Skip to Content

05. அன்னையின் அருளும் பொருளும்

இறைவனின் கடைக்கண் பார்வையால் தானாகவே வந்து மனித வாழ்வில் செயல்படுவது அருள். உடல் உழைப்பால் பலனாகப் பெறுவது பொருள்.

பரம்பொருளின் அருளுக்கும், பாமரனின் பொருளுக்கும் தொடர்பு இருக்கின்றதா? இருப்பின் அன்னை வழிபாடு அத்தொடர்பை எப்படி ஏற்படுத்துகின்றது? இக்கருத்தை விளக்குவதுதான் கட்டுரையின் நோக்கம்.

உழைப்பாளிக்கு உரியது வெற்றி. வெற்றியின் பலனாகக் கிடைப்பது பொருள். உழைபாளியால் முடிந்ததெல்லாம் உழைப்பே. அவன் தன்னைப் பொருத்தவரையில் தளராது உழைக்க முடியும். அதன் அளவுக்கேற்ப அவன் ஊதியத்தைப் பெற முடியும்.

உடலால் உழைத்துப் பெறும் பெரும்பலன் உடலைக் காப்பாற்றும். உடலுக்குத் திடம் உண்டு. ஆனால் திறன் இல்லை. திடமான உடல், கடினமான உழைப்புக்கு உறுதுணையாக அமையும். அதன் வழியாகப் பெறும் பலன் அளவற்றதாக இருக்க முடியாது. அது உழைப்பின் அளவுக்கு ஏற்பவே இருக்கும். அதோடும், உடல் உழைப்பை மட்டுமே கொண்டவர்களுக்கு அவர்களைப் போலவே உடல் உழைப்பைக் கொண்ட பலரைக் கட்டியாளும் திறமை இருப்பது இல்லை. உணர்வு நிறைந்தவர்களுக்கே அத்திறன் அமையும்.

உடல் உழைப்பை மட்டுமே அளிக்க வல்லவர்களுக்கு உணவை ஈட்டும் திறன் ஒன்று மட்டுமே இருக்கும். அவர்களுக்கு உணவே உயிர். உணவு கிடைக்கும் இடங்களையே அவர்கள் உயிராகக் கருதுவார்கள். உழைப்பை நல்கும் பலரை ஆளும் திறன் மிகுந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் பன்மடங்கு அதிகமாக இருக்கும். ‘உயிருக்கு உயிராக’ இருக்கும் ஆற்றல் படைத்தவர்கள் அவர்கள். அதன் காரணமாகப் பலருடைய உழைப்பைக் கட்டியாளும் அவர்கள் பெறக்கூடிய பலன், பலர் பெறக்கூடிய பலனுக்குச் சமமானதாக இருக்கும்.

புத்தியில் உதிப்பது அறிவு. அறிவார்ந்த ஒருவனுக்கு, உணர்ச்சி உடையவன் கட்டுப்படுவான். அதனால் உணர்ச்சியுடைய தலைவனின் பொருளீட்டும் திறன், பெரும்பாலான சமயங்களில் அறிவுடைய ஒருவனுக்குக் கட்டுப்படும்.

அறிவின் கூறுகள் பல. கருத்துகளைச் சேகரிக்கும் திறன் படைத்தது ஒன்று; நுட்பமான விஷயங்களை உணரும் நுண்ணறிவு இன்னொன்று; செய்திகளைச் சேகரம் செய்வது மற்றொன்று; அனுபவச் சாரங்களைத் திரட்டுவது வேறொன்று; ஆலோசனைக்கு உரியது பிரிதொன்று; இவ்வாறாக அறிவு பல வகைகளில் இருப்பினும், நாம் இங்கே குறிப்பாகக் கருதுவது வேறொரு வகையான அறிவை. பொருளீட்டும் திறனுடைய உழைப்பு மிகுந்தவர்களை ஆளும் திறமை படைத்தவர்களின் அறிவையே இக்கட்டுரையில் குறிப்பாகக் கொண்டு விளக்க முற்படுகிறேன்.

உழைப்புக்கு உட்பட்டது பொருள். உணர்ச்சியுள்ள தலைவனுக்கு உழைப்பை மட்டுமே கொண்டுள்ள பலர் உட்படுகின்றனர். அத்தகைய தலைவனுக்கு அறிவின் திறன் முக்கியமான நேரங்களில் தேவைப்படுகின்றது. எந்த அறிவுக்கு அவன் தன்னை உட்படுத்திக்கொள்கின்றானோ, அந்த அறிவுக்கு அடிப்படையான பொருள் உட்பட்டது (பொருள் - உழைப்பு, தலைவன் - அறிவு). அந்த அறிவுடைய ஒருவன், பொருளீட்ட உழைக்க வேண்டியதில்லை; உழைப்பவர்களை மேய்க்க வேண்டியதும் இல்லை. ஏனெனில் மேய்ப்பவர்களை ஆளும் திறன் அவன் அறிவுக்குண்டு.

ஆன்மீக அடிப்படையில் புத்தியின் செயலை, ‘ஆன்மீக வெளிப்பாடு’ என்பார்கள். ஆன்மா தன் திறனை மனத்தின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது, அது புத்தியைக் கருவியாகக் கொள்கிறது; அதே முறையில், உணர்வு ‘புத்தியின் வெளிப்பாடு’ எனவும், செயல் (உழைப்பு) ‘உணர்ச்சியின் வெளிப்பாடு’ எனவும் கருதப்படுகின்றன. வேறு வகையில் சொல்லும்பொழுது, திறமை ஏற்படும் வரையில் உடல் உழைப்புத் தேவைப்படுகிறது. அதற்கு அடுத்த கட்டமான உழைப்பவரைக் கட்டியாளும் திறமை ஏற்பட்டபின், உழைப்புத் தேவையில்லை.

அறிவு உதயமாகும் வரை ஆளும் திறன் தேவை. அறிவு ஏற்பட்டபின், அத்திறனுக்கு வேலையில்லை. அதாவது, உழைப்பின் சாரம் திறன்; திறனின் சாரம் அறிவு; அறிவின் சிகரம் ஆன்ம ஞானம். இந்த நீண்ட விளக்கத்தின் சுருக்கம் இது: ஆன்ம ஞானத்திற்குப் பொருள் அடக்கம். ஆன்ம ஞானம் பெற்ற ஒருவனுக்கு பொருள் ஈட்டுவது எளிது.

பொருளையும், வாழ்வையும், உடலையும் முற்றுமாகப் புறக்கணிப்பது மரபு வழி வந்த நம் ஆன்மீகம். அது தவம், யோகம், சன்னியாசம் ஆகிய மார்க்கங்களைக் காட்டி அப்புறக்கணிப்பு வேலையைச் செய்கிறது. ஆனால் ‘வாழ்வனைத்தும் யோகம்’(All life is yoga) என்பது அன்னையின் வழி.

அன்னை பொருளையோ, வாழ்வையோ, உடலையோ புறக்கணிக்கவில்லை. பொய்யால் வந்த பொருளையும், பொய்யின் திறத்தால் விளைந்த வாழ்வையும், உடலில் உள்ள இருளையும் மட்டுமே புறக்கணிக்கின்றார் அன்னை. பொருளைப் பொய்யால் ஈட்டலாம்; மெய்யால் பெருக்கலாம். பொய்யால் பொருளீட்டத் திறமையும், உழைப்பும் தேவை. மெய்யால் பொருளீட்டத் திறமை, உழைப்பு ஆகியவற்றுடன் வாய்மை நிறைந்த நேர்மையும் தேவை. நேர்மையின் திறமையால் ஈட்டப்பட்ட பொருளுக்கு உரியவன் இறைவன். பொய்யின் ஜாலங்களால் ஈட்டப்பட்ட பொருளுக்குத் தலைவன் அசுரன்.

நேர்மையின் திறமையால் ஈட்டப்பட்ட பொருள் இறை வழிபாட்டுக்கு அளவுகோல். இதுவே அன்னையின் வழிக்குத் திறவுகோலும் ஆகும்.

அன்னையின் வழியில் அழைத்துச் செல்வதற்கு ஒரு துணை வேண்டும் அன்றோ? அதுவே ‘அன்னையை வழிபடுதல்’ என்ற பெருந்துணை. ‘அன்னையை வழிபடுதல்’ என்பது என்ன? அன்னையின் தெய்வாம்சத்தை உணர்ந்து, அவரை ஆன்மாவில் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்துகொள்வது. உடலின் உழைப்பையும், உயிரின் உணர்ச்சியையும், அறிவின் திறத்தையும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆன்மீக ஒளிக்கு உட்படுத்திச் சமர்ப்பணம் செய்துகொள்வது. இதுவே அன்னை வழிபாடு.

அன்னை, நெஞ்சில் பிரதிஷ்டை செய்யப்படுவதால், விளக்கம் பெற்ற ஆன்மா அறிவில் ஜோதியாகவும், வாழ்க்கையில் வெற்றியாகவும், உடல் உழைப்பின் சிறப்பாகவும் வெளிப்படுகின்றது. எனவே நெஞ்சிலுள்ள ஆன்ம ஒளிக்கு, பொருளீட்டும் உழைப்பு கட்டுப்படுகின்றது. அன்னையின் அவ்வொளி நெஞ்சில் ஏற்பட்டபின், பொருள் அவனைத் தேடி வரும். அவன் பொருளுக்கு அதிபதியாகின்றான். அப்பொருள் அருளால் விளைவது.

அது அருளால் வரும் பொருளாக இருப்பதாலே, அதைச் சத்தியத்தால் மட்டுமே ஈட்ட முடியும். பொய்யோ, பொய் நிறைந்த புரட்டோ அருகில் வந்தால், அப்பொருள் மாயமாய் மறைந்துபோகும். வாய்மையாலும், வாய்மையின் நேர்மையாலும், நேர்மையின் திறத்தாலும் மட்டுமே ஈட்டக்கூடியது அப்பொருள்.

‘சத்தியம்’ என்பது உள்ளது. இல்லாதது பொய்; உள்ளதே உண்மை. ‘உண்மையே சத்தியம்’ என்றாலும், சத்தியத்திற்கு அநேக வடிவங்கள் உள்ளன; ஆயிரம் உருவங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு செயலுக்கும், உணர்வுக்கும், எண்ணத்திற்கும் இரு வடிவங்கள் உள்ளன. ஒன்று, சத்தியத்தின் வடிவம்; மற்றொன்று, பொய்யின் வடிவம். ‘எண்ணம்’ என்பது கருவி. இது சத்தியத்திற்கும் பயன்படும்; பொய்க்கும் பயன்படும். ‘விருப்பம்’ என்பது உணர்வு. விருப்பம் உயர்ந்த இலட்சியத்திற்குப் பயன்படுவதைப் போல, அதற்கு எதிரான காரியத்திற்கும் பயன்படும். பல்வேறு நிலைகளில் இந்த இரு வடிவங்களும் தெளிவாகத் தெரியும். பொறுமையை ‘சத்தியத்தின் வடிவம்’ என்றால், எரிச்சலை ‘பொய்யின் வடிவம்’ என்று புரிந்து கொள்வதற்குப் பேரறிவு தேவை இல்லை.

எனவே, அறிவு, பொறுமை, ஆற்றல், இன்சொல், கூர்ந்தமதி (அறிவுக் கூர்மை), மெய்ப்பொருள் காணும் திட்பம், அடக்கம், நெறி, கற்பு, திண்மை (வலிமை), சாதுர்யம் (நாகரிகம்), சமயோசிதம், இனிய பேச்சு, பிறர் மனம் அறிய முற்படுதல் போன்ற ஆயிரம் நல்ல குணங்களை, நல்ல பழக்க வழக்கங்களை ‘ சத்தியத்தின் கூறுகள்’ எனலாம்.

அதே போல சிலவற்றிற்கு எதிரான குணங்களை, பழக்கவழக்கங்களை ‘பொய்யின் பிரதிநிதிகள்’ எனலாம். நாம் கடையில் ஒரு சாமான் வாங்கும் போதும், பஸ்ஸில் டிக்கெட் வாங்கும்போதும், ரூபாய் 3 கோடி கடனை சாங்ஷன் செய்யும் உயர் அதிகாரியானாலும், அதிர முழங்கும் மேடைப் பேச்சாளரானாலும், அழும் குழந்தையைக் குளிப்பாட்டும் தாயானாலும், ஒவ்வொரு செயலிலும், நிலையிலும் எது சரி, எது தவறு, எது சத்தியம், எது பொய் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, அதற்கு விளக்கம் தேவையில்லை. கடமைகளைப் பொறுப்புடன், நல்ல நோக்குடன் நிறைவேற்றும் எல்லா நல்ல பழக்கங்களையும் சத்தியத்தின் பிரதிநிதிகளாகக் கொள்ளலாம். அவற்றிற்கு எதிரான எல்லாவற்றையும் பொய்யின் பிரதிநிதிகளாகத் தள்ளலாம்.

ஒருவர் இக்கருத்தை ஏற்றுச் செயல்பட வேண்டுமானால், அவர் செய்ய வேண்டியவை என்ன? அவை கீழே தரப்படுகின்றன:

  1. அன்னையைத் தெய்வமாக உணர்ந்து, ஆன்மாவில் பிரதிஷ்டை செய்து, மனத்திலும், சொல்லிலும், செயலிலும் அன்னை வழிகளை மேற்கொண்டு, வாழ்க்கையை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து வாழ எடுக்கும் முடிவு, வாழ்வின் முழுப் பெருமுடிவாக இருக்க வேண்டும்.
  2. தம் கடமைகள் என்னவென்று பிறரைக் கேட்காமல் தாமே அறிந்து, உணர்ந்து, அவற்றை முழுமையாக ஆற்ற அரும்பாடுபடுதல் வேண்டும்.
  3. தம் வயதிற்கும், தொழிலுக்கும், நிலைமைக்கும் (அந்தஸ்துக்கும்) உரிய திறமைகள் குறைவாக இருந்தால், அவற்றைப் பூரணமாகப் பெற முயன்று வெற்றி பெற வேண்டும்.
  4. பொய்யின் திறமையால் கிடைக்கும் பலன்களை அறவே விலக்கி, தம் காரியங்களையும், கடமைகளையும் நேர்மையின் திறத்தால் பூர்த்தி செய்ய முழுமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  5. இன்றைய வாழ்வில் கடமையும், திறமையும் பூரணம் அடைந்தபின், மனச்சாட்சிக்குப் புறம்பான காரியம் ஒன்றுகூட இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  6. இன்று கடமை, திறமை, மனச்சாட்சி ஆகியன பூர்த்தியானது போல், நம் கடந்த கால வாழ்வை ஆதி முதல் கவனித்து, அது எவ்வாறிருந்தது என்று சிந்தித்து, சோதித்து, குறையுள்ள இடங்களை உணர்வால் நிறைவு செய்து, கடந்தகாலப் பாக்கியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  7. வீடு, சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தத்திற்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  8. பொதுவாக ஆத்மச் சமர்ப்பணத்தை முழுமையாகச் செய்தல் வேண்டும். எந்த நினைவு வருமுன்னும், எந்தச் செயலைச் செய்யும் முன்பும் அன்னையை நினைத்துக்கொள்ள வேண்டும்.

‘பணம்’ என்ற நோக்கில் பார்க்கும்பொழுது, அதைக் குறைவறப் பெற இன்னும் சிலவற்றைக் கைக்கொள்ள வேண்டும். பொருளுக்கு அடிப்படை உழைப்பு. ஆதலால், உழைப்புக்கு எதிரான சோம்பேறித்தனத்திற்கு வீட்டில் இடம் கொடுக்கக்கூடாது. செய்த செலவுக்கு விரவமான கணக்கை அன்றாடம் எழுத வேண்டும். எவ்வளவு சிறிய தொகையானாலும், நாம் பட்ட கடன்கள் எவ்வளவு நாள்பட்டதானாலும், அவற்றைக் குறையின்றித் தீர்க்க வேண்டும். தாழ்ந்த, மெதுவான குரலில் பேசுவதற்கும், செல்வத்திற்கும் தொடர்புள்ளதால், குரலைத் தாழ்த்தியும், சொற்களின் அளவைக் குறைத்தும் பேச வேண்டும். உடைந்த பொருள்கள், பழுதுபட்ட மிஷின்கள், செல்வநாயகியான லட்சுமி நம் இல்லத்திற்கு வரத் தடையானவை என்பதால், எவ்வளவு சிறிய பொருளானாலும் அதை உடனடியாகப் பழுது பார்த்துவிட வேண்டும்.

அன்னை நாகலிங்கப் பூவை ‘செல்வ வளம்’ (Prosperity flower) என்கின்றார். சிவப்பு நிற நாகலிங்கப் பூவை ‘செல்வ வளம்’ என்றும், வெண்மை நிற நாகலிங்கப் பூவை ‘தன்னலமற்ற செல்வ வளம்’ (Unselfish prosperity) என்றும் அன்னை குறிப்பிடுகின்றார்.

அன்னைக்கு நாகலிங்கப் பூவைச் சார்த்தி வணங்குதல் நலம். அது அருள் நலத்தையும், அளவற்ற பொருள் நலத்தையும் தரவல்லது.

*****



book | by Dr. Radut