த அரை மணி நேரத்தில் லட்சக்கணக்கான டாலர்கள் நிதியுதவியாகக் குவிந்தன. செய்தித்தாள்கள் வாயிலாக விஷயம் காட்டுத்தீ போல் அமெரிக்கா முழுவதும் பரவியது. ஆயுதங்கள் வாங்கவும், போர்க்கால நெருக்கடியை சமாளிக்கவும் 100 மில்லியன் டாலர்கள் குவிந்தன. மேயரும் சந்தோஷமாக நாட்டிற்குத் திரும்பினார். வாழ்வா, சாவா என்ற அந்த அரை மணி நேர challengeஐ அந்த அம்மையார் வெற்றிகரமாக சமாளித்ததால்தான், இஸ்ரேல் இன்னமும் ஒரு நாடாக விளங்குகிறது.

இதைப் போலவே இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் விளைவித்த சேதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவ்வளவு உயிர் சேதமும், பொருட்சேதமும் விளைவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட சேதத்திலிருந்து மீண்டு வர ஐரோப்பிய நாடுகள் எடுத்த முயற்சி மிகப்பெரிய முயற்சியாகும். அதே நிலைக்கு இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் தள்ளப்பட்டிருந்தால், மீண்டும் எழுந்திருக்கவே 50 வருடங்களாகும். அமெரிக்க நிதியுதவி கிடைத்தது என்றாலும், அதை முறையாக, திறமையாகப் பயன்படுத்திய ஐரோப்பிய மக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 1945இல் போர் முடிந்தது. 1955இல், அதாவது 10 ஆண்டுகளில் அந்த நாடுகள் எல்லாம் மீண்டு எழுந்துவிட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்காவின் நிதியுதவி வேண்டாமென்று மறுத்த சோவியத் யூனியன் தன்னுடைய சொந்த பலத்தால் மட்டுமே முன்னேறியது. இப்படி ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்திய முன்னேற்றத்தைக் கண்டு, International Labour Organisation என்ற சர்வதேச அமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 500 ஆண்டுகளில் அடையக்கூடிய முன்னேற்றத்தை ஐரோப்பிய நாடுகள் 50 ஆண்டுகளிலேயே சாதித்துக் காட்டியிருக்கின்றன என்று தாராளமாகப் பாராட்டியது.

இன்று உலகம் மீண்டும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நிலை மிகவும் மந்தமாகிவிட்டது. ஸ்பெயின் நாட்டில் 25% மேல் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் எந்த நாட்டிலும் புரட்சி வெடிக்கும். நெருக்கடியை தீர்த்து மீண்டும் சகஜ நிலைக்கு வருவதற்கு பொருளாதார நிபுணர்களுக்கே வழி தெரியவில்லை. பணம் மற்றும் பொருளாதாரத்தை சமூகத்தின் அங்கமாக சேர்த்து வைத்துப் பார்த்துக் கையாள வேண்டும். இப்படி சேர்த்து வைத்துப் பார்க்காமல் பிரித்துப் பார்த்ததின் விளைவுதான் இன்றைய பொருளாதார நெருக்கடி. ஒரு முழுமையான கண்ணோட்டத்திலிருந்து செயல்பட்டால்தான் இன்றைய உலக பொருளாதார பிரச்சினை தீரும். இன்று உலகம் ஒன்றாகிவிட்டது. அதற்கு நிரூபணமாக உலக அரசாங்கம் ஒன்று எழ வேண்டும். உலகத்துப் பொருளாதார பிரச்சினைக்கு உலகத்து சார்பாக முடிவு எடுக்கப்பட வேண்டும். இப்பொழுது இருக்கின்ற போட்டி மனப்பான்மை நீங்கி தேசங்கள் ஒற்றுமையாக செயல்பட முன்வந்தால் இருக்கின்ற பொருளாதார பிரச்சினைகள் மாயமாக மறையும். ஆகவே உலக அரசாங்கத்தை இனிமேல் தள்ளிப்போட முடியாது என்பதை உலக மக்களுக்கு உரைக்குமாறு உணர்த்தவே இயற்கை இப்படியொரு கடுமையான சோதனையை நமக்கு வழங்கி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து யுனைட்டெட் நேஷன்ஸ் போன்ற சர்வதேச அமைப்புகள் உடனடியாக உலக அரசாங்கம் அமைப்பதற்குச் செயல்பட்டால் இன்று பெரிய நெருக்கடியாக நம்மை வாட்டிக் கொண்டிருப்பது பெரிய அதிர்ஷ்டமாக மாறும்.

  1. ஐந்தாவதாக அன்னைக்குகந்த விதிமுறையாக நான் எடுத்துப் பேச விரும்புவது, அடுத்தவர் கண்ணோட்டத்தில் உள்ள உண்மையை ஏற்பதாகும். அதை அன்னை பெரிதும் வரவேற்கிறார்.

எவர் ஒருவர் அடுத்தவர் கண்ணோட்டத்திலுள்ள உண்மையை ஏற்க முன்வருகிறாரோ அந்த அளவிற்கு அவருடைய அறிவு சத்திய ஜீவிய விரிவாக்கம் பெறுகிறது என்று என் தந்தையார் சொல்கிறார். கருத்து வேறுபாட்டால் இன்று எவ்வளவோ விஷயங்கள் கெட்டுப் போயிருக்கின்றன. ஆகவே அந்த இடத்தில் கருத்து வேறுபாட்டை விலக்கி, கருத்து ஒற்றுமையைக் கொண்டு வந்தால், அங்கே அன்னையின் அருள் பிரமாதமாக செயல்படும். வாங்குபவர்க்கும் விற்பவர்க்கும் விலை படியாமல் போவதால் பல வருடங்களாக அந்த ற்ழ்ஹய்ள்ஹஸ்ரீற்ண்ர்ய் நடக்காமலிருப்பதுண்டு. மனைவி விரும்பிய ஆசைகளைக் கணவன் பூர்த்தி செய்ய மறுப்பதால், இல்லற வாழ்க்கை பல வருடங்களாகக் கசந்து போகிறது. ஊழியர்களின் கோரிக்கைகளை மேனேஜ்மெண்ட் ஏற்க மறுப்பதால் பல வருடங்களாக கம்பனி லாபகரமாக இயங்காமல் போகிறது. குடிமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வராத அரசாங்கம் வருடக்கணக்காக மக்களுடைய வெறுப்பிற்கு ஆளாகிறது.

இப்படி இரு எதிர் துருவங்களாக செயல்படுகின்றவர்கள் பரஸ்பரம் மற்றவர் கருத்திலுள்ள உண்மையை ஏற்று செயல்பட்டால் வாழ்க்கை எவ்வளவோ சிறப்பாக இருக்கும். விற்பவன் விலையைக் குறைத்து, வாங்குபவன் சற்று விலையை ஏற்றினால், பல நாள் தடைபட்டு வந்த transaction உடனே முடிந்துவிடும். மனைவி சொந்தமாக வேலை செய்து சம்பாதித்தால் தனக்கு அடங்கமாட்டாள் என்றால், கணவனுக்கு இருக்கின்ற பயத்தை மனைவிமார்கள் எடுத்தால் இல்லற வாழ்வில் அதுவரை இல்லாத சுமுகம் வந்துவிடும். கம்பனியின் வருமானம் உயரும்பொழுது ஊழியர்களின் சம்பளமும் உயர்வதுதான் முறை என்று மேனேஜ்மெண்ட் பெருந்தன்மையாக சம்பளத்தை உயர்த்த முன்வந்தால், அதே சமயத்தில் அதிக சம்பளம் கொடுக்கின்ற கம்பனிக்கு இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களும் முன்வந்தால், கம்பனி தொடர்ந்து லாபகரமாகவே இயங்கிக் கொண்டிருக்கும். இம்மாதிரியே குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய முன்வரும் பொழுது அரசாங்கத்திற்குத் தேவையான வரிப் பணத்தை மக்களும் ஆர்வமாகக் கொடுக்க முன்வந்தால், இரு பக்கமும் ஒத்துழைப்பு இருக்கும் பொழுது அரசாங்கம் மற்றும் குடிமக்களிடையே உள்ள உறவு என்றென்றும் சுமுகமாகவே இருக்கும்.

கருத்து வேறுபாடு என்பது சிறு அளவில் மட்டுமின்றி பெரிய அளவில் தேசங்களிடையேயும் இருக்கிறது. உதாரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயுள்ள பிரச்சினை 60 வருடங்களுக்கு மேலாக இருப்பதைப் பார்க்கிறோம். அம்மாதிரியே காஷ்மீரை ஒட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையேயுள்ள பிரச்சினை இன்றளவில் தீர்க்கப்படாததையும் பார்க்கிறோம். யூதர்களுக்கோ பாலஸ்தீனியர்களுக்கோ இருவருக்கும் வாழ பரஸ்பர உரிமையில்லை என்று இரு கட்சியினரும் இத்தனை வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதில் என்னதான் உண்மை இருக்கிறது? இவர்களை விட்டால் இம்மாதிரியே காலம் முழுவதும் பேசிக் கொண்டிருப்பார்கள். பிரச்சினையே தீராது. இதில் ஆன்மீக உண்மையென்ன? அன்னையைப் பொருத்தவரை இஸ்ரேலும் அவர் குழந்தைதான், பாலஸ்தீனமும் அவர் குழந்தைதான். தனக்கு 2 குழந்தைகள் இருந்தால், அந்த 2 குழந்தைகளும் வாழ வேண்டும் என்றுதானே எந்தத் தாயாரும் நினைப்பார்? தெய்வத் தாயாரும் இப்படித்தான் நினைக்கிறார். இப்படி 2 குறுகிய கண்ணோட்டங்களையும் தாண்டி மூன்றாவதாக உள்ள பெரிய கண்ணோட்டத்திற்கு இவர்கள் வந்தார்களென்றால், ஒருவரை மற்றொருவர் வாழ அனுமதித்தால், இத்தனை நாள் பிரச்சினையாக இருந்தது வெகுவிரைவில் சுமுகமான தீர்வாக மாறிவிடும். உலக மக்களின் தேவைகளை எல்லாம் ஆண்டவன் பூர்த்தி செய்வதை நாம் பார்க்கிறோம். பணம் வேண்டும், வசதி வேண்டும், பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மக்கள் ஆண்டவனைக் கேட்டவண்ணம் இருக்கிறார்கள். ஆண்டவனும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மனிதன் தான் மாறாமல் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கும் வரையிலும் இது one way relationshipஆகத்தான் இருக்கும். இப்படியில்லாமல் அன்னை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? இப்படி ஆண்டவனுக்கும் ஒரு சொந்த கண்ணோட்டம் உள்ளது என்பதை அன்பர்களாகிய நாம் ஏற்றால் வாழ்க்கை எவ்வளவோ தெய்வீகமயமாகிவிடும். அன்னை "அகந்தையை விட்டொழித்து ஆன்மாவை வெளிக் கொண்டு வா" என்கிறார். "அறிவு, உணர்வு, உடலை நம்பாமல் ஆன்மாவை நம்பு" என்கிறார். பெற்றுக் கொள்வதில் கிடைக்கும் இன்பத்தைவிட self-giving செய்வதில் இன்பம் அதிகம் என்று சொல்கிறார். இப்படி நமக்கென்ன வேண்டும் என்று அதை மட்டும் கேட்பதைத் தவிர்த்து, அன்னையின் திருவுள்ளம் பூர்த்தியாக என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று செய்ய முன்வந்தால் அன்பர்கள் வாழ்வு அடையாளமே தெரியாத அளவிற்கு ஆனந்தமயமாகிவிடும்.

  1. ஆறாவதாக நான் வலியுறுத்த விரும்பும் விதிமுறை என்னவென்றால் Infiniteஆக இருப்பதுதான் நம்மிடையே finiteஆக காட்சியளிக்கிறது.

Finite, Infiniteஆக மாற்றும் இரகசியம் தெரிந்தவர்களுக்கு அவர்களுடைய சாதனைக்கு அளவே இல்லை. இன்று ஒரு microchipஇல் எண்ணற்ற புத்தகங்களை அடக்கலாம் என நாம் பார்க்கிறோம். அணுவை பிளந்தால், அவ்வளவு பிரம்மாண்டமான எனர்ஜி வெளிப்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? ஜப்பான் தேசம் பரப்பளவிலும் சரி, ஜனத்தொகையிலும் சரி, சிறிய நாடாகத்தான் கருதப்படும். ஆனால் அதன் GDPஐப் பார்த்தோம் என்றால், உலகப் பொருளாதாரத்தில் அது 2ஆம் இடத்தில் இருக்கிறது. சைனாவில் நட்ஹய்ஞ்ட்ஹண் என்றொரு சிட்டியுள்ளது. அந்த ஒரு சிட்டி ஒரு வருடத்திற்குச் செய்யும் ஏற்றுமதி இந்தியா முழுவதும் செய்யும் ஏற்றுமதியைவிட அதிகம் என்று சொல்லப்படுகிறது. விரிந்து பரந்து கிடக்கும் வானில் உள்ள எல்லா நட்சத்திரங்களையும் நாம் ஒரே ஒரு டெலஸ்கோப் மூலமாகவே பார்க்கலாம். சிறிய நாடான இஸ்ரேலில் ஒரு ஏக்கரில் இந்தியாவைவிட அதிகமாக ஆரஞ்சு பழங்களை விளைவித்துக் காட்டுகிறார்கள். பல பெரிய அமெரிக்கன் கார்ப்பரேஷன்கள் பல சிறிய நாடுகளைவிட பெரிய பட்ஜெட்டைக் கொண்டுள்ளன. மேலும் உலகத்துக்கே தேவையான consumer goodsஐ ஒரு அமெரிக்கக் கம்பனியே சப்ளை செய்யக்கூடிய வல்லமை கொண்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். உலகம் தோன்றிய நாளிலிருந்து ஆட்சி செய்து வந்த எமதர்மராஜாவை சாவித்ரி மூன்றே நிமிடங்களில் கரைத்துத் திருவுருமாற்றம் செய்து விடுகிறாள். ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் அண்மையில் வெளியிட்ட ஒரு Ipad model ஒரே நாளில் ஒரு பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஆர்டர்களை உண்டு பண்ணியது. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துகள்தான் உள்ளன. ஆனால் அந்த 26 எழுத்துகளும் சேர்த்துக் கோடிக்கணக்கான புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன. ரோமாபுரி நகரம் ரோம சாம்ராஜ்ஜியத்தையே நிறுவியது. சிறிய தீவு நாடான இங்கிலாந்து உலகமெங்கும் பெரிய சாம்ராஜ்ஜியங்களை நிறுவியது. காந்திஜி அவர்கள் ஒரு தனிமனிதர். அவருடைய வார்த்தைக்கு இந்தியா முழுவதுமே கட்டுப்பட்டு நின்றது. இம்மாதிரியே ஸ்டாலின் என்ற ஒரு சர்வாதிகாரிக்கு சோவியத் யூனியனே 20 வருடங்களுக்கு மேலாக அடிபணிந்து இருந்தது.

Finiteஆகக் காட்சியளித்தது எப்படி Infiniteஆக மாறுகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு நாம் சொல்லும் பதில் என்னவென்றால் அதை நாம் perfectஆக கையாண்டோமானால் அது தன் finite தன்மையை இழந்து Infinite தன்மையை வெளிப்படுத்துகிறது. நாம் microchip என்று சொல்வது வெறும் மணல்தான். அதன் chemical பெயர் silicon dioxide. இருந்தாலும் வெறும் மணலாக காட்சியளிப்பதை microchipஆக மாற்றும் இரகசியம் தெரிந்தால், வெறும் மணலுக்கு இலட்சம் மடங்கு ஆற்றல் அதிகரிக்கிறது. இம்மாதிரியே ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் வெடித்த அணு குண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் வெறும் 50 மில்லிகிராம் யுரேனியம்தான். எப்படி வெறும் 50 மில்லிகிராம் யுரேனியம் அவ்வளவு பெரியதாக வெடித்தது என்று கேட்டால் அது சாதாரண யுரேனியமே இல்லை. நியூக்லியர் செயின் ரியாக்ஷனை நிகழ்த்தக்கூடிய யுரேனியமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகு அதற்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான சக்தி வருகிறது. ரோமாபுரி என்ற ஒரு நகரம் எப்படி ரோம சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது என்று கேட்டால் ரோம் நகரத்துத் தலைவர்கள் சட்ட நிபுணர்களாக விளங்கினார்கள். சட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத நாட்களில் சாம்ராஜ்ஜியம் நிறுவியவர்கள் எண்ணற்ற சட்டங்களை இயக்கி அமல்படுத்தியதால் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தையே அவர்களால் கட்டிக்காக்க முடிந்தது. எப்படி Steve Jobs தன்னுடைய 23ஆம் வயதிலேயே 300 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார் என்று கேட்டால், யாரிடமும் இல்லாத ஒரு பெரிய individuality அவரிடமிருந்தது. கஸ்டமர்களை எல்லா வகையிலுமே மகிழ்விக்கக்கூடிய ஒரு பொருளைத்தான் உருவாக்க வேண்டும் என்ற வெறி தன்னுடைய நோக்கத்தில் வெற்றி கண்டு, அவ்வளவு பெரிய வருமானத்தை அந்த சிறு வயதிலேயே அவருக்குத் தேடித் தந்தது. Perfectஆக இருக்கின்ற ஒரு மனிதன் உலகத்தையே காப்பாற்றலாம் என்று பகவான் சொல்லியிருக்கிறார் என்றால் அங்கே நாம் சிந்திக்க வேண்டும். ஒரு மகானுடைய ஆத்மா உலகத்தைவிடப் பெரியது என நாம் ஏற்க வேண்டும். அதனால்தான் அந்த ஆத்மாவிற்கு இறைவன் அளிக்கும் பரிசு அவருக்கு மட்டும் கிடைக்காமல், இந்த உலகத்திற்கே கிடைக்கிறது. Perfectஆக இருக்கும் ஆத்மா விழித்துக் கொள்ளும் பொழுது அது subliminal levelஇல் அகில உலகத்துடன் ஒன்றிவிடுகிறது. இப்படி உலகத்துடன் ஒன்றிப் போவதால் அதற்கு ஒரு நல்லது நடந்தால் அது அந்த உலகம் முழுவதற்கும் நல்லதாகக் கிடைக்குமாறு மாறுகிறது. மழை என்று பெய்தால் நம் நிலத்திற்கு மட்டும் பெய்யுமா? ஊர் முழுக்கத்தானே பெய்யும்? அன்பர் அனுபவத்தில் இதை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். தன் வருமானம் உயர வேண்டும் என்று அன்பர் பிரார்த்தனை செய்யும் பொழுது அவர் ஞ்ழ்ஹக்ங்இல் உள்ள அத்தனை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வருவதைப் பார்க்கிறோம். ஒரு அன்பர் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், அது போன்ற ஆசை கொண்ட எண்ணற்ற குடிமக்களுக்குப் பயன் தரும் வகையில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் புதிய சலுகைத் திட்டங்களை அறிவிப்பதைப் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நாம் அன்னை சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். சத்திய ஜீவிய திருவுருமாற்றத்திற்கான இரகசிய சாவி நம் உடம்பிலுள்ள தனிப்பட்ட செல்களின் இறையார்வத்தை தூண்டுவதில் இருக்கிறது என்கிறார். கண்ணுக்கே தெரியாத நுண்ணிய செல்களின் இறையார்வம் தூண்டப்பட்டுவிட்டதென்றால் அதற்கு ரெஸ்பான்ஸாக சத்திய ஜீவியமே இறங்கி வருமென்கிறார். Finite திருவுருமாறினால் Infiniteஐயும் அசைக்கவல்லது என்பதற்கு இதைவிட சிறந்த வேறு நிரூபணமே இல்லை.

அன்னை வழியில் சாதிப்பது என்பதைப் பற்றி இதுவரை ஆறு விதிமுறைகளைப் பற்றி பேசியிருக்கிறேன். இவற்றின் ஒட்டுமொத்த சாரமாவது, அளவு கடந்து சாதிக்க வேண்டுமென்றால் அளவு கடந்து அன்னையின் திருவுள்ளத்திற்கேற்ற பாத்திரமாக நாம் மாற வேண்டும். அப்படி மாறும்பட்சத்தில் வாழ்க்கை தினமும் அற்புதமாக மலர்வதைப் பார்க்கலாம்.

முற்றும்.

*******



book | by Dr. Radut