Skip to Content

13. அன்னை இலக்கியம் - மீன்கொடி

அன்னை இலக்கியம்

மீன்கொடி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

5. நான் வளர்ந்த விதம்

குடும்பமோ, உறவினர்களோ இல்லாதவரை அநாதை என்பார்கள். அவன் தனிமையில் உழன்று அகத்திலும், புறத்திலும் சமூக நிறுவனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பான்.

குடும்பமும், உறவினர்களும் இருந்தும் நான் எப்போதும் தனிமையில் உழலும் அநாதையாகத்தான் என்னை அறிந்திருக்கிறேன். நான் அகத்தில் சமூக நிறுவனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், புறத்தில் அந்த எல்லைகளுக்கு முழுக்க உட்பட்டவனாகவே நடந்து வந்திருக்கிறேன்.

பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் இன்னமும் விலங்குகளாகத்தான் இருக்கிறோம் என்பதை அறிவதில்லை. பெரும்பாலான குடும்பங்கள் தாங்கள் இன்னமும் வீடுகளாகத்-தான் இருக்கிறோம் என்பதை அறிவதில்லை. நான் சிறிய வயதிலேயே அதை அறிந்திருந்தேன்.

குடும்பம் என்பது புற அருகாமையாலோ, ஒன்றாக வாழ்வதாலோ உருவாவதில்லை. அகத்தில் பூசலார் ஒவ்வொரு கல்லாக தானே அடுக்கிக் கட்டியது போல, எவரிடமும் எதுவும் சொல்லாமல் மனிதன் தானாகவே கண்ணாடி பாளங்களை ஒவ்வொன்றாக அடுக்கி, பல வருடங்களில் கட்டும் கோவில் குடும்பம். குடும்பத்தினரில் ஒருவர் சின்னஞ்சிறு சொற்கல் எறிந்தாலும் பொடிப்பொடியாக நொறுங்கி விழக் கூடிய கண்ணாடிக் கோவிலது.

எனக்கு ஐந்து வயதாகும்போது என் அண்ணார்களும், அக்காவும் உயர்நிலை பள்ளிக்குச் சென்று விட்டிருந்தனர்.

அப்பாவும், அம்மாவும் எங்கோ போய்விட்டனர். பாட்டியும், சித்தப்பாவும் வேறு வீட்டில் இருந்தனர். தாத்தா நான் எழுமுன் கம்பெனிக்குச் சென்றுவிட்டு, நான் தூங்கியபின் வீடு திரும்புவார். கவர்னசத்தை எப்போதும் சிடுசிடுப்பார். பெரிய வீட்டில் பலர் நடுவே தனியாக வாழ்ந்தேன்.

என் அண்ணார்கள் போல, அக்கா போல பேசி, நடந்து கொள்ள முயன்றபோதெல்லாம் கேலிக்கு ஆளானேன். வயது வித்தியாசத்தின் காரணமாக, அவர்களது வயதிற்குரிய தன்மையின் காரணமாக நான் எத்தனை முயன்றும் அவர்களால் என்னோடு பழக முடியவில்லை. ‘ஓடாதே’, ‘ஆடாதே’, ‘பேசாதே’, ‘தொந்தரவு செய்யாதே’ போன்ற சொற்கள்தான் என் மூத்தவர்கள் என்னிடம் எப்போதும் பேசியவை.

குழந்தையை வேலைக்கு வைப்பது குற்றம் என்பது என் குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. குழந்தைக்கும் தெரியவில்லை. என் மூத்தவர்களின் அன்பைப் பெற வேண்டுமென்பதற்காக அவர்கள் சொல்லும் அத்தனை எடுபிடி வேலைகளையும் சலிக்காமல் செய்வேன். பதிலுக்கு ஒரே ஒரு அன்பான சொல்லும் கிடைத்ததில்லை. அவர்கள் என்னை துன்புறுத்தியதோ, கடுமையாகப் பேசியதோ இல்லை. அப்படிச் செய்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். அவர்கள் என்னை முழுமையாகப் புறக்கணித்தார்கள். தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, குற்றேவல் செய்ய மட்டுமே என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் அதிலேயே நான் நிறைவு காணத் தொடங்கி விட்டேன். மூத்தவர்கள் அப்படி இருப்பது நியாயமே என்று நம்பத் தொடங்கினேன். என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நான் தவறு செய்து விட்டது போல எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எவரிடமும் எதையும் கேட்டதில்லை. கேட்க முடிந்ததில்லை. நானாக எந்த முடிவும் எடுத்ததில்லை. எவரும் என் முடிவையோ, என்ன நினைக்கிறேன் என்றோ கேட்டது இல்லை. எவரேனும் இதைச் செய் என்று என்னிடம் சொன்னால் மட்டுமே நான் செயல்படுவேன்.

எவரும் அடுத்தவரைப் பற்றி தாத்தாவிடம் குறை சொன்னதில்லை என்பதால் வீட்டில் நடப்பது எதுவுமே தாத்தாவிற்குத் தெரிய வந்ததில்லை. நேரம் கிடைக்கும்போது மீசை தாத்தா மட்டுமே என்னை எங்காவது வெளியே அழைத்துச் சென்று உணவு விடுதிகளில் இனிப்பு ஏதாவது வாங்கித் தருவார். அப்போது தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி வேடிக்கையாகச் சொல்வார். அந்த நாட்களில் என் மீதும் அன்பு செலுத்தும் மனிதர்கள் உண்டு என்ற அறிதல் என்னை உலகை வென்றவனாக உணர வைக்கும்.

சற்று வளர்ந்தபின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். துப்பறியும் நாவல்களோ, கண்ணீர் கதைகளோ, காமக் கதைகளோ, நகைச்சுவை கதைகளோ என்னை ஒருபோதும் கவரவில்லை. ஆரம்பத்தில் அறிவார்ந்த புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து வந்தேன். பின் அவற்றில் ஆர்வமிழந்து ஆன்மிகத் தீண்டல் இருக்கும் தீவிரமான நூல்களை, கட்டுரைகளை, கதைகளை மட்டும் வாசிக்கத் தொடங்கினேன். அவை என்னைப்பற்றி, என் உலகைப்பற்றிச் சிந்திக்கத் தூண்டின.

ஏழாவது வகுப்பு முடிப்பதற்குள் பல முக்கியமான நாவல்களை வாசித்து விட்டிருந்தேன். வீட்டிற்கு அருகே பெரிய அரசாங்க நூலகம் இருந்தது. அதன் நூலகர் தாத்தாவின்மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அதனால், நான் கேட்கும் புத்தகங்களைத் தேடி எடுத்துத் தருவார். ‘தாத்தாவை விசாரித்ததாக சொல்லுப்பா’ என்று அடிக்கடி என்னிடம் வேண்டுகோள் விடுப்பார்.

ருஷ்ய நாவல்களைத் தவிர பிற வெளிநாட்டு நாவல்களை என்னால் மனம் ஒன்றி வாசிக்க முடியவில்லை. மேதைகள் எழுதியவையே என்றாலும், என் உலகம் வேறாகத்தான் இருந்தது. இந்திய நாவல்களை வாசித்தபோது மட்டும் கதாபாத்திரங்களாகவே என்னால் மாற முடிந்ததால் எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள சிறந்த நாவல்களை வாசித்தேன். அந்த பாத்திரங்களின் வாழ்க்கையை நானும் வாழ்ந்து அனுபவங்கள் பெற்றேன்.

வங்காளத்து தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ வாசித்தபோது அலோபதி டாக்டர் போஸாகவும் என்னை அறிந்தேன், அவரது மறுபக்கமான ஆயுர்வேத மருத்துவர் மஷாயாகவும் என்னை அறிந்தேன். காதலி மஞ்சரியாக மஷாயின் மடியில் சரிந்தேன். கன்னடத்து சிவராம காரந்தின் ‘மண்ணும் மனிதரும்’ வாசித்தபோது அதில் வரும் சுதந்திரப் போராளி ராமனும் நானே, அவன் தாயான நாகவேணியும் நானே என்றுணர்ந்தேன். மராட்டிய காண்டேகரின் ‘யயாதி’யை வாசித்தபோது சர்மிஷ்டையாகவும், தேவயானியாகவும், யயாதியாகவும், புருவாகவும் சில நாட்கள் வாழ முடிந்தது.

நவீன மேதைகளின் நாவல்கள் முடிந்தபின் நான்காயிரம் வருடங்கள்வரை பின்னோக்கிச் சென்றேன். மகாபாரதம் என் கதை, நான் நிகழ்த்தியது, அதில் வரும் அனைவரும் நானே என்று நம்பத் தொடங்கினேன்.

இப்போது என் உலகம் மிகவும் விரிந்து விட்டது. எனக்குத்தான் எத்தனை குடும்பங்கள்! எத்தனை உறவினர்கள்! எத்தனை எத்தனை அனுபவங்கள்! ஒவ்வொரு நாவலும் என் குடும்பமாக மாறி விட்டது.

அதனால் எனக்குள் விசித்திர மாறுதல் நிகழ்ந்தது. எல்லோரையும் அவரவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே தயங்காமல் ஏற்றுக் கொள்ள முடிந்தது. எல்லோரையும் ஒரு காரணமும் இன்றி நேசிக்க முடிந்தது. அன்பைத் தர முடிந்தது. இருந்தாலும் என் மூத்தவர்களின் அன்பைப் பெற வேண்டும் என்ற இளவயது ஆவல் அழியாமல் அணைக்க முடியாத கங்கு போல என் நெஞ்சில் இருந்து வந்தது.

வீடு, பள்ளி, கல்லூரி, நூலகம் தவிர வேறெங்கும் நான் போனதில்லை. வெளியூர்களுக்கு அண்ணார்கள் போகும்போது எப்போதாவது என்னையும் அழைத்துப் போவார்கள். அப்போதெல்லாம் தாத்தா அந்த ஊர்களில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஏதாவது பரிசுகளை என் மூலம் அனுப்பி வைப்பார். ‘உனக்கென்று நான்கைந்து பேர்களாவது வேண்டுமே!’ என்று கூறுவார். என் சிறு வயதிலிருந்தே என்னைப் பற்றிய கவலை மீசை தாத்தாவிற்கு உண்டாகிவிட்டது.

என் அக அனுபவங்களின் நடுவே தட்டுத் தடுமாறி கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். ஜவுளி அண்ணியின் தூண்டுதலால் ஓரளவிற்கு எளிய சாப்ட்வேர் எழுதப் பழகிக் கொண்டேன். வேலைக்குப் போனால் இலக்கிய வாசிப்பு தடைபடும் என்று தோன்றியதால் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி நடத்தப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேன். சிறிய அளவில் அவ்வப்போது வருமானம் வந்து கொண்டிருந்து. செலவு செய்யத் தெரியாத எனக்கு அதுவே பெரும்புதையல் போலிருந்தது. எனக்கு வந்ததை என் மூத்தார்களின் குழந்தைகளே செலவு செய்து விடுவார்கள்.

என்னால் உருப்படியாக எதையும் செய்ய முடியும் என்று என் குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை. என்றாலும், யாரையும் எதுவும் கேட்காத, யாருக்கும் தொந்தரவு தராத, இட்ட சில்லறை வேலைகளை மறுக்காமல் உடனே செய்யும் ஜீவராசி என்பதால் என் சிறு அறையில் நிம்மதியாக இருந்து வர முடிந்தது.

6. கவர்னசத்தை

நான் சிறு வயதிலிருந்து கதைகள் நிறைய வாசிப்பேன். சில கதைகளில் வரும் விசித்திரமான பெயர்களைப் பார்த்து விட்டு என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஏதாவது பெயர் கொடுக்கத் தொடங்கினேன்.

குழந்தையின் விளையாட்டை எல்லோரும் ரசித்தனர்.

ஒரு முறை தாத்தா நண்பர்களோடு கூடத்தில் பேசிக் கொண்டிருந்த போது ‘தாத்தாவிடம் சாவி வாங்கி வா’ என்றார் பாட்டி.

‘நிறைய தாத்தாக்கள் இருக்கிறார்களே. எந்தத் தாத்தாவிடம் கேட்பது?’ என்றேன்.

‘உன் தாத்தா’ என்றார் பாட்டி.

‘எல்லோரும் என் தாத்தாக்கள்தானே?’ என்றேன்.

‘பெரிய மீசை வைத்திருக்கிறாரே அந்தத் தாத்தா’ என்றார் பாட்டி.

‘ஓ, மீசை தாத்தாவா?’ என்றேன்.

அந்த கணத்தில்தான் அறுபது வயதுவரை வெறும் தாத்தாவாக இருந்தவர் மீசை தாத்தாவாக மாறினார்.

அம்மாவும், பாட்டியும் போனதைப் பற்றி மீசை தாத்தாவிற்கு வருத்தமில்லை. குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான தீர்வைத்தான் உடனடியாக தேடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவரது தூரத்து சொந்தமான பெண் ஒருவர் சிறு பையில் ஒரே ஒரு மாற்றுப் புடவையோடு வந்தார்.

அப்பெண்ணுக்கு முப்பது வயதிருக்கும். அவள் அண்ணி அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாளாம்.

‘பத்து வருஷமாக சம்பளமில்லாத வேலைக்காரியாக வைத்திருந்தாள். எனக்கு ஒரு வரன்கூட பார்க்கவில்லையே! நேற்று பக்கத்து வீட்டுக்காரியிடம் வாய் தவறி அண்ணன் பார்த்துக் கொள்ளும் ஒரு ஏக்கர் நிலத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று சொல்லி விட்டேன். குடிகேடி என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாள். அண்ணன் தனக்கு சம்பந்தமில்லாதது போல பேசாமல் இருந்துவிட்டான். பெரியப்பா, நான் உங்கள் பெண் போல. எனக்கு உங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை’ என்று கூடத்தில் சோபாவில் அமர்ந்திருந்த மீசை தாத்தாவின் காலடியில் தரையில் உட்கார்ந்து கொண்டு அழுதார் அப்பெண்.

‘எங்களுக்கும் உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது. குடும்பத்தில் ஒருத்தியாக, பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து கொள்’ என்றார் தாத்தா.

ஆனால் அண்ணார்களும், அக்காவும் சமீபத்தில் கிடைத்த சுதந்திரம் பறி போய் விடுமோ என்ற பயத்தில் ‘சமையலுக்குத்தான் ஏற்கனவே ஆள் இருக்கிறதே’ என்றனர்.

‘பரமனுக்குத் தாயைப் போல ஒரு பெண் தேவை. ஐந்து வயது குழந்தையடா’ என்று தாத்தா கூறிவிட்டார்.

அம்மாவை எதிர்பார்த்திருந்த என்னிடம் தாத்தா ‘இதுதான் உன் புது அத்தை’ என்று கூறினார். புது அத்தை என்றுமே அம்மாவாக இருக்கவில்லை.

அன்றே அப்பெண்ணுக்கு உயர்ந்தரக புடவைகளும், தேவையான மற்றவற்றையும் வாங்கிக் கொள்ள மீசை தாத்தா பணம் கொடுத்தார். புது அத்தைக்கு என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஆரம்பத்தில் சில நாட்கள் எனக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே ‘நீ மட்டும் இல்லையென்றால் எனக்கு இந்த வீட்டில் இடம் கிடைத்திருக்காது. எனக்கு வாழ்க்கை கொடுத்தது நீதானடா’ என்று மனதாரச் சொல்வார்.

மற்ற மூன்று குழந்தைகளின் அபிமானத்தையும் பெற பெரிய முயற்சிகள் எடுத்தார். சமையல்காரியை அலட்சியப்படுத்திவிட்டு எங்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார். அளவுக்கதிகமாக அன்பை வழிந்தோட விட்டார். மூத்தவர்களும் அதில் வழுக்கி விழுந்தனர். புது அத்தைமீது பிரியம் உண்டாகாவிட்டாலும் வெறுப்பு மறைந்துவிட்டது.

புது அத்தை வீட்டுக்கு வந்த அன்று ‘நான் யார் சொல் பார்ப்போம்’ என்றார் விளையாட்டாக.

நான் அப்போது வாசித்திருந்த ஆங்கிலக் கதை ஒன்றில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வருபவரை ‘கவர்னஸ்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாத்தாவோ ‘அத்தை’ என்று சொல்லியிருக்கிறார்.

‘நீங்கள் கவர்னசத்தை’ என்றேன்.

புது அத்தை நான் அவரை கவர்னர் என்று சொல்வதாக நினைத்துக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது. மகிழ்ந்து போய்விட்டார். அன்றிலிருந்து அவர் கவர்னசத்தை ஆகிவிட்டார். அவருடைய உண்மையான பெயர் என்னவென்று அவருக்கே நினைவிருக்குமா என்று தெரியவில்லை.

பாட்டியின் மற்றொரு முகம் கவர்னசத்தை வரவால் தாத்தாவிற்குத் தெரியவந்தது.

கவர்னசத்தை வீட்டுக்கு வந்த மறுநாள் சித்தப்பாவின் வக்கீலின் உதவியாளர் இன்னொரு புதிய வழக்கு போடப் போகிறோம் என்று ஒரு நோட்டீஸ் கொண்டு வந்து கொடுத்தார். கவர்னசத்தைதான் அதை வாங்கித் தாத்தாவிடம் கொடுத்தார்.

கவர்னசத்தை பற்றி உதவியாளர் சித்தப்பாவிடம் என்ன சொன்னார் என்பதுவும், சித்தப்பா பாட்டியிடம் என்ன சொன்னார் என்பதுவும் எனக்குத் தெரியாது. பாட்டியிடமிருந்து தாத்தாவிற்கு ஆள் மூலம் அவசரத் தகவல் வந்தது. ‘நீங்கள் வீட்டிற்குள் புதிதாகக் கொண்டு வந்திருக்கும் ஜாலக்காரியை வீட்டை விட்டுத் துரத்தி விட்டால் நான் வீடு திரும்புகிறேன்’ என்று சொல்லியனுப்பி இருந்தார்.

தாத்தா பதில் கூறவில்லை.

அதற்குப்பின் தாத்தா கவர்னசத்தையை ஒரு போதும் தனிமையிலோ, தனி அறையிலோ சந்திக்கவே இல்லை. எதுவானாலும் எங்கள் மூலம்தான் பேசுவார். கூடத்தில் எல்லோர் முன்பும்தான் ஆணைகள் பிறப்பிப்பார். கவர்னசத்தை தாத்தாவைத் தனியே சந்தித்து ஏதேனும் பேச முயன்றாலும் பதில் கூறாமல் எழுந்து போய்விடுவார்.

ஆனால் கவர்னசத்தைக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்குரிய அத்தனை வசதிகளையும், உரிமைகளையும் கொடுத்திருந்தார். கவர்னசத்தை வந்த ஒரு மாதம் கழித்து தாத்தா சம்பளம் தந்தபோது கண்ணீர் விட்டு அழுதார். ‘நான் சம்பளம் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?’ என்று கேட்டார். தாத்தா சம்பளத்தை திருப்பி வாங்கிக் கொண்டுவிட்டார். அதன்பின் சம்பளமே தரவில்லை. வீட்டுச் செலவிற்கான பணம் வைக்கும் அலமாரி சாவியை கவர்னசத்தையிடம் தந்து விட்டார். தனக்குத் தேவையானதை கவர்னசத்தையே எடுத்துக் கொள்வார். அவர் செய்ததுதான் செலவு. அவர் எழுதியதுதான் கணக்கு. ஆனால், பணவிஷயத்தில் பாட்டி கூட கவர்னசத்தையை குறை சொல்ல முடியாது. அண்ணார்களுக்கு கல்யாணமாகும் வரை சாவிக்கொத்து கவர்னசத்தையிடம்தான் இருந்தது. கவர்னசத்தைக்கு யார் சந்தோஷமாக இருந்தாலும் பிடிக்காது. தன்னால் முடிந்த வரை கெடுதல் செய்யப் பார்ப்பார். ஆனால் அது தலைகீழாகத்தான் போகும். அவர் எப்போது குரங்கு பிடிக்க நினைத்தாலும் அது பிள்ளையாராகத்தான் முடியும். அவருக்கு அப்படிப்பட்ட விசேஷமான ராசி உண்டு.

7. கல்யாணப் பேச்சு

சில வாரங்களுக்கு முன் ஒரு நாள் ஜவுளி அண்ணி என்னிடம் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு முன்பதிவு செய்து தரச் சொன்னார். வெளிநாட்டிலிருந்து வந்த இசைக் குழுவின் நிகழ்ச்சி. காலையில் பத்து மணிக்குச் சென்றேன். நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தைப் பார்த்துத் திகைத்துப் போனேன். சென்னை-யி ல் இருக்கும் அத்தனை இளவயதினரும் அங்கு கூடியிருப்பது போலத் தோன்றியது. பல நீண்ட வரிசைகளில் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாத்தா என்னைப் பார்த்து விட்டார்.

‘கஸ்டமரிடம் பணம் வாங்க வந்தேன்’ என்ற மீசை தாத்தா ‘என்னடா பரமா! நீ இந்த வெளிநாட்டு பாட்டெல்லாம் கேட்பாயா?’ என்று கேட்டார்.

‘இல்லை. ஜவுளி அண்ணி டிக்கட் வாங்கி வரச் சொன்னார்’ என்றேன்.

‘இன்று என்ன கிழமை?’ என்று கேட்டார் மீசைத் தாத்தா.

‘புதன்’ என்றேன்.

‘இப்போது நேரம் என்ன?’ என்று கேட்டார் மீசைத் தாத்தா.

‘பத்தரை இருக்கும்’ என்றேன்.

‘எத்தனை வரிசைகள்! ஒவ்வொன்றும் நீளமாக இருக்கிறதே’ என்றார் மீசைத் தாத்தா.

‘மொத்தம் மூவாயிரம் டிக்கெட்டுகள். இன்னும் இரண்டு மணி நேரமாகுமாம்’ என்றேன்.

சைக்கிளை மிதித்து நகர்த்திய மீசை தாத்தா, திரும்பி என்னருகே வந்தார். வெயில் கண்களைக் கூசியதால் கையை கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு சொன்னார்.

‘இந்தியாவில் இருக்கிற முக்கியமான இசை மேதைகளோட பாட்டும், வாசிப்பும் போன வாரம் ஆறு டிவிடியில் வந்திருக்கிறது. பிஸ்மில்லா ஷெனாய், ஹரிபிரசாத் குழல் முதற்கொண்டு எல்லாமே இருக்கிறது. வேலை முடிந்து திரும்பி வந்ததும், தினமும் கேட்கிறேன். தூங்குகிறேனா அல்லது வேறு உலகத்தில் மிதக்கிறேனா என்றே தெரியவில்லை’ என்றார் மீசை தாத்தா. இவர் இசை கூட கேட்பாரா!

‘எனக்கு வீணை மட்டும்தான் பிடிக்கும் தாத்தா’ என்றேன்.

‘மட்டும்தான் என்கிற வார்த்தை மனுஷனுக்குத் தேவையில்லாதது. பார்க்கத் தெரிந்தவனுக்கு எல்லாக் காட்சியும் பிரம்மம்தான். கேட்கத் தெரிந்தவனுக்கு எல்லா இசையும் பிரம்மம்தான். கொட்டாங்கச்சியில் ஒற்றைக் கம்பி கட்டி நாம் வீசி எறிகிற சில்லறைக் காசுகளுக்கு வாசிக்கிறவனின் இசையும், பிரம்மாண்டமான அரங்கத்தில் சிம்பனியிலே வயலின் வாசிக்கிறவனின் இசையும் ஒன்று போலத்தான் எனக்கு கேட்கிறது.

இவன் மூலம் வருவதும் முழுமையான பிரம்மநாதம்தான். அவன் மூலம் வருவதும் முழுமையான பிரம்மநாதம்தான். தெருவோர கொட்டாங்கச்சி சிறியது, சிம்பனி வயலின் பெரியது என்று மனுஷன்தான் புத்தியை வைத்து யோசிக்கிறான்’ என்றார் மீசைத் தாத்தா.

வரிசை நகர, நானும் முன்னேறினேன். சைக்கிளைத் தள்ளிக் கொண்டே மீசை தாத்தாவும் கூடவே வந்தார். ‘வியன்னாவிலே இருந்தானே, அவன் பேரென்ன? லுட்விக் பீத்தோவன். அவன்கிட்டே கேட்டாலும் நான் சொன்னதையேதான் சொல்வான். அவனுக்கு காது நன்றாகக் கேட்கும்வரை கலைஞனாக இருந்தான். காது கேட்காமல் போனபின்புதான் மேதையானான். புலனை வைத்துத்தான் அறிவும், மனமும் அதிகப்பிரசங்கம் செய்கின்றன. வேறு வழியில்லாமல் காதுக்கு பதில் ஆன்மாவால் கேட்க ஆரம்பித்தபோதுதான் பீத்தோவனுக்கு சிம்பனிகளும், மற்றவைகளும் உள்ளுக்குள் இருந்து வந்தன’ என்றார்.

நாங்கள் மேலும் முன்னேறினோம்.

‘எல்லாமே பீத்தோவனுக்கு உள்ளேதான் இருந்தது. ஆன்மா வேலை செய்ய ஆரம்பித்ததும் ஆழத்தில் இருப்பது தெரிய ஆரம்பித்தது. பார்க்காதவனுக்கு சத்தியம் தெரியாது. பார்க்கிறவனைப் பொறுத்து சத்தியம் பொய் போலவும் தெரியும். எப்போதும் எல்லோரிடமும் சாதாரணமாக, எளிமையாக இருக்கிற சத்தியம் அறிவுக்கு, பழக்கத்திற்கு, அகப்படாது. எதையும் யோசிக்காமல். எதிர்பார்க்காமல் சின்னக் குழந்தை மாதிரி ஆர்வத்தோடு பார்த்தால் சத்தியம் சத்தியமாகவே தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்’ என்றார் எண்பது வயதான மீசை தாத்தா.

‘அப்படி நேரடியாக சத்தியத்தைப் பார்க்கிறவர்கள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்ன!’ என்றேன்.

‘இல்லாமல் என்ன! மதுரை வாத்தியார் பெண் ஜமுனா அப்படிப்பட்டவள்தான்’ என்ற மீசை தாத்தா பேச்சை மாற்றி ‘உனக்கு என்ன மாதிரியான வீணை பிடிக்கும்?’ என்று கேட்டார்.

‘எனக்கு வீணை என்றால் சரஸ்வதி வீணைதான் நினைவிற்கு வரும். ஏனோ சித்ர வீணை, ருத்ர வீணை எல்லாம் நினைவிற்கு வருவதில்லை’ என்றேன்.

‘போனவாரம் சாப்ட்வேர் சரி செய்ய வேண்டும் என்று கேட்ட உன் நண்பனை போய்ப் பார்த்தாயா? அது நினைவிற்கு வருகிறதா?’ என்று கேட்டார் தாத்தா.

‘இல்லை தாத்தா. அது மிகவும் சின்ன வேலை. தவிர வீட்டு வேலைகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது’ என்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் மீசை தாத்தா போய்விட்டார்.

நான் சரியாக ஆயிரமாவது ஆள்! அதனால் புல்லாங்குழல் ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதை ஜவுளி அண்ணியிடம் கொடுத்தேன். புருஷண்ணாரும், மதுவண்ணாரும் சிரித்தனர். ‘நீயே வைத்துக் கொள் அல்லது எறிந்து விடு’ என்றனர். நான் பத்திரமாக வைத்திருந்தேன்.

வேறொரு நாள் காபி அண்ணியின் பெங்களூர் தோழி வீட்டுக்கு வந்திருந்தார். ‘மகாபலிபுரம் பார்க்க வேண்டும்’ என்றார். அன்று டிரைவர் ரகு விடுப்பு எடுத்திருந்தார். ‘பரமா, நீ கார் ஓட்டுகிறாயா? எந்த சமயத்திலும் கை கொடுக்க உன்னை விட்டால் இந்த வீட்டில் வேறு எவருமில்லை’ என்றார் காபி அண்ணி.

கார் அடையாரில் போக்குவரத்து நெரிசலில் மெல்ல சென்று கொண்டிருந்தபோது, அருகே சரக்கு ஏற்றிய வேன் வந்தது. டிரைவருக்கு அருகே மீசை தாத்தா உட்கார்ந்திருந்தார். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.

‘மகாபலிபுரம் போகிறோம் தாத்தா’ என்றேன் உற்சாகமாக.

காரின் பின்சீட்டில் இருந்த காபி அண்ணியையும், அவர் தோழியையும் ஒரு பார்வை பார்த்தார். மரியாதை செய்யும் வகையில் அண்ணி சீட்டில் சற்று முன்னகர்ந்து அமர்ந்தார்.

தோழிக்குத் தாத்தா யாரென்று தெரியவில்லை.

‘உன் அண்ணன்கள் எங்கே?’ என்று கேட்டார் மீசை தாத்தா.

‘அலுவலகம் போயிருக்கிறார்கள்’ என்றேன்.

‘சாப்ட்வேர் கேட்ட நண்பரைப் போய் பார்த்தாயா?’ என்று கேட்டார் மீசை தாத்தா.

‘இன்னும் இல்லை தாத்தா’ என்றேன்.

வேன் நகர்ந்து விட்டது.

மீசை தாத்தாவின் வேன் வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டபின் தாழ்ந்த குரலில் ‘தாத்தாவிற்கு கலை உணர்ச்சியே கிடையாது. வேலை, சாப்பாடு, தூக்கம்! அவ்வளவுதான் அவருக்கு தெரிந்த வாழ்க்கை’ என்றார் காபி அண்ணி.

அதற்கடுத்த வாரம் சனியன்று மதியம் குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் தங்கமீன், பறவைகள் விற்கும் கடைக்குச் சென்றிருந்தேன்.

புருஷண்ணாருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும்தான். ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் ஜவுளி அண்ணிக்கு உண்டு. ‘தங்கமீன் வாங்கலாம்’ என்று புருஷண்ணார் பெண் சொன்னாள்.

‘தாத்தா கடலில் கொண்டு போய் சேர்த்து விடுவார்’ என்றேன்.

‘சித்தப்பா, லவ் பேர்ட்ஸ் வாங்கலாம்’ என்றான் மதுவண்ணார் பையன். மதுவண்ணாருக்கு ஒரு பையனும், பெண்ணும் உண்டு.

‘வேண்டாம்’ என்றேன்.

‘என்னிடம் பணம் இருக்கிறது’ என்றான் மதுவண்ணார் பையன்.

‘தாத்தா கூண்டை திறந்து விட்டுவிடுவார்’ என்றேன்.

‘இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்ற மீசை தாத்தாவின் குரல் கேட்டு திரும்பினேன்.

நான் பதில் சொல்லுமுன் ‘மீன் ஏற்றுமதி செய்ய பாட்டில்கள் வேண்டும் என்று கடைக்காரர் கேட்டிருந்தார். அதற்காக இங்கு வந்தேன்’ என்ற மீசை தாத்தா ‘இந்த மத்தியான வெயிலில் எதற்கு குழந்தைகளை கூட்டிக் கொண்டு இவ்வளவு தூரம் வந்தாய்?’ என்று கேட்டார்.

‘அண்ணார்களின் நண்பர்கள், அமெரிக்காவில் இருப்பவர்கள், விருந்திற்கு வந்திருக்கிறார்கள். குழந்தைகள் இருந்தால் தொந்தரவாக இருக்கும் என்பதால் என்னை வெளியே அழைத்துப் போகச் சொன்னார்கள்’ என்றேன்.

‘சாப்ட்வேர் என்ன ஆயிற்று?’ என்றார் தாத்தா.

‘வெயில் தாழ போகவேண்டும் தாத்தா’ என்றேன்.

தலையசைத்து விட்டு மீசை தாத்தா போய்விட்டார்.

அடுத்த நாளிரவு என்னையும், அண்ணார்களையும் மீசை தாத்தா தன் அறைக்கு அழைத்தார். அண்ணிகளும் வந்துவிட்டனர். ‘நாளை மதுரை போகலாம். பரமனுக்கு பெண் பார்க்கவேண்டும்’ என்றார். கவர்னசத்தை கதவை ஒட்டி அறைக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்.

‘நாளைக்கா!’ என்ற புருஷண்ணார் என்னைப் பார்த்து ‘என்னடா! ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே’ என்றார்.

‘எனக்கே இப்போதுதானே தெரியும்’ என்றேன்.

‘யார் வீட்டுப் பெண்?’ என்றார் மதுவண்ணார்.

‘மதுரை வாத்தியார் வீட்டுப் பெண். நமக்குத் தூரத்து சொந்தம்’ என்றார் மீசை தாத்தா.

‘அவரா!’ அதிர்ச்சியுடன் கேட்டார் கவர்னசத்தை. ‘நம் அந்தஸ்திற்கு கொஞ்சம் கூட பொருந்தி வராது. போக, வர நன்றாக இருக்காது. எதுவும் செய்ய வக்கில்லாத குடும்பம். நம் டிரைவரே முப்பது பவுன் மிரட்டி வாங்கி கல்யாணம் செய்கிறான்’ என்றார்.

தன் தூரத்து உறவினரான மதுரை மாமா மீது மீசை தாத்தாவிற்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு எங்கள் கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்தார்.

‘அவர் சொந்தக் குழந்தை மாதிரி கம்பெனியை பார்த்துக் கொள்வார்!’ என்பார் தாத்தா.

பாண்டிச்சேரியிலிருந்த வியாபாரி ஒருவர் எங்கள் கம்பெனியிலிருந்து மொத்தமாக பாட்டில்கள் வாங்கி விநியோகம் செய்து வந்தார். அலைச்சலே இல்லாமல் கம்பெனிக்கு அவர் மூலம் முப்பது சதவிகிதம் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. அடிக்கடி சென்னை வந்து தாத்தாவை சந்தித்துவிட்டுப் போவார். அவர் தன் கடைக்கு பத்தாவது ஆண்டு விழா நடத்தினார். தாத்தாவிற்கும், கம்பெனி சிப்பந்திகளுக்கும் அழைப்பு விடுத்தார். ‘உங்களுக்காக எவ்வளவு பாடுபடுகிறேன். ஒரு முறை கூட நீங்கள் கடைக்கு வந்ததில்லையே’ என்று கோபித்துக் கொண்டார்.

தாத்தா அப்போது திருச்சி போக வேண்டியிருந்ததால், தன் சார்பில் மதுரை மாமாவை பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தார். ‘நீ எங்கேயும் போவதில்லை. பாண்டியையும் பார்த்துவிட்டு, விழாவிற்கும் போய் வா’ என்று சொல்லி அனுப்பினார்.

இரண்டு நாட்கள் பாண்டியிலிருந்து விட்டுத் திரும்பிய மதுரை மாமா ‘எல்லா பாட்டில்களும் சாராயக் கம்பெனிகளுக்குத்-தான் போகின்றன’ என்றார். ‘என்னிடம் மருந்து கம்பெனிகளுக்காக வாங்குகிறேன் என்றுதானே சொன்னார்?’ என்றார் தாத்தா. ‘பாட்டில்கள் வாங்கி சாராயம் காய்ச்சும் கம்பெனிகளுக்கு விற்கிறார். எனக்கு இது சரியாகப் படவில்லை.

நம் கம்பெனி பல வருடங்களாக சாராயத்தின் மூலம் சம்பாதித்து வருகிறது’ என்று வருத்தத்துடன் கூறினார் மதுரை மாமா.

தாத்தா பாண்டிச்சேரி வியாபாரிக்கு பாட்டில்கள் தருவதை உடனே நிறுத்தினார். மொத்த வியாபாரி ‘தரமான பாட்டில்கள், விலை கூட தருகிறேன்’ என்று கூறியும் தாத்தா மறுத்துவிட்டார். கம்பெனி விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்தது. அதன்பின் வேறு இடங்களில் ஆர்டர் எடுத்து விற்பனையை தாத்தா கூட்டிவிட்டாலும், பாட்டிக்கு மாமா மீது வருத்தம் வந்து விட்டது.

‘மதுரைக்காரனுக்கு பொறாமை. நம் வியாபாரத்தை கெடுக்கிறான்’ என்று பொருமினார் பாட்டி. மீசை தாத்தா ஊரில் இல்லாத சமயமாக மாமாவை வீட்டிற்கு அழைத்து மிகவும் மரியாதைக் குறைவாகத் திட்ட, மாமா தாத்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல், ராஜினாமா கடிதம் எழுதி வைத்துவிட்டு சொந்த ஊரான மதுரைக்கே திரும்பிவிட்டார்.

அங்கே ஏதோ ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் சொற்ப சம்பளத்தில் தற்காலிக ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து, கல்யாணம் செய்து கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார். கல்யாணத்திற்குப் பாட்டி போகவில்லை. தாத்தா மட்டும்தான் போனார். மதுரைக்குப் போகும்போதெல்லாம் மாமா வீட்டில்தான் மீசை தாத்தா தங்குவார்.

கல்யாணமான நாள் முதல் மதுரை அத்தையும் அதே தனியார் பள்ளிக்கூடத்தில்தான் பல வருஷங்களாக ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இரண்டு பேர் வேலை பார்த்தும் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதிக்கு மேல் ‘இல்லை’ என்கிற இனிய கானம்தான் வீட்டில் ஒலித்தது. ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால் அரசாங்க மானியம் பெறும் பள்ளிக்கூடத்தில் அத்தைக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேலை செய்ய வேண்டிய இடம் மதுரையிலிருந்து மூன்று மணி நேர பஸ் பிரயாண தூரத்தில் இருக்கும் கிராமம். அங்கேயே தங்கிக் கொண்டு, வாரத்திற்கு ஒருநாள் மதுரை வந்து போவார். அத்தைக்கு அந்த வேலை கிடைத்த பின்பு வீட்டு நிலைமை எவ்வளவோ முன்னேறிவிட்டது.

இப்போதெல்லாம் இருபதாம் தேதிக்கு மேல்தான் ‘இல்லை’ என்கிற இனிய கானம் ஒலிக்கிறதாம். இவையெல்லாம் கவர்னசத்தை தந்த தகவல்கள்.

மீசை தாத்தா ‘கொஞ்ச நாட்களாகவே நமக்குத் தெரிந்த பல பெண்களையும் பற்றி யோசித்தேன். இந்த இடம்தான் பரமனுக்கு ஏற்ற இடம்’ என்றார்.

‘வாத்தியார் வீட்டை பார்த்திருக்கிறேன். எந்த யுகத்தில் எந்த பெருச்சாளி கட்டிய வளையோ! மனிதன் வாழக் கூடிய வீடா அது! இன்னமும் இடிந்து விழாமல் இருப்பது ஆச்சரியம்தான்’ என்றார் கவர்னசத்தை.

‘ரமணர் திருவண்ணாமலைக்கு போவதற்கு முன்பு மதுரையில் இருந்தார். அவர் வெங்கடராமனாக மதுரை அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்-டி ருக்கும்போது, அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவார். அப்போதெல்லாம் ஓய்வெடுக்க வாத்தியார் வீட்டு திண்ணையில் கொஞ்சம் நேரம் உட்காருவார். வாத்தியாரின் தாத்தா அவரை பலமுறை பார்த்திருக்கிறாராம். அதனாலேயே வாத்தியார் பழைய வீட்டை மாற்றாமல் இருக்கிறார்’ என்றார் மீசை தாத்தா.

‘தெரிந்தோ, தெரியாமலோ அந்த மகானுக்கு செய்த சேவை பல தலைமுறைகளை காப்பாற்றும். மனிதன்தான் மகானுக்கு சேவை செய்ய வேண்டுமா? வீடும் நிலமும் சேவை செய்யக் கூடாதா?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘வசதியான இடமாக பார்க்கலாமே’ என்றார் மதுவண்ணார்.

‘ஆமாம்’ என்றார் காபி அண்ணி.

உடனே கவர்னசத்தை வேறு மாதிரி பேச ஆரம்பித்தார். ‘உங்கள் தாத்தா சொல்வதுதான் சரி. நியாயத்தைப் பார்க்க வேண்டும். பரமன் நம் வீட்டு ராஜாதான். ஆனால், உங்கள் தாத்தாவிற்கு பேரன் என்பதைத் தவிர அவனிடம் வேறென்ன தகுதி இருக்கிறது? உங்களுக்கு ஒரு தங்கை இருந்தால் பரமனுக்குக் கொடுப்பீர்களா?’ என்று அண்ணிகளைப் பார்த்து கவர்னசத்தை கேட்டார்.

அண்ணிகள் பதில் சொல்லவில்லை.

‘மதுரைப் பெண்தான் பெரியவர்கள் பேச்சு கேட்டு அடக்கமாக வீட்டு வேலை செய்து கொண்டு ஒழுங்காக இருப்பாள். வசதியான பெண்கள் என்றால் திமிர் பிடித்து அலைவார்கள். பிள்ளை பெறுவதைத் தவிர வேறு வேலை செய்யத் தெரியாது’ என்றார் கவர்னசத்தை.

காபி அண்ணிக்கு கோபம் வருவது முகத்தில் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது? கவர்னசத்தையை எதிர்த்து பேச முடியாதே!

‘மதுரை அத்தை பல வருடங்களாக வெளியூரில்தானே வேலை பார்க்கிறார்? தாயின் கவனிப்பு இல்லாமல் தானாக வளர்ந்த பெண்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘மதுரை மாமாவிற்கும் அத்தைக்கும் சொற்ப சம்பளம். பெண்ணுக்குப் பெரிய குடும்பத்தில் வாழத் தெரியுமா?’ என்றார் காபி அண்ணி.

‘வேறு நல்ல இடமாக பார்க்கலாம். என் அப்பாவிடம் சொல்கிறேன்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நானும் என் அப்பாவிடம் சொல்கிறேன்’ என்றார் காபி அண்ணி.

‘வாத்தியார் குடும்பத்தையும், பெண்ணையும் எனக்கு நன்றாகத் தெரியும். பெண்ணுக்குப் பரமனை பிடித்திருந்தால் கல்யாணத்தை அடுத்த மாதமே முடித்து விடலாம்’ என்றார் தாத்தா.

‘என்ன அவசரம்?’ என்றார் புருஷண்ணார்.

‘வயதாகிறது’ என்றார் தாத்தா.

‘உங்களுக்கு வயதானால் என்ன? நாங்கள் இல்லையா’ என்றார் மதுவண்ணார்.

‘பரமனின் வயதைச் சொன்னேன். வாத்தியாரிடம் பத்து நாட்களுக்கு முன்பே பேசிவிட்டேன். பெண் வீட்டுக்காரருக்கு நம் வார்த்தை மட்டும் போதாது. அவரும் பரமனைப் பற்றி விசாரிக்க வேண்டுமே! இன்று மதியம்தான் அவருக்கு போன் செய்து நாளை மாலை பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லிவிட்டேன். எல்லோருக்கும் ரயில் டிக்கெட் எடுத்து விட்டேன். காலையில் போகிறோம்’ என்றார் தாத்தா.

‘அவசரமாக விடுப்பு எடுக்க என்னால் முடியாது’ என்றார் புருஷண்ணார்.

‘என்னாலும் முடியாது’ என்றார் மதுவண்ணார்.

‘இன்று விருந்திற்கு வந்தவர்களோடு நாளையும், மறுநாளும் வெளியே போக ஏற்கனவே திட்டம் போட்டுவிட்டோமே. அக்கா, நீங்கள் மதுரை போய் வாருங்களேன். இங்கே நானிருந்தால் போதும். நீங்கள் வராவிட்டாலும் விருந்தினர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்’ என்றார் காபி அண்ணி.

மீசை தாத்தா ஊன்றுகோலை கைகளில் உருட்டினார். அவருக்குக் கோபம் வரத் தொடங்கிவிட்டது.

‘வேண்டுமானால் யசோதாவைக் கூட்டிக் கொண்டு போகலாம்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘ஒரு வாரத்திற்கு முன்பே மேள, தாளத்தோடு சென்று பட்டுவேட்டி வைத்து அழைப்பு தந்தால்தான் மாப்பிள்ளை வருவார்’ என்றார் கவர்னசத்தை.

‘பெண் பார்ப்பதற்குப் பரமனும், தாத்தாவும் போனால் போதும். நிச்சயம், கல்யாணம் என்று இன்னும் எவ்வளவோ உண்டே!’ என்றார் மதுவண்ணார்.

தாத்தா பதில் சொல்லாமல் ஊன்றுகோலை மேலும் வேகமாக உருட்டினார்.

அதைக் கவனித்த ஜவுளி அண்ணி கண்களால் ஜாடை காட்டியதும் அனைவரும் அமைதியாகி விட்டனர்.

‘அடுத்த வாரம் வைத்துக் கொண்டால் எல்லோரும் போய் வரலாம்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நான், பரமன், கவர்னசத்தை மூன்று பேர் மட்டும் போய் வருகிறோம்’ என்றார் தாத்தா.

எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்தோம்.

‘பரமா, பெண் அனேகமாக நாட்டுப்புறமாகத்தான் இருப்பாள். பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு, நான் உனக்கு வேறு நல்ல பெண்ணாக பார்க்கிறேன்’ என்றார் ஜவுளி அண்ணி. அவர் கண்கள் சிறிது கலங்கி இருந்தன.

‘அதுதான் சரி. ஒன்றுமில்லாதவள் உன் அண்ணிகளைப் பார்த்துப் பொறாமைப்படுவாள். குடும்பத்தைப் பிரித்துவிடுவாள்’ என்றார் காபி அண்ணி.

‘தனக்கு எடுபிடிக்கு ஆள் வேண்டும் என்பதற்காக கவர்னசத்தை மதுரைப் பெண்தான் வேண்டும் என்கிறார்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘கவர்னசத்தை பேச்சைக் கேட்டு தாத்தாவே முடிவெடுத்துக் கொள்ளட்டும். நமக்கென்ன?’ என்றார் புருஷண்ணார்.

‘என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? பரமன் நம் பிள்ளை’ என்றார் ஜவுளி அண்ணி.

‘தாத்தா ஏன்தான் இப்படிச் செய்கிறாரோ! என் அப்பாவிடம் சொன்னால் தங்கச் சிலையை வைரத்தில் இழைத்து வெள்ளித் தேரில் கொண்டுவந்து இந்தாடா பரமா என்று கொடுத்துவிட்டுப் போவார்’ என்றார் காபி அண்ணி.

காபி அண்ணி தன் அறைக்குப் போனபின் சிறிது மன வருத்தத்துடன் சிரித்தார் ஜவுளி அண்ணி. ‘கல்யாணம், பண்டிகை, விசேஷம் என்றால் வசதியானவர்கள் பட்டு ஜவுளிதான் வாங்குவார்கள். உன் காபி மாமாவிற்கு எத்தனை பெரிய மனிதர்களை தெரிந்து விடப் போகிறது?’ என்றார்.

(தொடரும்)

***********



book | by Dr. Radut