Skip to Content

09 . பகுதி - 8

71. தனி மனிதனிடத்துள்ள உண்மை நிலை,

இந்தியனை ஆன்மீக பெருமகனாக உயர்த்தும்

சில நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு நேரத்தில் இந்தியா செல்வ வளமிக்க நாடாக இருந்தது. சமீபகாலத்தில் சுமார் 1800ஆம் ஆண்டு அளவில் இந்தியர்கள், மெக்காலேவின் (McCauley) வார்த்தைகளுக்கு ஒப்ப, பூரண உண்மைக்கும் பெயர் போனவர்களாக இருந்தார்கள். காலப்போக்கில் இந்தியா ஏழ்மைக்கும் பொய்மை நிலைக்கும் இறங்கிவிட்ட நேரத்தில் மேற்கத்திய நாடுகள் உண்மையை தனி மனிதன் அளவில் வலுவாக நிலைநாட்டியது. உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகள் மேலைநாட்டோரின் மேதாவித்தனத்தைவிட அவர்களின் விஞ்ஞானத்தை வலுப்படுத்த உதவியுள்ளன.

ஆன்மீக ஒளி இந்தியர்களின் உடலில் பரவியுள்ளதையும், ஆன்மீக அமைதி இந்திய சூழலில் நிரம்பியுள்ளதையும், இந்த இரு நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு பிரத்யட்சமாகத் தெரியும்.

வேத வாக்கின்படி உண்மை மீது உண்மையான ஆர்வப் பற்றுடையவர்கள் அறிவின் உச்சநிலைக்கு அல்லது சுபிட்சத்தின் மேன்மையான நிலைக்கு உயர்வடைவார்கள்.

சில உதாரணங்கள் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது. உண்மை என்ற உயர்ந்த பண்பு வேலையில் முறையான செயல்பாடாக வெளிப்படும் பொழுது பெரிய பலன்களை கொடுக்கின்றது என்பது கணினித் துறையிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெறும் நோபல் பரிசிலும் தெரியவருகிறது. அமர்த்தியாசென் வாங்கிய நோபல் பரிசு இதற்கு நிரூபணமாகும்.

  1. திட்டக்கமிஷன் தீட்டியப் பார்வை 2020 என்ற திட்டம் இந்த உண்மையை ஒரு அளவிற்கு அங்கீகரிக்கிறது.
  2. இந்தியா தன்னிடமுள்ள ஆன்மீக சக்தியை ஒரு தனிமனிதனின் உண்மையின் மூலமாக வெளிப்படுத்தினால், சீனிவாசராமானுஜம் போன்ற மேதைகள் தோன்றும் நிலை, விதிவிலக்காக இல்லாமல் சகஜமாகிவிடும்.
  3. வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பதற்குப் பதிலாக, கோடிஸ்வரர்கள் எங்கும் இல்லாதவாறு கூட்டங்கூட்டமாகத் தோன்றுவார்கள்.
  4. சுவாமி விவேகானந்தர் நமக்குக் கொடுத்த குரல், விழித்தெழு, எழுமின், முறைப்படுத்துவீர் என்பதாகும். அதை நாம் முழுவதுமாக நடைமுறைப்படுத்துவோமாக. 

*****

72. காலந்தவறாமை அபரிமிதமான சுபிட்சம்

ஆன்மா என்பது எல்லாவற்றிலும் உள்ளது. ஆத்மா மனிதனின் ஆன்மா. புத்தி கூர்மை, மனத்தின் ஆன்மா. உண்மை என்பது பேச்சு வெளிப்படுத்தும் ஆன்மா. திறமை என்பது வேலையின் ஆன்மா. இனிமை என்பது மனித உறவின் ஆன்மா. ஆன்மா இல்லாத வேலை இல்லை, மனிதனும் இல்லை. எந்தப் பொருளிலும் ஆன்மா இல்லாதது இல்லை. ஆன்மா தன்னை பலநிலைகளில் வெளிப்படுத்துகிறது.

திறமை என்பது வேலையின் ஆன்மாவின் ஆரம்பநிலை வெளிப்பாடாகும். இனிமையாக பழக உதவும் திறமை என்பது வேலையின் ஆன்மாவினுடைய அடுத்த உயர்ந்த வெளிப்பாடாகும். பிஸிக்கல் லெவலில் நடக்கும் வேலை ஒரு கருத்தை வெளிப்படுத்தும் பொழுது, ஆன்மாவின் உயர்ந்த நிலை வெளிப்படுகிறது. அறிவின் கருத்தை பிஸிக்கல் லெவலில் வெளிப்படுத்தும் வேலை அதே சமயத்தில் இனிமையையும் வெளிப்படுத்தினால் அது மேலும் உயர்ந்த ஆன்மீக வெளிப்பாடாகும். நேர்மை போன்ற பண்புகள் வேலையில் வெளிப்பட்டால் இன்னும் சிறப்பாகும். பண்புகள் ஆன்மீக திறமைகளாகும்.

காலம் என்பது "காலா" என்ற தெய்வமாகும். காலத்திற்கு கவனம் செலுத்தும் பொழுது, காலத்திற்குப் பின் மறைந்துள்ள ஆன்மா வெளிப்படுகிறது. வேலையில் நேரத்தை முறைப்படுத்துவது, காலத்தின் உயர்ந்த ஆன்மாவை வெளிப்படுத்துகிறது. ஒரு வேலையின் நேரம், மற்ற வேலையின் நேரத்தை மதிக்கும்போது, இணைந்து செயல்படுவதாகும்.

கம்பெனியில் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது உன்னுடைய கம்பெனியில், காலத்தின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது. ஒரு கம்பெனியில் காலந்தவறாமை எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது, அது கம்பெனியின் காலத்தின் மிக உயர்ந்த ஆன்மா வெளிப்படுதலாகும். ஒரு கம்பெனியில் சராசரியாக 6½ நாட்களில் செய்யும் வேலை காலந்தவறாமையை கடைபிடிக்கும் பொழுது அரை நாள் வேலையாக சுருங்குகிறது. இது காலத்தையும், பணத்தையும் சேமிப்பதாகும். இதனால் இங்கு 13 மடங்கு சேமிப்பு கிடைக்கிறது. எந்தக் கம்பெனியும் நேரந்தவறாமையை நன்றாகப் புரிந்து கொண்டு பொறுப்பை ஏற்று செயல்பட்டால், இலாபம் ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகரிக்கும். ஏனெனில் நேரம் அந்த அளவிற்கு மிச்சப்படுத்தப்படுகிறது.

  1. காலந்தவறாமை என்பது இலாபத்துடன் நேரடி தொடர்புடையது.
  2. காலந்தவறாமை ஒரு நலிந்த நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து இலாபத்திற்கு மாற்றும்.
  3. காலந்தவறாமை ஒரு சிறந்த ஒழுங்குமுறைப்படுத்தும் தன்மையுடையது.
  4. காலந்தவறாமை பழங்காலத்து மேல்நாட்டு அரசர்களின் பழக்கமாக இருந்தது என்று சொல்லப்பட்டது.
  5. நாம் இப்பொழுது காலந்தவறாமையை, தோல்வியற்ற வெற்றியின் சின்னமாகச் சொல்லலாம்.
  6. எதுவும் தோல்வியுறக்கூடியது. ஆனால் காலந்தவறாமை தோல்வியுறாது. 

*****

73. மனச்சோர்வு

சிலர் இயற்கையாகவே உற்சாகமின்றி மனச்சோர்வு உடையவர்களாக இருக்கிறார்கள். மற்றும் பலர் மனச்சோர்வை வளர்க்கும் சுபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாழ்வில் தோல்வியை சந்திக்கும் போதும், அல்லது தாங்கள் புறக்கணிக்கப்பட்டபோதும், மனச்சோர்வு ஏற்படுகிறது. வேறு சிலர், உற்சாகமுள்ளவர்களாக இருந்தாலும் வாழ்வில், திருப்புமுனை ஏற்படும்பொழுது மன சோர்விலிருந்து மீளமுடியாத நிலையை அடைகிறார்கள். வழக்கமாக அப்படிப்பட்டவர்கள் எல்லோரும், இது தவிர்க்க முடியாது என்று மனச்சோர்வுக்கு அடிமையாகி விடுகிறார்கள். சிலர் மருந்தை நாடுகிறார்கள். அது தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், மேலும் அது தீவிரமாகி மறுபடியும் வருவதைத் தவிர்க்க முடியாததாக மாற்றிவிடுகிறது.

ஒரு பொறியாளர் 31வது வயதில் மனச் சோர்வு உடையவராக இருந்ததை அவர் நண்பர் ஒருவர் கண்டார். அந்த மனச்சோர்வு அவருக்குப் பல வருடங்களாக இருந்து வந்தது. அவருடைய நண்பர், மனச்சோர்வை போக்குவதற்கு, அன்னையிடம் பிரார்த்தனை செய்து ஆன்மாவை அழைக்கும்படி யோசனை கூறினார். அவ்வாறு அந்த முறையை பின்பற்றியதும் மறுநாள், மனச்சோர்விலிருந்து விரைவில் மீளமுடியும் என்று உணர்ந்தார். அவருடைய நண்பர், மனச்சோர்வின் மூலக்காரணத்தையும் அதனுடைய பல நிலைகளைப்பற்றி அறிவுபூர்வமாக தெளிவாக விளக்கக் கூடியவரிடம் அழைத்துச் சென்றார்.

அந்தப் பொறியாளர், மனச்சோர்வின் பலதரப்பட்ட நிலைகளைப் பற்றிய விபரங்களை ஆர்வமுடன் கேட்டார். அவர் கூறிய அனைத்தும் தன்னுடைய உள் சிரமத்திற்கு பொருத்தமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி அடைந்தார். மனச்சோர்வின் தன்மையைப்பற்றி புரிந்து கொண்டார். அவர் மனச்சோர்விலிருந்து மீள்வதற்கு, ஒரு திடமான தீர்மானத்துடன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவரது நண்பர் இவரைப் பார்த்த போது இவருடைய முகம் பிரகாசமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் விசாரித்தார். பொறியாளரிடம் "எப்படி இருக்கிறீர்கள்? மனச்சோர்வு எந்த அளவில் உள்ளது?” என்று வினவினார். அதற்குப் பொறியாளர் "அது அன்றைய மறுநாளே விழித்தவுடன் என்னை விட்டு அகன்றுவிட்டது” என்றார். அந்த மனச்சோர்வு அடுத்த முப்பது வருஷங்களில் திரும்பவும் வரவே இல்லை.

மனச்சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆன்மாவை அழைக்கும் கருத்து ஒன்றை தெரிவித்ததோடு, அவருக்கு எளிதில் புரியும்படியாக பலவிதமான விளக்கங்கள் சொல்லப்பட்டன. ஆன்மீக நோக்கில் மனச் சோர்வு, நம்மை பீடிப்பது இல்லை. அதை நாம்தான் பற்றிக் கொள்கிறோம் என்பதாகும். பொறியாளர் எடுத்த திடமான முடிவினால், அது மீண்டும் வந்து நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

****

74. மௌனம் எதிரிகளையும் அவர்களது

சதி திட்டங்களையும் முறியடிக்கும்

எதிரிகளை தாக்குவதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தன்னுடைய முழுபலத்தையும் ஒன்று சேர்த்து எதிரிகளிடமிருந்து வரும் அடிக்கு திருப்பி பலமான பதிலடி கொடுத்தல். இது மனிதன், பிஸிக்கலாகவும், அறிவு ரீதியாகவும் செயல்படும் முறையாகும். மற்றொரு வழி, மனிதன் எந்த அஸ்திரங்களையும் நாடாமல், மௌனத்தைக் கடைப்பிடிப்பதாகும். மௌனத்தை அனுஷ்டிப்பது, அதிக கடினமானது என்றாலும், அது மிகவும் சக்தி வாய்ந்தது. நெருக்கடியான நேரத்தில், தன்மீது குறிவைக்கும் ஒவ்வொரு அடியும், தாக்கியவர் மீதே திரும்பிச் சென்று தாக்கும். அது மௌனத்தின் சக்தியாகும்.

அலுவலகங்கள் அநேக நேரங்களில் குடும்பங்கள் போலவும், நட்புரிமையுடையதாகவும், சகோதரத்தன்மை உள்ளதாகவும் இருக்கும். அது போட்டி, பொறாமை, கோள் சொல்லுதல், சதி செய்தல் போன்றவைகள் நிறைவாக நிகழும் இடமாகவும் இருக்கும். சில நேரங்களில் நல்லவரையும், களங்கமில்லாதவரையும், அப்பாவியையும், பாதிப்புக்குள்ளாக்கி அவருக்கு கேடுவிளைவிப்பார்கள். இப்படிப்பட்ட சதித்திட்டத்தின் சுழலில் சிக்கிக் கொண்டவர் கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கிறார். அவர் நல்ல வழியிலிருந்து பரஸ்பரம் நாசம் உண்டாக்கும் சண்டையிடும் தீய மனோபாவத்திற்கு ஆளாகிறார்.

அப்படிப்பட்ட நிறுவனம் ஒன்றில், புதியதாக வேலைக்கு வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய வேலைத் திறமையாலும், உலக விவகாரங்களைப் பற்றிய அறிவு முதிர்ச்சிப் பெற்றவராகவும் விளங்கியதால் அவர் திடீரென்று பிரபலமடைந்தார். இரண்டு மூத்த அலுவலர்கள், இவரோடு நண்பர்களாக இருப்பதுபோல் வெளியில் போலியாக நடித்துக் கொண்டு, அவருக்கு தீங்கிழைப்பதில் மறைமுகமாக, விரோதமான செயல்களில் ஈடுபட்டு, அவர் மீது 29 புகார் மனுக்களை ஜோடித்து, அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த அதிகாரி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத பலவீனமானவர்.

அந்த அதிகாரி புகார் மனுவைப்பற்றி விசாரிக்க, கூட்டத்தைக் கூட்டினார். பாதிக்கப்பட்டவர் தன் மனதுக்குள்ளே சென்று மௌனமாக இருக்கத் தீர்மானித்தார். அந்த அதிகாரி விவரிக்க முடியாத காரணத்தால் எளிதில் அமைதி இழந்தார். புகார் மனுவை அனுப்பியவர்கள், தாங்கள் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தோல்வி கண்டு, அது அவர்களுக்கே கெடுதலாக திருப்பித் தாக்கியது. சூழ்நிலை கடுமையாயிற்று. அதிகாரி கோபமுற்று புகார் கூறியவர்கள் மீது வெளிப்படையாகவே சீறி விழுந்தார். "இங்கு நான்தான் அதிகாரி. நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். என்னிடம் இது போன்ற புகார்களைக் கொண்டு வராதீர்கள்'' என்று கூறினார். அந்த இரண்டு மூத்த அலுவலர்களும் அதன் பிறகு எந்த புகாரையும் அதிகாரியிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை.

*****

75. மனிதனின் பர்சனாலிட்டி

சாதாரணமாக அன்றாட உரையாடலின் போது, பொதுவாக ஒருவரின் உடல் அமைப்பையும் அழகையும் குறிப்பிடும் வகையில், உயரமானவர், அழகானவர், வசீகரமானவர் என்ற சொல்லை உபயோகிக்கிறோம். பர்சனாலிட்டி என்ற சொல் ஒருவருடைய மனவலிமை, குணநலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிற உள்ளே உள்ள இயற்கையான பண்புகள், மற்றும் திறனைப் பற்றித்தான் குறிக்குமேயன்றி, வெளித்தோற்றமல்ல. வெளித் தோற்றத்தை விவரிக்க விரும்பினால் "இவர் நல்ல உடற்கட்டு கொண்டவர்" என்று சொல்லலாம். உடற்கட்டு என்பது வெளித்தோற்றத்தை மட்டும் குறிக்கிறது. ஆன்மா மனிதனுக்குள்ளே ஆழ்ந்த மையத்தில் உறைகிறது. அங்கிருந்து வரும் அழைப்பு அதிக சக்தி வாய்ந்தது.

பழக்கங்கள் என்பது வெளியில் தெரியும் நடத்தையைக் குறிக்கும். அது ஒருவர் தன் மனதில் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிவிக்காது. வெளிப்புற பழக்கங்கள் உள்ளே உள்ள உண்மையான குணங்களை பிரதிபலிப்பதே நடத்தையாகும். பழக்கங்கள் வெளியில் தெரியும். நல்ல நடத்தை உள்ளே தெரியும். இரண்டுமே மனிதனின் ஜீவனின் மேல்மட்டத்திலிருந்து வரக்கூடியவை. முக்கியமான பிரச்சனைகளைச் சந்திக்கும் பொழுது இவை இரண்டுமே உதவிக்கு வராது. பழக்கங்கள், மற்றும் நடத்தைகளுக்குக் கீழே முறைப்படுத்தப்பட்ட சுபாவம் உள்ளது. சுபாவமானது, வலிமை, திறமை, ஞாபக சக்தி, விடாமுயற்சி இவைகளை வெளிப்படுத்துகிறது. இவைகள் யாவும் பலநிலைகளில் பலவித தீவிரத்துடன் முறைப்படுத்தப்பட்டுள்ளன. சுபாவத்தைக் கடந்து மனிதனின் முறைப்படுத்தப்படாத சக்தி உள்ளது. அந்த சக்தி, சுபாவம் கைகொடுக்காதபோது, புதிய பிரச்சனைகளைச் சந்திக்கத் தயாராகுகிறது.

ஆன்மாவை அழைத்தல் என்பது மேற்கண்ட நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து அழைப்பதாகும். ஆழத்திலிருந்து வரும் அழைப்பு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் பழக்கம், முதல்நிலையாகும். சிந்திப்பது, அடுத்த நிலையான நடத்தையாகும். நமது பண்புகளைக் குறிக்கும் எண்ணங்களின் ஆழத்திலிருப்பது சுபாவமாகும். நாம் நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால், சுபாவத்தின் நிலைக்குச் சென்று ஆன்மாவை அழைக்க முடியும். அது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆன்மாவை அழைப்பதற்கு மனித இயல்பைக் கடந்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். மனிதன் தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனையை எதிர்கொள்ளும் பொழுது, சுபாவமும் கைவிட்ட நேரத்தில், அங்கே ஆன்மாவை அழைத்தால் நமக்குத் தெரிந்ததும் தெரியாததுமான பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

  1. நம்முள் இறங்கும் அமைதியின் சக்தி அழைப்பின் ஆழத்தைத் தெரிவிக்கிறது.
  2. யோகத்தில் அழைப்பை விடுப்பது மனிதன் இல்லை. விழித்துக் கொள்ளும் ஆன்மாதான் அழைப்பு விடுக்கிறது. 

*****

76. ஒரு பரிசோதனை - ஒரு உரையாடல்

இப்பரிசோதனைக்கான நிபந்தனைகள் நம்பிக்கையை ஆன்மாவிற்கு மாற்றுவது, அதிகபட்ச வேலைத்திறன் மற்றும் மௌன சக்தி என்று புரிந்து கொள்கிறேன்.

நம்பிக்கையை ஆன்மாவிற்கு மாற்றுவது என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நாம் மனதாலும் உணர்வாலும் செயல்படும் வழிகளில் நம் நம்பிக்கையை வைத்துள்ளோம். இந்த வழிகளின் மீது வைத்துள்ள நம்பிக்கை முழுவதுமாக ஆன்மாமீது திரும்ப வேண்டும். உதாரணமாக, உங்கள் உற்பத்திப் பொருளுக்குள்ள நற்பெயர்மீது நம்பிக்கை வைத்திருப்பீர்கள். உங்கள் பொருள் தரம் குறைந்ததாக இருந்தாலும், ஆன்மா அதையும் மீறி செயல்பட முடியும் என்று நம்ப வேண்டும்.

இது உண்மை என்பதை நான் பலமுறை என்னுடைய பொருட்களிலும் மற்றவர்களுடைய பொருட்களிலும் பார்த்திருக்கின்றேன். எப்பொழுதும் சிறந்த பொருளுக்கே பரிசு கிடைப்பது இல்லை. சில நேரங்களில் இரண்டாவது மூன்றாம் தரமுள்ள பொருள்கூட பரிசுகளை தட்டிச் செல்கின்றது. அது ஒரு அனுபவம் என்பதை நான் அறிவேன்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஆன்மாவின் செயல்பாட்டின் மீது, உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் உங்களைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எந்தவிதமான ஆராய்ச்சியையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், ஆன்மாமீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்பதாகும். அதுவே சிறந்தது. அது ஆன்மாமீது ஆன்மாவுக்காகவே வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையாகும்.

அந்த மாற்றம் நிகழும். ஆனால் நிலையானதாக இருக்காது. அந்த மாற்றம் விட்டு விட்டு நிகழும்.

நம்பிக்கை உள்ள போதுதான், நீங்கள் செயல்பட வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதவேண்டும். நிலையான நம்பிக்கையிருந்தால் அதிகபட்சப் பலன் கிடைக்கும்.

மாற்றம் விட்டு விட்டு நிகழ்ந்தாலும் நம்பிக்கையால் செயல்படும் பொழுது, குறைந்த பலனாக இருந்தாலும், அது இப்பொழுது கிடைக்கும் பலனைவிட, அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பலாம்.

உங்கள் விஷயத்தில் தற்பொழுது விற்பனை ஆறு முதல் ஏழு கோடிகளுக்கு இடையில் உள்ளது. கம்பெனிக்கு சமநிலை எட்டு கோடியில் வரும். பிறகு குறைந்தபட்ச எட்டு கோடி அதிகபட்சமாக 80 கோடியாகவும் இருக்கும்.

நீங்கள் நல்ல நேரம், எண் கணித சாஸ்திரம், வாஸ்த்து போன்றவைகளை மறுக்கிறீர்கள்.

இவைகள் எல்லாம் கர்மத்தின் பயனால் ஏற்பட்ட பலன்களே, என்பதால் ஜாதகத்தில் கண்டுள்ளபடி அப்பலன்களை அளிக்கும். ஆன்மா இவற்றையெல்லாம் கடந்து நிற்கும். விருப்பம் உங்களுடையது. இவைகளில் ஏதாவது ஒன்றின் மீது நம்பிக்கை இருக்கும் வரையில், நீங்கள் ஆன்மாவை அழைக்க முடியாது. இந்த ஆராய்ச்சி உங்களுக்குப் பயன்படாது.

*****

77. ஒரு ஆராய்ச்சி - முழுமையான முன்னேற்பாடுகள்

இப்பொழுது நீ உன் நிலையைக் கடந்து ஆன்மா மீது மாற்றம் நாடுபவராக உயர்ந்த நிலைக்கு வரத் தயாராகிவிட்டாய். அடுத்த கட்டம், வேலையில் பலதரப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள முன்னேற்பாடுகள் செய்வதாகும்.

நான் என் உள் அமைதியின் மூலம், என் நிலையைக் கடந்து ஆன்மாவை அழைக்கும் நிலைக்கும் மாறிவிட்டேன் என்பதை அறிவேன்.

மனம் பழைய சந்தேகங்களை நாடாமலும், கேள்விகளை எழுப்பாமல் இருப்பதும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருத்தலும், ஆன்மாவை அழைக்கும் அறிகுறிகளாகும்.

நான் ஏற்கனவே கூறியது போல் அமைதி வந்தும் போவதுமாக உள்ளது. அமைதி இருக்கும் பொழுது இந்த ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டுமென்று கூறுகிறீர்கள். அமைதி ஏன் விலகுகிறது?

நல்ல நேரம், உங்கள் பொருளுக்கு மார்க்கெட்டில் உள்ள பெயர் என்று இவற்றை நாடும் பொழுது, அமைதி விலகுகிறது. நீ அதிலிருந்து விலகி வரவேண்டும்.

நீங்கள் ஒருமுறை, முழுமையான ஏற்பாடு என்பது, நான் பழைய தவறுகளை செய்யாமல் இருத்தலும், காலந்தவறாமை, சுத்தம், மௌன உறுதி, முறைப்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதாகும் என்று கூறினீர்கள்.

ஒரு வேலையை சிறப்பாக முழுமையானதாக நிறைவேற்றுவதற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று கூறுகிறேன். அதுவே மிகச் சிறந்தது. குறைந்தபட்சமாக, உன்னுடைய உச்சகட்டத் திறமையை சிறிதளவும் விட்டுவிடாமல், வேலையில் வெளிப்படுத்த வேண்டும். இது இன்றியமையாததாகும்.

நான் என் வேலையை சிறு சிறு பகுதிகளாக, ஐந்து அல்லது பத்து பிரிவுகளாக பிரித்து, இந்த செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்துகிறேன்.

அது சிறந்த இலட்சியம். இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும் என்று யாராலும் கூற முடியாது.

என்னுடைய முந்தைய முயற்சிகளைவிட, அது சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் மீண்டும் கூறுகிறேன். இது நல்லது. ஆனால் உங்களுடைய சக்திகள் எல்லாம், செலவழிக்கப்பட வேண்டும். இந்த மனமாற்றத்தினாலும், முழுமையான முன்னேற்பாடுகளாலும், உன்னுடைய சூழலில் மாறுதல் ஏற்பட்டுள்ளதைக் காண்பீர்கள். வேண்டாத முரண்பாடான அறிகுறிகள் மறைந்து, உறுதியான நிச்சயமான பாஸிட்டிவ் சகுனங்கள் எழும். வேலையை நிறைவேற்றுமுன், அது முழுமையான உறுதியான உடன்பாடாக மாறவேண்டும். இப்பொழுது எஞ்சியிருப்பது வேலையை நிறைவேற்றுவது மட்டுமே.

*****

78. ஒரு ஆராய்ச்சி - மௌனமான செயல்பாடு

உன் மனநிலையை ஆன்மாவுக்கு மாற்றிக் கொண்ட பிறகு, விற்பனைக்காக எடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியில் இறங்கிவிட்ட நீ, இப்பொழுது மௌன சக்தியின் மூலமாக செயல்படத் தயாராகிவிட்டாய்.

விற்பனை நடக்கும் இடத்தில் நான் பேசக்கூடாது என்கிறீர்களா?

அப்படி இல்லை. பேசும் பொழுது, விலை, பேரம் பேசுதல், விலையில் தள்ளுபடி போன்ற விஷயங்களில், நீ முதலிலேயே அதைப் பற்றி பேசக்கூடாது என்கிறேன். ஏனெனில், அது உன்னுடைய முன்கூட்டிய எதிர்பார்ப்பைத் தெரிவித்துவிடும்.

அப்படியானால் நான் தகுதிக்கு மீறிய சலுகைகளை கேட்கக்கூடாது என்கிறீர்களா?

ஆம். அது மட்டுமல்ல. உன் மனம் அமைதி அடைந்து, தேவையானதற்கு மட்டும் பதில் சொல்வதாகவும், சந்தர்ப்பத்திற்கு தகுந்த பதில் மட்டும், சொல்லக்கூடியதாகவும், இருக்க வேண்டும்.

சில நேரங்களில் நியாயமற்ற முறையில் பேரம் நடக்கும் போது, அனுகூலமாக இல்லாத சூழ்நிலையில், நான் என் தேவையின் அவசியத்தை முன்னிட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

அப்படிப்பட்ட நிலைகளில் பலன் அதிகமாகவே ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆம், மிகவும் மெச்சத்தகுந்ததே. அதை நான் கவனிக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாகவே போகும். நல்லபடியாக, திறமையாக செயல்பட்ட பின்பு, எழுத்து மூலமாக உத்திரவுகள் வரும் வரை, மனம் அமைதியாக இருக்காது.

அது மிகவும் கடினமானதுதான்.

நம் விஷயம் கூடி வருவதற்கு முன்னால், நம் மனம் அதைப்பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல், மன உறுதியுடன் இருக்க வேண்டும். நமது இந்த முடிவு நமக்கு வேறு பல வேலைகளை கொண்டு வந்து அதில் மூழ்கச் செய்து நாம் சாதித்த நல்ல விற்பனையை மறக்க வைக்கும்.

ஆகவே மாற்றம், முழுமையான முன் ஏற்பாடுகள், மௌனத்தின் மூலம் செயல்படுவது ஆகியவை எல்லாம் எனக்கு நல்ல பலனை அளிக்குமல்லவா?

நான் ஏற்கனவே உனக்கு கூறியது போல், இந்த மூன்று நிலைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்தால், உன்னுடைய மாற்றம் நிலையற்றதாக விட்டு விட்டு நிகழ்ந்தாலும், குறைந்தபட்சப் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

நாம் அதிகபட்ச பலன்களை குறிவைத்து நாடுவோம். அதே சமயம் பொறுமையாகவும் இருப்போம்.

அதிகபட்ச பலன், ஒருவருடைய பர்சனாலிட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது.

*****

79. ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்ட

பரிசோதனையின் மூன்று நிலைகள்

ஒருவர் தன் வாழ்வில் ஆன்மாவை அழைக்கும் வழியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது, வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறுகிறது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் நிலை மாறி, தோல்வியற்ற வெற்றியைக் காணமுடியும். இந்த உயர்ந்த உண்மையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, நான் ஒரு பரிசோதனையை அடையாளமாக செய்து பார்க்கும்படி, கருத்துத் தெரிவித்தேன். இது நம்முடைய சாதாரண மனத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், நம்பும்படியாகவும் இருக்காது. நான் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவில் ஒரு தொழிலும் நசிந்து போகாது. அரசாங்கம் வேலைக்கு உத்திரவாதம் கொடுக்கும் பட்சத்தில், இந்தியா நடுத்தர வருமானம் உள்ள நாடாக மாறும். 2020 திட்டத்தின் குறிக்கோள், வெறும் கனவாக இருக்காது. அது குறிக்கோளைத் திட்டமிட்ட காலத்திற்குள்ளே சீக்கிரமாக அடைந்துவிடும். காலந்தவறாமை, அபரிமிதமான சுபிட்சத்தைத் தரும். ஆன்மா வெளிவரும் பொழுது, ஆன்மாவின் முன்னால் கர்மம் கரைந்துவிடும். இம்மாதம் நஷ்டத்தில் இருக்கும் கம்பெனி, அடுத்த மாதம் இலாபத்தை ஈட்டும். சுருங்கச் சொன்னால் முடியாதது என்பது எதுவும் முடியும் என்ற நிலை ஏற்படும்.

இந்தியன் மற்றவரைக்காட்டிலும், இதை அதிக திறமையுடன் செயலாற்றக் கூடியவன். ஏனென்றால் அவனது உடலில் ரிஷிகளின் ஒளி பரவியுள்ளது. ஒரு காலத்தில் அவன் முழுமையான மெய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான். இந்திய நாட்டில் ஜனநாயகப் பண்பின் வேர் ஊன்றியிருந்தது.

  1. இந்த ஆராய்ச்சியின் சக்தி, வாழ்விலிருந்து ஆன்மாவுக்கு மாறுவதிலும் இயற்கையிலிருந்து ஜீவியத்திற்கு மாறுவதிலும், மனத்திலிருந்து நம்பிக்கைக்கு மாறுவதிலும் அடங்கும்.
  2. இந்த சக்தியின் மகத்துவம், ஒருவருடைய திறமையின் சக்தியெல்லாம் தீர்ந்தவுடன் தெரியும்.
  3. பலனின் அளவு மௌனமாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், அமைதி கலந்த பொறுமையுடன் காத்திருப்பதில் உள்ளது. 

மேலே விவரிக்கப்பட்ட ஆன்மீகக் கருத்துக்களை, சாதாரண மொழியில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்படியாக சொல்லலாம். மற்றவர் அதிர்ஷ்டம் பெறவேண்டுமென்று ஒருவர் நெஞ்சம் நல்லெண்ணத்தால் நிரம்பி அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் பொழுது தானும் சந்தோஷப்படுகிறார் என்றால், அப்படிப்பட்டவரின் ஆன்மா உள்ளிருந்து விழித்துக் கொள்ளும். அவரை விட்டு அகலாது.

*****

80. ஆன்மாவுக்கு மாறுவதின் பல பரிமாணங்கள்

ஒரு வாசகர் தன்னுடைய விற்பனைத் தொழிலில் ஆன்மாவை அழைத்ததினால் அன்றே அவருக்கு விற்பனையில் நல்ல பலனைக் கொடுத்தது என்று எழுதியிருந்தார். இன்னொருவர் ஆன்மாவை அழைத்ததால், உள்ளுறை அமைதியையும், இனிமையையும் கொடுத்தது என்று தெரிவித்தார். இவைகள் லௌகீகத்திலும், ஆன்மீகத்திலும் ஆன்மாவை வெற்றிக்கரமாக அழைத்ததைக் குறிப்பதாகும். இன்னொரு வாசகர், ஆன்மாவை அழைக்கும் முறை தெரியாததால், இதை தன்னால் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். ஆன்ம அழைப்பு என்பது, நாம ஸ்மரணையா என்று கேட்டிருந்தார். நல்லதே நடக்கும் என்பவர்களால் அதை சுலபமாக பின்பற்ற முடியும். நம்பிக்கையற்றவருக்கு, தோல்வி மனப்பான்மையே குறுக்கே நிற்கும்.

சோதிடம் முதலானவைகள் போற்றத்தக்கது என்ற பரம்பரை பழக்கத்தை விடாமல் பற்றி நிற்பது, ஆன்மாவை அழைப்பதற்குத் தடையாகும். ஒருவர் சடங்குகளை விட்டுவிட பிரியப்பட்டாலும், அவர் வீட்டை ஒழுங்கற்றதாகவும் ஒட்டடை முதலானவை படிந்து அழுக்காவும் அசுத்தமாகவும் வைத்திருப்பார். ஒழுங்கீனமும் அழுக்கும் ஆன்மாவுக்கு தடைகளாகும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் என்றால் உயர்ந்த நிலையில் பரிசுத்தமாக வைத்திருப்பதாகும். ஒழுங்கு மிக மிக முக்கியம். வீட்டில் கூச்சலிடுவதும், சத்தமாக பேசுவதும் அறவே விலக்கப்பட வேண்டும். ஒருவர் மெதுவாக பேச வேண்டும்.

மனம் நல்ல நேரத்தை நினைக்காமல் இருக்க சம்மதித்தாலும், அது மனத்தின் ஆழத்தில் தவிர்க்கமுடியாத நிலையில் அதிலே நிலைத்து நிற்கும். ஆன்மா, சோதிடத்தை விட சக்தி வாய்ந்தது என்று அறிவது, மனம் ஆன்மாவுக்கு மாறுவதற்கு உதவிடும். மாற்றம், எந்தவிதமான சமரசத்தையும் ஏற்காது. ஏனெனில் அது சிறியதிலிருந்து பெரியது வெளிப்படுவதாகும். அடிக்கடி என்ன நிகழ்கிறது என்றால், மனம் மாற்றத்தை நாடுவதில் ஊசலாடிக் கொண்டே இருக்கும். நிலையாக நிலைத்து இருக்காது. ஆனால் தற்காலிக மாற்றத்திற்குக் கூட, ஆன்மா மனத்தின் தூய்மையை வேண்டுகிறது. உணர்ச்சிபூர்வமாகவும், மனதாலும் எல்லாவிதமான மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டுமென்று ஆன்மா எதிர்பார்க்கிறது.

ஆன்மா வாழ்க்கையைவிட பெரியது என்று ஏற்றுக் கொள்வது நமக்கு ஆன்மாவிற்கு மாறுவதற்கு உதவும். அந்த அறிவு நம்மை உயர்த்தவும் செய்யும்.

*****



book | by Dr. Radut