Skip to Content

12. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

பரம்பொருளே நேரில் வந்து காப்பாற்றினார்.

ஐயாவின் பொற்பாதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. கடந்த 25 வருடங்களாக அன்னையின் பாதுகாப்பில் ஆனந்தமாக இருந்து வருபவள் நான். எனது மகளின் திருமணம் அன்னையின் அருளால் 12 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. இந்த 12 வருடங்களாக அன்னையின் அருளால் பல இன்னல்கள் வந்த போதும் ஸ்ரீ அரவிந்தமே அவளைக் காப்பாற்றி வருகிறது என்பது கண்கூடான விஷயம். எனது மருமகன் வீட்@டாடு மாப்பிள்ளையாக இருந்து வருபவர். அதனால் நாங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் ஸ்ரீ அரவிந்தமே காப்பாற்றி வந்தது. ஆனால் இந்த முறை நடந்தது மிகவும் அற்புதம். கடந்த இரண்டு மாத காலமாக எனது மருமகன் கேட்பதை எங்களால் நிறைவேற்ற முடியாத காரணத்தால் எங்கள் மகளைவிட்டு முழுவதுமாக பிரிந்து செல்லத் தீர்மானித்து எங்களிடம் கூறினார். நாங்கள் அன்னையை மனதில் நிறுத்தி உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் என்று கூறிவிட்டு, அவர் பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வந்தோம். அப்போதுதான் மார்ச் மாத இதழில் வந்த அன்னை அன்பர் அனுபவத்தில் பரம்பொருள் செய்த அற்புதத்தைப் படித்துவிட்டு, மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டிக்கு பணம் அனுப்பி பரம்பொருள் புத்தகம் அனுப்பி வைக்க கேட்டிருந்தேன். அந்தப் புத்தகம் ஏப்ரல் 6-ஆம் தேதி எங்கள் இல்லத்திற்கு வந்தது. பரம்பொருள் வந்த நேரம் அதி அற்புதமான நேரம். அந்த நேரத்தில் எங்கள் மருமகப்பிள்ளைக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. பரம்பொருள் ஒரு 5 நிமிடம் முன்னதாகவும் வந்து இருக்கலாம் அல்லது 10 நிமிடம் பின்னதாகவும் வந்து இருக்கலாம். அந்த பிரச்சனை நடந்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில் பரம்பொருள் உள்ளே நுழைந்ததும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அம்மாவும் அப்பாவும் ஒருசேர வந்து நாங்கள் இருக்கும்போது ஏன் மகளே உனக்குக் கவலை என்று கூறியது போல் இருந்தது. பரம்பொருளை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு மார்போடு அணைத்துக் கொண்டு எங்கள் மாப்பிள்ளையிடம் பேச ஆரம்பித்தேன். அன்னையை வணங்குவதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. அதனால் அந்த புத்தக வரவைக் கண்டவுடன் உங்கள் அன்னை அரவிந்தரால் கூட இந்த பிரச்சனைக்குத் தீர்வு கொடுக்க முடியாது என்று கூறினார். ஆனால் நாங்கள் ஆனந்த மழையில் நனைந்து கொண்டிருந்தோம். சரிங்க மாப்ளே! நீங்கள் கேட்டதைப் போலவே விடுதலை அளித்துவிடுகிறோம் என்று கூறிவிட்டு எங்கள் அறைக்குத் திரும்பினோம். எங்கள் மகளிடம் பரம்பொருளைக் கொடுத்து இனி இவர்தான் உன் கணவர், கடவுள் எல்லாம். இதை தினமும் படி என்று கூறிவிட்டு நிம்மதியாக அன்று இரவு முதல் உறங்கினோம். அவளும் அன்று இரவு படித்துவிட்டு நிம்மதியாக கவலையில்லாமல் உறங்கியதாகக் கூறினாள்.

சரியாக மூன்று நாட்கள் சென்றதும், நிலைமை தலைகீழாக மாறி, அற்புதம் நடந்தது. அவருக்கு ஆதரவாக இருந்த அனைத்து உறவுக்காரர்களும் அவருக்கு எதிராக மாறி இனி இங்கே வராதே என்று சொல்லுமளவுக்கு மாறியது. அவர் எங்களிடம் தங்க முடியாமலும், உறவினரிடம் செல்ல முடியாமலும் கண்ணீர் மல்க நின்ற நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது பொருள் பொதிந்த பரம்பொருளின் அற்புதம் தவிர வேறொன்றுமில்லை. அவர் எங்களை மிரட்டியது போக நாங்கள் மிரட்டும் அளவுக்குச் சூழல் மாறியது. இப்பொழுது ஒழுங்காகவும், அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறார்.

இந்த நிகழ்வின் மூலம் பொருள் பொதிந்த பரம்பொருள் எங்களுக்குத் தீமையைக் கண்டு பயப்படாமல் இருக்கும் அளவுக்கு அதிகமாக தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. ஐயாவின் திருப்பாதங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*********



book | by Dr. Radut